கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Tuesday, December 17, 2013

அரசியல் உரிமை மீட்கும் மாநாடு

கொங்கு நாடு வேட்டுவ கவுண்டர் மாநாடு



Monday, December 16, 2013

ஆரைப்பற்றை இது ஆரையம்பதி எனவும் அழைக்கப்படும்

.
தமிழ் ஈழத்தின் தெற்கிலும் இலங்கைத் தீவின் கிழக்கிலுமாய் அமைந்துள்ள ஒரு ரோசமும் வீரமும் விளைந்த தொன்மையான கிராமந்தான் ஆரையம்பதி. 

தோன்மை வரலாற்றுடன் தொடர்புடையதினால் வேடர் வரலாறும் கிராமத்தின் அயலிலே பிணைந்துள்ளது. இலங்கையின் ஆதி குடிகள் இயக்கரும் நாகரும் என்று மகாவம்சம் கூற விழைந்த போதிலும் ஆய்வாழர்கள் இவர்களை நாகரிகம் மிக்கத் திராவிட இன மக்களாக இனம்காணுகிறார்கள். வேடர்களை விலக்கப்பட்ட இனமாக மகாவம்சம் சித்தரிக்க முனைந்த போதிலும் இலங்கையின் ஆதி குடிகளாக செழுமை சேர்த்தவர்கள் வேடர்கள். தமிழ்க் கடவுளான முருகன் குறவள்ளியை மணம் புரிந்தது வேடுவ சாதியாரின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதாக அமைகிறது.

முருகனுக்கு கோயில் எழுப்பி அறுபடை வீடுகண்டு தமிழகத்தின் பக்தியும் தமிழும் செழித்தன. இதே மரபைப் பின்பற்றி கிழக்கிலங்கையிலும் முருகனின் அறுபடை வீடுகளாக - ஆறு ஸ்தலங்கள் பாராட்டுப் பெறுகின்றன. வடக்கே வெருகல் கங்கையின் கரையில் எழுந்தருளி இருக்கும் சித்திரவேலாயுதனார் கோயில்;;; சித்தாண்டி சித்திரவேலாயுதனார் கோயில்;;; கோயில் போரதீவு சித்திரவேலாயுதனார் கோயில்;;; மண்டூர் முருகன் கோயில்; உகந்தை முருகன் கோயில்; திருக்கோவில் சித்திரவேலாயுதனார் கோயில் ஆகிய ஆறுமே அவை. கதிர்காமத்தைப் போன்றே மண்டுPர்; முதலிய முருகன் கோயில் திருவிழாக்களிலே வேடுவக் கன்னிப் பெண்கள் கலந்து கொள்வதும் வேடர் பூசை வேலன் வெறியாட்டம் என்பன நிகழ்வதும் வேடர்களின் தொன்மையையும் தமிழர்களுடனான பக்தி உறவையும் நிலைநாட்டும். புலிஞன் மஞ்ஞன் காத்தான் காங்கேயன் ஆகியன வேடுவப் பெயர்கள். ஆரையம்பதியின் அயலிலே அமைந்துள்ள ஊர்கள் பலவும் இப்பெயர்களினால் இன்றும் வழங்கப் பெறுகின்றன. அவ் ஊர்கள் அவ்வப்பெயர் கொண்ட வேடுவ அரசனின் பெயரால் நிலைத்துள்ளன என்பதை சுவாமி விபுலானந்தரும் ஏற்றுக் கொண்டுள்ளார். ஆரைப்பற்றைக்குப் படுவான் கரையில் அமைந்துள்ளது வேடன்கரை. அறுபடை வீடுகளுள் ஒன்றாக எண்ணப்படாவிட்டாலும் ஆரைப்பற்றைக்கு அணி சேர்ப்பது அங்கு எழுந்தருளியுள்ள முருகன் கோயில்.

கிழக்கிலங்கையின் தலைநகராக விளங்கும் மட்டக்களப்பிலிருந்து தென்திசையில் நான்கு மைல் தூரத்தில் அமைந்துள்ளது ஆரையம்பதி. இதன் எல்லைகளாக வடக்கில் காத்தான்குடியும் கிழக்கில் வங்காள விரிகுடாக் கடலும் தெற்கில் ஜந்தாம்கட்டை – மண்முனையும் தென்கிழக்கில் பாலமுனையும் தென் மேற்கில் மாவிலங்கைத் துறை- காங்கேயனோடையும் மேற்கில் புகழ் பூத்த தேனாறாம் மட்டக்களப்பு வாவியும் அரண்செய்ய இவற்றுக்கிடையில் மணற்பாங்கான தாழ்ந்த சமவெளியாக ஆரையம்பதி அமைந்துள்ளது. ஆதில் மா பலா வாழை தென்னை கமுகு ஆல் அரசு வேம்பு வம்மி (கடம்பு) தேத்தா ஆகிய மரச்சோலைகளுக்கிடையே இன்றும் ஒரு கவிதையாகவே ஆரைப்பற்றை காட்சியளிக்கிறது…

குல ஒற்றுமைக்கும் நட்புறவுக்கும் சாட்சி சொல்வதைப் போல குருகுலத்தோர் தெரு வேளாளர் தெரு சாண்டார் (பணிக்கர்) தெரு செங்குந்தர் தெரு வண்ணார் தெரு பறையர் (சாம்பான்) தெரு பொற்கொல்லர் தெரு ஆகிய குலப் பெயர்கள் கொண்டழைக்கப்படும் தெருக்கள் அணிசெய்கின்றன. அத்துடன் அலையன் குளம் ஆனைக் குளம வண்ணான் குளம; வம்மிக் கேணி தோணா பால் வாத்த ஓடை ஆகியன எமது ஊருக்கு நீர்வளம் சேர்க்கின்றன. அக்காலத்தில் வீடுகளில் கொட்டுக் கிணறுகள் இருந்தன. தேத்தா மரத்தின் நடுப் பகுதியைத் தோண்டியெடுத்த பின்னர் குழல்போன்ற மரக்கொட்டினை நிலத்தில் பதிப்பார்கள் கிணற்றைப் பாதுகாக்கும் கட்டுமானம் இந்தக் ‘கொட்டுக்குத்தான்’ இருக்கும்.

ஆரைப்பற்றை என்ற பெயர் பற்றியும் பலவாறு வழங்குவர். ஆரை+பற்றை ஸ்ரீ ஆரைப்பற்றை. ஆரை என்பது நான்கு இலைகளைக் கொண்ட ஒரு செடி. இப்பகுதியில் இச்செடி பற்றை பற்றையாக வளர்வதால் ஆரைப்பற்றை என தாவரவியல் சார்ந்து தமிழ் மரபு பேணி இப்பெயர் ஏற்படலாயிற்று என்பார் ஒரு சாரார். ஆரை என்பது நீரோடையைக் குறிக்கும் என்றும் நீரோடைகள் இங்கு நிறையக் காணப்பட்டதால் இப்பெயர் வந்ததாக இன்னொரு சாரார் கூறுவர். கம்பருக்கும் ஒளவையாருக்கும் வித்துவப் போட்டி நிலைத்ததாக இங்கு கதையுண்டு. அவ்விரு புலவர் மேதைகளும் வித்துவச் செருக்கைக் காட்டுவதற்கு இந்த ஆரைச் செடியை துணைக்கு அழைப்பார்களாம் ! ஒரு சந்தர்ப்பத்தில் இருவருக்கும் நடந்த போட்டியின் உச்சக்கட்டத்தில் கம்பர் ஏதோ சொல்ல, அதற்கு ஒளவை “ஆரையடா சொன்னாயடா” என்று சிலேடையில் பதிலடி கொடுத்தாராம்:

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
முட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேர்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயடா

ஆரைப்பற்றை என்ற பெயரினை தற்கால இளைஞர்கள் நாகரிகமாக ஆரையம்பதியாக அழைக்கத் துவங்கினரெனச் சிலர் தவறாகக் கருதுகிறார்கள். ஆரைப்பற்றையையும் காத்தான்குடியையும் எல்லைவகுத்துச் செல்வது எல்லை வீதி. இந்த எல்லை வீதியிலே தமிழ் அடையாளம் பேண 1907 ஆம் ஆண்டு கட்டப்பெற்ற திருநீலகண்டப் பிள்ளையார் கோயிலின் மணித் தூணிலும் 1911 ஆம் ஆண்டு விநாயகப் பெருமான்மீது பாடப்பட்ட பதிகத்திலும், ஆரையம்பதி எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆக ஆரையம்பதி என்ற பெயரும் பல தலைமுறைகளாகவே நிலைத்து வந்துள்ளது என்பது புலனாகும். ஆரையம்பதியில் மக்கள் குடியேறிய வரலாறு ‘மட்டக்களப்பு மாண்மிய’த்தில் பதிவாகியுள்ளது. இந்நூலே யாழ்பாண வரலாறு சொல்லும் ‘யாழ்ப்பாண வைபவ மாலை’ போல மட்டக்களப்பின் வரலாற்றைச் சொல்லும் தொன்மையான நூலாகும். ஆதில் காணும் வரலாறு வருமாறு:

குலசேனன் என்கிற கலிங்க தேசத்தான் மகள் உலகநாச்சி என்பாள். இவள் தன் சகோதரன் உலகநாதனுடன் மட்டக்களப்புக்கு வந்தாள். வரும்பொழுது புத்தபிரானுடைய ‘தசனம்’ கைலைமலையில் பெறப்பட்ட ஸ்படிகலிங்கம் ஆகிய இரண்டு புனித சின்னங்களைக் கொண்டு வந்தாள். அப்பொழுது இலங்கையை மேகவண்ணன் என்கிற அரசன் அரசாண்டதாகச் சொல்லப்படுகிறது. அவ்வரசனிடம் உலகநாச்சி புத்த தசனத்தை அன்பளிப்புச் செய்தாள். ஆதனால் மகிழ்ந்த அரசன் அவள் விருப்பப்படி “மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு காட்டுப் பிரதேசத்தை” தானமாக வழங்கும்படி மட்டக்களப்புப் பகுதியை அப்பொழுது ஆண்ட தன் நண்பனான குணசிங்கனை கேட்டுக் கொண்டார் என்பர். இந்த குணசிங்கனின் காலம்
உலகுள்ளோர் புகழ்ந்து வாழ்த்த
உற்றவர் விழுந்து போற்றத்
தலைவனாய் எழுந்து மட்டக்
களப்பில் இருந்த காலம்
கலைவளர் கலியுகத்து

மூவாயிரத்து ஐந்நூறு கடந்த காலம்
புலவர்கள் பாடச் செங்கோல்
ஓச்சினான் புரவலன் குணசிங்கன்

என மட்டக்களப்பு மான்மியம் வரையறை செய்கிறது. மேகவண்ணனின் விருப்பத்திற்கு இணங்க குணசிங்கன் உலகநாச்சிக்கு கையளித்த பிரதேசமே மண்முனையாகும். இன்றும் மட்டக்களப்பினை அண்டிய நிர்வாக அலகுகள் மண்முனையை மையப்படுத்தியே வகுக்கப்பட்டுள்ளன. காட்டைச் செப்பனிட்டு கலிங்கத்திலிருந்து பல குடும்பங்களை வரவழைத்து அதில் குடியேற்றி அப்பகுதியிலே சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து சிகரத்துடன் கூடிய அழகிய கோயிலும் கட்டி குளமும் கட்டி குளமும் வெட்டுவித்தாள். இந்த இடம் ‘சிகரம்’ என்றும் ‘கோயில்குளம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. இவ்வுலகநாச்சி குணசிங்கனின் சகோதரனான கிரசரன் என்பவனை மணந்து கனகசேனன் வள்ளி என இரண்டு மக்களைப் பெற்று வாழ்ந்து வந்தாள். தோடர்ந்து இந்தியாவிலிருந்து உலகநாச்சியின் அழைப்பின் பேரில் வந்தோர் வாவிக்குப் படுவான்கரையில் அமைந்த காணிகளிலும் குடியேறி விவசாய வாழ்க்கையை மேற்கொண்டனர். அவர்கள் தமது வழிபாட்டுக்காக கொக்கட்டிச்சோலையில் தான்தோன்றியீசுவரர் ஆலயத்தை நிறுவினர். இந்தக் கோயிலின் சிறப்பு தேரோட்டமாகும். பெரிய தேர் சித்திரைத் தேர் ஆகிய இத் தேர்கள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டதாகக் கூறுவர். இந்தக் கோயிலின் தேர்த்திருவிழாவுடன் ஆரையம்பதி ஸ்ரீ முருகன் கோயிலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த உறவு வரலாற்றுக் காலம் முதல் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அமைதியாகவும் இயற்கையின் அருட்கொடையால் கிடைத்த தொழில்களையும் சுகித்து வாழ்ந்த இம்மக்களுடைய வாழ்க்கையிலே போர்த்துக்கேயரின் வருகை மாறுதல்களை நிகழ்த்துவதாயிற்று. 1505 ஆம் ஆண்டில் புயல் நிமித்தம் காலியில் கால் வைத்த போர்த்துக்கேயர் கோட்டை அரசுடன் தொடர்பு வைக்கலாயினர். கோட்டை ராஜ்யம் அவர்கள் கைக்கு வந்ததும் இலங்கையின் ஏனைய பகுதிகளையும் தமது ஆட்ச்சிக்கு உட்படுத்த முனைந்தனர். யாழ்ப்பாண ராஜ்ய வீழ்ச்சிக்குப் பின்னர் கிழக்கில் இருந்த தமிழ் பிரதேசங்களையும் தமது ஆட்சிக்கு உட்படுத்துவதில் தீவிரம் காட்டினர். போர்த்துக்கீசர் தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களில் தாம் சார்ந்த கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதற்காக இந்துக் கோயில்களை இடிக்கலாயினர். இவ்வாறுதான் உலகநாச்சியார் காலத்தில் கோயில்க்குளத்தில் கட்டப்பட்டிருந்த காசிலிங்கேசுவரர் போத்துக்கீசரால் கி.பி 1627 இல் உடைத்து சிதைக்கப்படலாயிற்று. கோயில்குளம் தன் பொலிவை இழந்தது. அங்கு வாழ்ந்து வந்த மக்கள் வட திசையில் புலம் பெயர்ந்து தற்கால ஆரைப்பற்றை ஊரை நிறுவினர். போர்த்துக்கீசரால் சிதைக்கப்பட்ட ஆலயத்தில் இருந்த நிலைகள் படிக்கற்கள் கருங்கல் தூண்கள் ஆகியவற்றை கொண்டுவந்து தமது புதிய குடியிருப்பில் முருகன் கோயில் ஒன்றைக் கட்டினர். இதுவே இன்றும் ‘முருகன் கோயில்’ என்றும் ‘கந்தசாமி கோயில்’ என்றும் ஆரையம்பதி மக்களால் பாராட்டப்படுகிறது.

இக்கோயில் ஆரம்பத்தில் பிள்ளையார் கோயிலாகவே இருந்ததென்றும் காலப்போக்கில் அது முருகன் கோயிலாக மாறியதென்றும் வரலாறு உண்டு. இச்சந்தர்ப்பத்தில் மூர்த்திகள் மாறிய வரலாறு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரத்தில் நடந்தமையும் ஒப்புநோக்கிப் பார்க்கத் தக்கது. அமிர்தகழியில் ஆரம்பத்தில் மாமாங்கேஸ்வரர் கோயிலில் ஈஸ்வரரே மூர்த்தியாக அமைக்கப்பட்டது என்றும் பின்னர் அது மாமாங்கப் பிள்ளையார் கோயிலாக மாறிற்று என்றும் கூறுவர்.

ஆரைப்பற்றையிலே கந்தசாமி கோயிலைத்தவிர பரம நைனார் ஆலயம் திருநீலகண்டப் பிள்ளையார் ஆலயம் எள்ளுச்சேனைப் பிள்ளையார் கோயில் பேச்சிஅம்மன் ஆலயம் காளிகோயில்கள் சிவன்கோயில் கண்ணகி அம்மன் கோயில் மாரியம்மன் கோயில் ஆதிவைரவர் கோயில் ஆகிய பல கோயில்கள் வழிபாட்டுக்கு உண்டு. ஆரையம்பதியை நான்கு திசைகளிலிருந்தும் வரக் கூடிய கெட்ட ஆவிகளிலிருந்தும் பார்வைகளிலிருந்தும் பாதுகாக்கும் முகமாக வடக்கிலும் மேற்கிலும் பரம நைனார் கோயில்களும் கிழக்கில் பத்திரகாளி கோயிலும் தெற்கில் ஆதி வைரவர் கோயிலும் காவல் தெய்வங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக சொல்லுகின்றனர்.

மட்டக்களப்புப் பகுதியிலே வேளாண்மைச் செய்கை சித்திரை மாதம் வரை நீடிக்கும். அதனைத் தொடர்ந்து வைகாசி ஆனி மாதங்களில் கண்ணகி மாரியம்மன் பேச்சியம்மன் சடங்குகள் நடைபெறும். அம்மன் கோயில் சடங்கு காலங்களில் ஊருக்குள் மச்சம் மாமிசம் உண்பது தவிர்க்கப்படும். ஊர் முழுவதும் தூய்மையும் பக்தி உணர்வும் கொண்டுவிடும். வேப்பிலை வாசமும் கமுகம்பூ தாமரை ஆகிய பூக்களின் வாசமும் கற்பூர சாம்பிராணி வாசமும் ஊரை ஆக்கிரமித்து விடும். சிலம்பு உடுக்கை பறை (தவில்) ஓசையிலும் ஊரே ஒரு தெய்வீக கோலம் கொண்டு விடும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே வெருகல்கங்கை முதல் தெற்கே குமுண ஆறுவரை பரந்து கிடந்தது. சுதந்திரத்திற்கு பிற்பட்ட மாறுபட்ட அரசியல் காரணங்களினால் 1963 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டம் ஒன்று தனியாக அதிலிருந்து கல்லியெடுக்கப்பட்டது. ஆதற்கு முன்னிருந்த நிலையை பிராமிக் கல்வெட்டுகள் ஐந்து நிர்வாகப் பற்றுக்களைக் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பினைக் குறிக்கிறன. அவையாவன (1)கோரளைப் பற்று (வாழைச்சேனை ஏறாவூர்) 2.விந்தனைப் பற்று (மகாஓயா) 3.மண்முனைப் பற்று (மட்டக்களப்பும் பிரதேசங்களும்) 4.வேகம் பற்று (இங்கினியாகல போன்றன) சம்மாந்துறை பற்று (இதனுடன் அக்கரைப் பற்றும் பானமைபற்றும் இணைத்துச் சொல்லப்படும்.) 
மட்டக்களப்பு பிரதேசத்தில் தமிழரும் முஸ்லிம்களும் அடுத்தடுத்த பிரதேசங்களில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். குழல் புட்டு அவிக்கும் பொழுது மாவும் இடையிடையே தேங்காய்ப் பூவும் இட்டு அவிக்கப்படுவது போல இவை அழகாக அமைந்துள்ளன என்று அக்காலப் பேச்சாளர்கள் குறிப்பிடுவது வழக்கம். இத்தகைய அமைதியை சுதந்திரத்திற்குப் பிற்பட்ட அரசியல் வாதிகள் குலைத்து விட்டமை நெஞ்சுக்கு வருத்தமாக உள்ளது.

ஆனால் ஆரைப்பற்றை முஸ்லீம் கிராமங்கள் சூழ்ந்த பழம்பெரும் தமிழ்க் கிராமமாக செழித்து வளர்ந்துள்ளது. ஆரையம்பதியைச் சுற்றி காத்தான்குடி காங்கேயன் ஓடை பாலமுனை ஒல்லிக்குளம் ஆகிய முஸ்லீம்கள் வாழும் கிராமங்கள் உள்ளன. தமிழ் கிராமத்தின் மணியோசை முஸ்லீம் கிராமங்களிலும் முஸ்லீம் கிராமங்களிலிருந்து எழும் புனித தொழுகை ஒலி தமிழ்க் கிராமங்களிலும் கேட்பது தொன்றுதொட்டு நிலவி வந்துள்ள தெய்வ பந்தமாகும்.

ஆரைப்பற்றையின் மேற்கு எல்லையாக இருக்கும் வாவி வடக்குத் தெற்காக முப்பத்திரெண்டு மைல் நீளத்திற்கு பரந்து கிடக்கின்றது. இந்த வாவி மீன் பிடிப்போருக்கு ஜீவனம் நடத்தும் வளத்தினை அளித்து வருகின்றது. மீன்பிடிப்போர், இறால்வலை வீசுவோர் நண்டுக் கூடு போடுவோர்… வாவியில் நண்டுகளுக்கு மட்டுமன்றி ஓரா மீனுக்கும் செத்தல் மீனுக்கும் கூடு வைப்பதும் உண்டு. சில காலங்களில் வாவிக் கரையில் அத்தாங்கின் மூலம் இறால் பிடிப்பதும் உண்டு. தென்னோலை மடித்து இறால் கட்டுவதும் உண்டு. மட்றால் பிடிக்கும் காலத்தில் இது பம்பல். எங்கள் பகுதி மக்களுக்கு அது வாவியல்ல தாய்ப்பால் !

எங்கள் பகுதியில் உள்ள தேசிய கனிகளுள் கிண்ணம்பழம் முக்கியமானது. வேறு தேசிய கனிகளும் உள. கிழக்குப்புறமாக காட்டுரோட்டை தாண்டி கால் வைத்தால் குணுக்கு குணுக்கான பற்றைக்காடுகள். எங்கள் ஊரின் தேசியக் கனித்தோட்டம் இதுதான்! நூவல் முந்திரி ஈச்சை கறுக்கா காரல் துவரை மருங்கை சேனை கிளா சிமிட்டி முதலிய தேசிய கனிகள் காலத்துக்குக் காலம் பழுத்துக் குலுங்கும். கனிகளென்றில்லை எங்கழூரில் சில தேசிய மலர்களும் உண்டு. கார்த்திகைப்பூ கணங்காப்பூ ( செண்பக மலர் ) தாமரை திருக்கொன்றை வம்மி கோடைப்பூ (இது தோணாவில் வளரும் நீர்ப்பூ. பொங்கல் காலத்தில் இதற்கு பலத்த கிராக்கி). இவற்றுள் கனங்காவும் வம்மியும் பூக்கும் காலத்தில் ஊர் முழுவதும் இந்த மலர்களின் வாசனையில் நிரம்பி இருக்கும். ஆரையம்பதியின் தாவர இயலை குறிப்பிட்ட நான் இம்மண்ணுக்குரிய கீரை வகைகளையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். குமிட்டி நத்தைச் சூரி திராய் குறிஞ்சா பால் குறிஞ்சா முல்லை முசுட்டை முயல்பாஞ்சான் வாதமடக்கி மொசுமொசுக்கை காரல் கானாந்தி எனப் பட்டியல் நீளும். இவற்றைச் சுவையாக ஆக்குவதற்கு எங்கள் கிராமத்திற்கென்றே தனிப் பாக முறைகள் இருந்ததாக ஆரையம்பதி தாய்க்குலம் பெருமைப்படுவதை நான் அறிவேன்.

ஆரையம்பதி மக்களின் தொழி;ல் பன்முகப்பட்டது. தெருப் பெயர்களே சில குலத் தொழில்களைச் சொல்லும். அக்கரையில் - படுவான்கரையில் - களனி நிலம் கண்டு விவசாயம் செய்வோர் உண்டு. மீன்பிடித்தொழில் தும்புத்தொழில் - கயிறு திரித்தல் தும்பத்தடி கட்டுதல் வலை பின்னுதல் தோணி வெட்டுதல் வைத்தியம் சோதிடம் பிரம்புத் தொழில் என இப்பட்டியல் நீளமானது. ஆங்கிலக் கல்வியின் வரவாலே பயன்பெற்று உயர் அரசாங்க உத்தியோகங்களிலே அமர்ந்தும் எம் பிறந்த மண்ணுக்குப் பலரும் பெருமை சேர்க்கிறார்கள்.

எழுவானில் வங்காள விரிகுடாவும் படுவானில் மட்டக்களப்பு வாவியும் தழுவும் பிரதேசம் ஆரையம்பதி என்பது மீண்டும் அழுத்தம் பெறுவதை விரும்புவேன். கடலிலும் உப்பு நீர் வாவியிலும் உப்பு நீர். இதனாற் போலும் உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கும் நன்றி உணர்வு அம்மண்ணின் மைந்தருக்கு உண்டு அத்துடன் அவர்கள் ரோஷம் பாராட்டு மும் மானவீரர்களாகவும் வாழ்கிறார்கள்.

நன்றி – நவம் ஆசிரியர்

Saturday, December 14, 2013

வேடனின் பெருமை


ஆசார்யாளின் ப்ரதான சிஷ்யர்களில் ஒருவராக இருக்கப்பட்ட பத்மபாதாசாரியாள் ஆசார்யாள் காசிவாஸம் செய்துகொண்டு இருந்தபோதே அவரிடம் சிஷ்யராக வந்து சேர்ந்தார். ஆசார்யாளுக்குப் பதினாறு வயஸ்கூடப் பூர்த்தியாகாத ஸமயம்.
பத்மபாதருக்கு பூர்வாச்ரமத்தில் ஸநந்தனர் என்று பேர். அவர் சோழ தேசத்தைச் சேர்ந்தவர். அவரைப் பற்றி ஒரு கதை சொல்கிறேன். தம் ஊரில் இருந்த காலத்தில் அவருக்கு ஒரு பெரியவர் நரஸிம்ஹ மந்த்ரோபதேசம் பண்ணினார். நன்றாக ஜபம் பண்ணி ஸித்தி பெற்று நரஸிம்ஹ மூர்த்தியை தரிக்கணுமென்று அவருக்கு ஆசை உண்டாயிற்று. அகத்திலிருந்து புறப்பட்டார். ஏகாந்தமாக ஒரு மலையின் உச்சியிலிருந்த காட்டுக்குப் போய் தபஸ் பண்ண உட்கார்ந்தார்.
ஒரு வேடன் வந்தான். 'ஐயர் ஏன், பாவம், இங்கே வந்திருக்கிறார்?'என்று நினைத்தான். அவரிடம் வந்து, "எங்கள் மாதிரி பலசாலியான வேடர்கள் இங்கே வேட்டையாடிப் பிழைப்போம். பூஞ்சை ப்ராம்ணன் உனக்கு இங்கே எதுவும் கிடைக்காமல் கஷ்டப்படுவாய். எதுக்கு வந்தே?"என்று கேட்டான்.
நரஸிம்ஹர், தபஸ் என்றெல்லாம் சொன்னால் அவனுக்கு புரியாதென்று அவர், "இடுப்புக்குக் கீழே மநுஷ்யன் மாதிரியும் மேலே சிங்கம் மாதிரியும் ஒரு ப்ராணி உண்டு. எனக்கு அது தேவைப்படுகிறது. இந்தக் காட்டில் அது இருக்கிறதென்று கேள்வி. அதற்காகத்தான் வந்தேன்"என்றார்.
"நிஜமாகச் சொல்லு ஐயரே, அப்படியரு மிருகம் இங்கே இருக்கா?இந்தக் காட்டிலே நான் பார்க்காத இடமோ, எனக்குத் தெரியாத மிருகமோ ஒண்ணும் கிடையாது. வேடர்களிலேயே என்னைப்போல இன்னொருத்தன் கிடையாது. ஆனால் c சொன்ன மாதிரி மிருகம் என் கண்களில் பட்டதே இல்லை. c சொல்வது மட்டும் நிஜமென்பாயானால் அதை நான் பார்க்காமல் விடுவதில்லை. நானே அதைப் பிடித்துக்கொண்டு வந்து கொடுக்கிறேன. c கஷ்ப்பட வேண்டாம் ஆனால் நிஜமாகவே அப்படி உண்டா, சொல்லு"என்றான்.
காட்டு ஜனங்கள் முரடு, நாம் ரொம்ப 'நைஸ்'என்று தோன்றினாலும், அவர்களுடைய எளிமை, உழைப்பு, தைர்யம், ஒத்தாசைக் குணம் எதுவும் நமக்கு வராது;நம்முடைய பித்தலாட்டங்கள் அவர்களுக்கு வராது!
நரஸிம்ஹ மூர்த்தியை இவன் பிடித்து வந்து கொடுப்பதாகச் சொல்கிறானே என்று அவர் சிரித்தார்.
"ஏன் சிரிக்கிறாய்?வேடிக்கைக்குச் சொன்னாயா?"என்று அவன் கேட்டான்.
தம்மை ஏகாந்தமாக விட்டு அவன் நகர்ந்தால் போதுமென்று அவர், "நிஜமாக அது இங்கே இருக்கிறது. ஆனால் உன்னால் பார்க்கமுடியாது. உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ"என்றார்.
"அப்படியா சொன்னே?நாளைக்கு ஸாயங்காலத்துக்குள் அதை நான் பிடித்துக்கொண்டு வருகிறேனா, இல்லையா பாரு!அது மட்டும் முடியா விட்டால் இந்த உயிரை விட்டுவிடுவேன். இந்தக் காட்டுக்கே பெரிய வேடன் என்று இருந்து கொண்டு உன் மாதிரி ஐயர் கஷ்டம் பார்க்காமல் எங்கள் இடத்துக்கு வந்திருக்கும்போது உதவி பண்ண லாயக்கில்லையென்றால் நான் உசிரை வைத்துக் கொண்டு என்ன ப்ரயோஜனம்?"என்று உசந்த மனஸோடு சொன்னான்.
"ஸரி, உன்னால் முடியாது என்று நான் சொல்லும் போது, முடியும் என்று c புறப்பட்டால் நான் என்ன பண்ணுவது?உன் இஷ்டம்!"என்று அவர் சும்மாயிருந்து விட்டார்.
வேடன் நரஸிம்மத்தைத் தேடிக்கொண்டு புறப்பட்டான். அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட அரை மநுஷ - அரை சிங்க ரூபத்தை விடாமல் நினைவில் வைத்துக் கொண்டு காடு பூரா தேடுதேடு என்று தேடினான். ஆஹார நினைவே இல்லாமல், களைப்பு பார்க்கமால் ஒரே குறியாய்த் தேடினான். அன்றைக்கு முழுதும் போய் விட்டது. மிருகம் அகப்படவில்லை. அவனும் விடவில்லை. மறுநாளும் தேடினான். ஸாயங்கால வேளையும் வந்துவிட்டது.
'ஸரி, ஐயரிடம் சொன்னதை நம்மால் செய்யமுடியவில்லை. அவர் பொய் சொல்லியிருக்கமாட்டார். நாம்தான் கையாலாகாதவனாகி விட்டோம். உயிரை விட்டுவிட வேண்டியதுதான்'என்று தீர்மானம் பண்ணினான்.
அங்கே படர்ந்திருந்த கொடிகளை அறுத்தான்!தூக்குப் போட்டுக்கொள்வதற்காகக் கிளையில் கட்டினான்.
அந்த ஸமயத்தில் எதிரே ஒரு மிருகம் நின்றது.
நரஸிம்ஹ மூர்த்திதான் வந்துவிட்டார் எத்தனை ஏகாக்ரமாக (ஒருமுனைப்பாட்டோடு) அவன் தன்னையே இரண்டு நாளாக ஸ்மரித்திருக்கிறான், ஸத்ய வாக்ய பரிபாலனத்திற்காக எப்படி ப்ராண த்யாகமும் பண்ணத் துணிந்துவிட்டான் என்பதில் ஸந்தோஷித்தே நரஸிம்ஹ ஸ்வாமி தர்சனம் கொடுத்தார்.
ஐயர் சொன்ன வர்ணனைப்படியே மிருகம் இருந்ததைப் பார்த்து அவனுக்கு ஒரே ஸந்தோஷமாயிற்று "பாழும் மிருகமே!நீ அகப்படுவதற்கு இத்தனை பாடா படுத்தினாய்?"என்று சொல்லி, தூக்காகப் போட்ட கொடியை அவிழ்த்து அதனால் நரஸிம்ஹத்தைக் கட்டினான். ஸ்வாமியும் அவனுக்குக் கட்டுப்பட்டு நின்றார். "கட்டுப்பட்டு"என்றால் இரண்டு அர்த்தத்திலேயும்!
கரகரவென்று நரஸிம்மத்தை இழுத்துக்கொண்டு அவன் சோழ தேச ப்ராமணரிடம் வந்தான். "ஓய், பாரும்! இதுதானே நீர் சொன்ன மிருகம்? என்று கேட்டான்.
இவன் காட்டினானே தவிர, அவரால் பார்க்கமுடியவில்லை! அதாவது நரஸிம்ஹ ஸ்வாமி அவருக்குக் காட்சி கொடுக்கவில்லை!
அவனானால், "இந்தா, புடிச்சிக்கோ, உனக்காத்தான் கொண்டுவந்தேன். ஓட்டிக்கொண்டு சுகமாக ஊருக்குப் போ"என்றான்.
அவருக்கு துக்கம் துக்கமாக வந்தது. "ஹீனனான வேடனுக்குத் தெரிகிறாய், எனக்குத் தெரியமாட்டேன் என்கிறாயே!"என்று ஸ்வாமியிடம் நொந்து கொண்டார்.
அப்போது அசரீரி வாக்கு உண்டாயிற்று. "கோடி வருஷம் ஸ்வரூப த்யானம் பண்ணினாலே ஏற்படக்கூடிய சித்த ஐகாக்ரியம் (ஒருமுனைப்பாடு) இவனுக்கு ஒரே நாளில் உண்டாயிற்று. பசி, நித்ரை இல்லாமல், எங்கே சுற்றினாலும் ஒரே த்யானமாக, இப்படி ப்ராணனைப் பந்தயம் வைத்து ஸாதனை பண்ணினவராக எந்த ரிஷியிம் இல்லை. இந்த மஹா பக்தனின் ஸங்கம் உனக்கு ஏற்பட்டதால்தான். தர்சனம் கிடைக்கவிட்டாலும் கர்ஜனையும் இப்போது இந்த வாக்கும் கேட்கிற பாக்யமாவது கிடைத்தது. இதனாலேயே மந்த்ர ஸித்தியும் பெற்றுவிட்டாய். உனக்கு அவச்யமான காலந்த்தில் வந்து, ஆகவேண்டியதை அநுக்ரஹிப்பேன்"என்று பகவானின் வாக்கு சொல்லிற்று.

வரலாறு

வேட்டுவர் வரலாற்றிக்கான ஆதாரங்கள்
கொங்கு நாட்டு வேட்டுவரைப்பற்றி அறிந்துக கொள்ளப் பலவிதமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை நாம் கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள், புராணங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் என்னும் பிரிவுகளாகப் பிரித்துக் காணலாம்.
கல்வெட்டுகள்
பெரும்பாலும் திருக்கோயில்களில் காணப்படுகின்றன். நடுகற்கிலும் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் வேட்டுவர் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக திருவெஞ்சமாக்கூடல், வெங்கம்பூர், திருமுருகன் பூண்டி, அவினாசி, திருசெங்கோடு, புதுக்கோட்டை, கருவூர், ஈரோடு, (கலைமகள் கல்வி நிலைய அருங்காட்சியகம்) ஏழூர் (நாமக்கல் மாவட்டம்) மூக்குத்தி பாளையம் (சேலம் மாவட்டம்) பருத்திப்பள்ளி (சேலம் மாவட்டம்), வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை (நாமக்கல் மாவட்டம்) முதலான ஊர்களில் உள்ள கல்வெட்டுகளைக் குறிப்பிடலாம். பழமங்கலம், சேலம் அருங்காட்சியகம், கூலிப்பட்டி, துக்காச்சி, கொக்கராயன் பேட்டை, சிவகிரி, அந்தியூர் நடுகல் கல்வெட்டுகளும் வேட்டுவ வீரர்களின் அஞ்சாமைப் பற்றி கூறுகின்றன.
செப்பேடுகள்
ஊசிப்பாளையம் செப்பேடு, தென்னிலைப்பட்டயம், திருச்செங்கோடு அல்லாளன் இளையான் பட்டயம், தருமபுரிப் பட்டயம், வெள்ளோட்டுப் பட்டயம், தலையூர் பட்டக்காரர் பட்டயம், புதுர் பட்டக்காரர் பட்டயம், எட்டரைப் பட்டயம் (திருச்சி வட்டம்). சோழன் பூர்வ பட்டயம் மற்றும் காலிங்கராயன் அணை கட்டிய பட்டயம் ஆகியனவும் வேட்டுவரின் வீர வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
புராணங்கள் மற்றும் இலக்கியங்கள்
கருவூர்ப்புராணம், திருவெஞ்சமாக்கூடல் புராணம், திருச்செங்கோட்டுத் திருப்பணி மாலை, திருச்செங்கோட்டுப் புராணம், வெள்ளாளர் புராணம், பழனி ஓலைச் சுவடிகள், குருகுல காவியம், குருகுல வரலாறு, பஞ்சவர்ணராஜ காவியம், கள்ளழகர் அம்மானை, ஓதாளர் குறவஞ்சி, மெக்கன்ஸியின் கையெழுத்துப்பிரதிகள், வில்சனின் கையெழுத்துப்பிரதிகள், கொங்கு மண்டல சதகம், அவினாசிப் புலவரின் திங்களூர் நொண்டி நாடகம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் மற்றும் மாந்தரஞ்சேரல் மெய்க்கீர்த்தி முதலான இலக்கியங்களும், புராணங்களும் வேட்டுவரின் சமுதாய வாழ்வு பற்றிய செய்திகளைச் செப்புகின்றன. சிலப்பதிகார வேட்டுவரிப் பாடல்கள் வேட்டுவரின் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கின்றன.
நினைவுச்சின்னங்கள்
வேட்டுவரின் நடுகற்கள், வேட்டுவர் காலத்தில் கட்டப்பட்டக் கோயில்கள், புதுப்பிக்கப்பட்டக் கோயிலகள் முதலான நினைவுச் சின்னங்களும் வேட்டுவரது வரலாற்றை உருவாக்கப் பயன்படுகின்றன. வேட்டுவ பட்டக்காரர்கள் காலத்திய இடிந்த கோட்டைகள், வெட்டிய ஆறுகள், குளங்கள் ஆகியன அவர்களது ஆட்சியின் சிறப்பைக் கூறுகின்றன.
கோவைக்கிழார் எழுதியுள்ள ‘கொங்கு நாட்டு வரலாறு’, வீயாரம் எழுதிய ‘கொங்கு நாட்டுக் கவுண்டர்கள்’, முனைவர் ஆரோக்கியசாமி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய “The Kongu Country” (கொங்கு நாடு), பேராசிரியர்கள் ம இராசசேகரதங்கமணி மற்றும் எம் சண்முகவேலு ஆகியோர் ‘வேட்டுவர் குரல்’ எனும் மாதாந்திர இதழில் எழுதியுள்ள கட்டுரைகள், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘கொங்கு நாட்டு ஆவணங்கள்’ எனும்  நூல், கல்வெட்டறிஞர் புலவர் செ இராசு அவர்கள் ‘கொங்கு’ இதழில் வெளியிட்டுள்ளக் கட்டுரைகள் ஆகியன வேட்டுவரின் வரலாறு பற்றி ஆய்வு செய்யத் துணைபுரிகின்றன.
வேட்டுவரின் பூர்வீகம்
வேட்டுவரின் பூர்வீகம் குறித்து அறிஞர்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. வேட்டுவர், பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி வம்சத்தினர் என்று வேளாளர் புராணம் குறிப்பிடுகிறது. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவர்களைக் கொங்கு நாட்டின் ஆதிகுடிகள் என்று சுட்டுகின்றது. சில பட்டயங்களில் வேட்டுவர், முத்தரையரின் வழித்தோன்றல்கள் என்று செப்புகின்றன. வேட்டுவரும் முத்தரையரும் கண்ணப்ப நாயனாரைத் தமது குல தெய்வமாகக் கொண்டு வழி படுகின்றனர். எட்கார் ஃதர்ஸ்ட்டன் (Edgar Thurston) அவர்கள் முத்தரையர், வேட்டுவர், வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். இருப்பினும் வேட்டுவரின் பூர்வீகம் குறித்து நான்கு முக்கிய கொள்கைகள் (கருத்துக்கள்) உள்ளன. அவை
  1. வேட்டுவர் நாகர் இனத்தவர்
  2. குரு குலத்தவர்
  3. கண்ணப்ப நாயனாரின் கால்வழியினர்
  4. கொங்கு நாட்டின் பூர்வீகக் குடிகள்
இக்கொள்கைகளின் உண்மைத் தன்மையை இங்கே ஆய்வோம்.
நாகர்
வேட்டுவர் நாகர் இனத்தவரே என்று கனகசபைப்பிள்ளை[1] குறிப்பிட்டுள்ளார். நாகரும் வேட்டையாடும் இனத்தின் தலைவர்களே ஆவர். எனவே தொழில் ஒற்றுமை கருதி, வேட்டுவரை நாகர் இனத்தினர் எனும் கனகசபையின் கருத்தினைப் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். தமிழகத்தின் பூர்வ குடிகளுள் நாகரும் ஒருவர் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துதான். ஆனால், கொங்கு நாட்டில் பழங்காலத்தில் நாகர்கள் வாழ்ந்தமைக்கோ, நாகர் வேட்டுவரின் முன்னோர் என்பதற்கோ இதுகாறும் சான்றுகள் கிடைக்கவில்லை. என்வே இக்கருத்து பொருத்தமுடையதல்ல.
குரு குலத்தவர்
புராணங்களும், பழங்கதைகளும் வேட்டுவரை குருகுலத்தினர் எனக் கூறும். பாண்டவர், கெளரவர் ஆகியோர் குருகுலத்தவர். பாண்டவரது வீழ்ச்சிக்குப் பின்னர் இவர்களது கால்வழியினர் சிலர், தென்னிந்தியாவிற்கு வந்து, பொத்தப்பி நாட்டை உடுப்பூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். பொத்தப்பி நாடு, தொண்டை நாட்டை ஒட்டி அமைந்துள்ளது. இவ்வம்சத்தில் தோன்றியுள்ள வேந்தருள் நாகராஜன் குறிப்பிடத்தக்கவன். இவ்வேந்தனது மகன் கண்ணப்பன். கண்ணப்பனுக்கு வேட்டுவன், வேடன், காவிலவன், பூவிலவன் மற்றும் மாவிலவன் எனும் ஐந்து மக்கள் இருந்தனர். கண்ணப்பனுக்குப் பின்னர் மூத்த மகனான வேட்டுவன் என்று அழைக்கப்பட்டனர். இக்கருத்தினை வேல்சாமி கவிராயர் என்பார் ‘குருகுல வரலாறு’ எனும் நுலில் குறிப்பிடுகிறார். இக்கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.
கண்ணப்ப நாயணாரின் கால்வழியினர்
மேற்கூறப்பட்டுள்ள கருத்தும் வேட்டுவர் சைவ நாயன்மாராகிய கண்ணப்ப நாயணாரின் கால்வழியினர் என்னும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான். வேட்டுவப் பட்டக்காரர்களின் பட்டயங்களிலும், ‘திங்களுர் நொண்டி நாடகம்’[2] எனும் கையெழுத்துப் பிரதியிலும் வேட்டுவரின் முன்னோன் கண்ணப்பர் என்று கூறப்பட்டுள்ளன. புராணகாலத்தலைவர்களுள் புகழ் மிக்கவரைத் தனது முன்னோன் என்று கூறிக்கொள்ளும் வீண் பெருமை பலருக்கு உண்டு. இது அவ்வகையைச் சார்ந்த்தே. கண்ணப்பர் வேட்டுவர் குலத்தவர் என்பதும் உண்மையே. அவரை வேட்டுவர் வணங்கி வருவதும் உண்மையே. ஆனால், இவரே வேட்டுவரின் முன்னோர் என்று கூறுதல் பொருந்தாது. இவன் காளகஸ்தி வேடன் என்பது யாவரும் அறிந்ததே.
பூர்வ குடிகள்
இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் என்பதற்குப் பலவிதமான ஆதாரங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களும், கல்வெட்டுகளும் இக்கருத்தை உறுதி செய்கின்றன. பல அறிஞர்களும் இக்கருத்தை ஆதரிக்கின்றனர்.[3] வேட்டுவர்கள் தங்கட்கு அதிக எண்ணிக்கையில் படை தேவைப்பட்டபோது காளஹஸ்தி சென்று, அங்கிருந்த வேட்டுவ வேந்தனிடம் படை உதவி பெறுவதுண்டு. ஒருகால கட்டத்தில் காளஹஸ்தியில் இருந்த வேட்டுவர் கொங்கு நாட்டில் குடியேறியுள்ளனர். இதனால், வேட்டுவர் காளஹஸ்தி வேந்தரிடையே சுமுகமான உறவும் இருந்தது. இதனை வைத்துக்கொண்டு வேட்டுவரின் பூர்வீகம் காளஹஸ்தி எனக் கூறுதல் தவறாகும்.
பழைய கோட்டைப்பட்டக்காரர் செப்பேடுகளில் கார்வெளிவெளு(வேள்) வேட்டுவ முத்திரைக்காரர் ஒருவர் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவப் பட்டக்காரருள் ஒருவரான தலைய நாட்டுவள்ளல் கவுண்டர் என்பார் சுந்தரபாண்டிய தண்டெறி முத்துராஜா என்று மெக்கன்ஸியால் குறிக்கப்பெறுகிறார். வேட்டுவருள் கொங்கர் செல்வ முத்தரையன், சோழ முத்தரையன், சிய முத்தரையன், சேந்த முத்தரையன் முதலானோர் குறிக்கப்படுகின்றனர். கோபி வட்டம் கொங்கர் பாளையத்தில் இன்றும் பெரும் அளவில் முத்தரையர் வசிக்கின்றனர். திருச்சி மாவட்டம், திருச்சி வட்டத்திலும் (குறிப்பாக வடசேரிப் பகுதி) குளித்தலை வட்டத்திலும் வாழ்ந்து வருகின்ற ஊராளிக் கவுணடர்கள் முத்தரையர், கண்ணப்பர் குலவலையர் என அழைக்க்படுகின்றனர். கொங்கு நாட்டின் பல பகுதிகளில் கண்ணப்பருக்கு வழிபாடு நிகழுங்கால் முத்தரையரி முதலுரிமை பெறுகின்றனர். இவற்றை நுண்ணிதின் ஆராய்ந்து பார்க்குங்கால் வேட்டுவருக்கும், முத்தரையர்க்கும் ஏதோ ஒருவிதமான நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதனை ஊகிக்கலாம். ஒருவேளை இவர்கள் இருவரும் ஓர் இனத்தவராகவும் இருக்கலாமோ? என்ற ஐயமும் ஏற்படுகிறது.
வேட்டுவரின் பிற பெயர்கள்
வேட்டையாடுதலைத் தமது முதன்மைத் தொழிலாகக் கொண்டவர்கள் வேட்டுவர்கள். வேடர் என்ற சொல்லே வேட்டுவர் என் ஆயிற்று. இவர்கள் வேடன், வெற்பன், சிலம்பன், எயினன், ஊரன், வேட்டைக்காரன், வேட்டுவன், வேட்டுவதியரையன், ஊராளி மற்றும் நாடாழ்வான் முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். இவர்கள் கவுண்டர், காடவராயன், மன்றாடியார், பல்லவராயர், வானவதிராயன், காங்கயன், நாயக்கர், முத்தரையர், காடுவெட்டி, ராயர், வள்ளல், கொங்கு ராயர், ஊர்க்கவுணடர், கங்கதிராயர் மற்றும் பிள்ளை முதலான பட்டங்களைப் பெற்றிருந்தினர் என்பதனைக் கல்வெட்டுக்களால் அறியலாம். வேட்டுவ வேந்தர்களோ பல்லவராயர், பூவலராயர், சந்தனராயர் மற்றும் நரசிங்கராயர் முதலான பட்டப் பெயர்களைப் பூண்டிருந்தனர் என்பதனைக் குறிப்பு நாட்டுச் செப்பேட்டால் அறியலாம்.
காலந்தோறும் வேட்டுவர்
சங்க காலத்திலும் அதற்கு முன்பும் கொங்கு நாட்டில் வேட்டுவர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியச் சான்றுகளால் அறிகிறோம். இக்காலத் கட்டத்தில் இவர்கள் வேட்டையாடுதலையே தமது தொழிலாகக் கொண்டிருந்தினர். பின்னர் இவர்களது வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டது. இம்முன்னேற்றம் எவ்வாறு இருந்தது என்பதனை இங்கே காண்போம்.
வரலாற்றுக்கு முற்பட்டகாலம்
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்களும், குகை ஓவியங்களும் கொங்கு நாட்டிலும், அதனை ஒட்டிய பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வேட்டையாடும் காட்சியும், அதன் தொடர்பான காட்சிகளும், விலங்குகளும் தீட்டப்பட்டுள்ளன. இவையாவும் வேட்டுவரது வாழ்க்கை முறையினைச் சித்தரிப்பவையே. கொங்கு நாட்டின் பல பகுதிகளில் ஈமச்சின்னங்களும், புதைகுழிகளும், இறந்தோர் நினைவுக்கற்களும், பெருங்கற்காலச் சின்னங்களும் காணப்படுகின்றன. இவையாவும் வேட்டையாடும் தொழிலைக்கொண்ட நாடோடி வாழ்க்கையை மேற்கொண்ட வேட்டுவருடையதே என்று அயல் நாட்டு ஆராய்ச்சி அறிஞர் F A நிக்கல்சன் குறிப்பிட்டுள்ளார். இந்த ஈமச்சின்னங்களின் சொந்தக்காரர்களான வேட்டுவர்கள், கொங்கு நாட்டின் பூர்வகுடிகளே என்பதனைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறியலாம்.
சங்ககாலமும் அதன் பின்னரும் (கி.மு. 3 முதல் கி.பி. 9 வரை)
சங்ககாலம் தமிழரின் வசந்த காலம். இக்காலத்தில் வேட்டுவர் வேட்டையாடுவதையும் ஆடு மாடு மேய்ப்பதையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தனர். இதே சமயத்தில் பலர் போர்ப்படையில் வீரர்களாகப் பணி புரிந்தனர். இவர்களுள் சிலர் மலைகளிலும், மலைச் சரிவுகளிலும், சமவெளிகளிலும் விவசாயம் செய்து வந்ததாகவும் அறிகிறோம். வேட்டுவர்கள் கள் குடிப்பதில் இன்பம் கண்டனர். கள் குடித்த கடனை அடைப்பதற்கு வேட்டுவர் சிலர் யானைத் தந்தங்களைக் கொண்டு சென்றனர் என்று பதிற்றுப்பத்து கூறுகின்றது.
இவர்கள் எருதுச்சண்டை, கோழிச்சண்டை, ஆடல், பாடல் ஆகிய விளையாட்டுகள் மற்றும் கலைகளில் ஈடுபட்டனர். இவர்கள் போர்ப் படைகளில் பணியாற்றியது போன்று, பாடி காவலிலும், நெடுஞ்சாலைகளில் காவலாளிகளாவும், வணிகச் சாத்துக்குக் காவல் வீரர்களாகவும் அமர்த்தப்பட்டனர்.
போர்த்தெய்வமான கொற்றவை மற்றும் காளி ஆகியவற்றை இவர்கள் வணங்கினர். பின்னர் கன்னிமார் தெய்வங்களை வழிபட்டனர்.
சங்க காலத்தில் வேட்டுவர்க் குலத் தலைவர்கள் சிலர் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்தனர். இதனைச் சங்கப்பாடல்களால் அறியலாம். இவர்களுள் கோடை மலைத் தலைவனான கடிய நெடு வேட்டுவன், தோட்டிமலை தலைவனான கண்டீரக்கோப் பெருநள்ளி, கொல்லிமலைத் தலைவனான வல்வில் ஓரி ஆகியோர் புகழ் பெற்று விளங்கினர். அகநானூறும், கோடைமலைத் தலைவனின் பெருமையைப் பேசுகின்றன. ஓரி, மிகச்சிறந்த வில் வீரனாகத திகழ்ந்தான். ஆமூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த குறும்பொறைக்கோமன் (கொடுமுடி) மாவீரனாகத் திகழ்ந்தான்; சேரரை வென்றான்; தனது அரசை விரிவுபடுத்தினான்.
இளவெயினனார், எயிற்றியனார், எயினந்தையார் மற்றும் எழூஉப்பன்றி நாகன்குமரனார் போன்ற புலவர் பெருமக்களும் வேட்டுவர் குடிக்குப் பெருமை சேர்த்தனர். வேட்டுவகுலப் பெண்பாற் புலவர்களுள் வெறிபாடிய காமக்கண்ணியார், சுழாரர் சீரன் எயிற்றி ஆகியோர் சிறந்த புலவர்களாகத் திகழ்ந்தனர்.
ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் அலைந்து திரிந்து வேட்டையாடிய வேட்டுவர், சில காலம் சென்ற பின்னர் ஓரிடத்தில் தங்க ஆரம்பித்தனர். ஒரவகையாக நிலைத்து வாழ்ந்த இவர்கள் உணவு தேடும் நிலைமாறி, உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறினர். இதுவே வேட்டுவர் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி எனலாம். ஒரேவிதமான தொழிலை மேற்கொண்டுவந்த வேட்டுவர் இக்காலக் கட்டத்தில் பல்வேறு தொழிலில் ஈடுபட்டனர்.
இம்முன்னேற்றத்தால் பல வேட்டுவர் வேட்டைத்தொழிலை விட்டனர்; ஆடுமாடு மேய்த்தலைக் கைக்கொண்டனர்; சிலர் வேளாண்மையில் ஈடுபட்டுச் சமவெளியில் வாழ்ந்தனர். வேட்டுவரின் இம்முன்னேற்றம் பற்றி எட்கார் தர்ஸ்ட்டனும் (Edgar Thurston) தனது “தென்னிந்தியக்குலங்களும் குடிகளும்” (Castes and Tribes of Southern India) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னேற்றமடையாத வேட்டுவர் சிலர் இக்காலக்கட்டத்தில் வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வர்களாகவும், கொள்ளையடிப்பவர்களாகவும் இருந்தனர். இதனை சுந்தரரின் திருமுருகன் பூண்டிப் பதிகத்தால் அறியலாம். சுந்தரர் திருமுருகன் பூண்டிக்குச் சென்றபோது, வடுக வேடுவர் அவரை வழிப்பறி செய்ததாகக் குறிப்பிடுவார்.[4]
பின்னர் வேடுவர் திருந்தியதாகத் தெரிகிறது. திருமுருகன் பூண்டிப் பதிகத்தில் வடுக வேடுவரைக் கடுமையாக சாடிய நாயன்மாராகிய சுந்தரர். திருவெஞ்சாங்கூடல் பதிகத்தில் “வேடர் விரும்பிவாழ் வெஞ்சமாக் கூடல்” என்று வேட்டுவரைப் பொதுப்படையாக கூறுகிறார்.[5] இதில் வேட்டுவரை இவர் குறை கூறவில்லை. வேட்டுவர் பலர் வெஞ்சமாக்கூடல் இறைவர்க்கு அறக்க்கொடைகள் விட்டுள்ளனர். இவர்கள் இறையன்பிலும் மேம்பட்டு விளங்கினர்; ஓரிடத்தில் நிலையாக வாழவும் தலைப்பட்டனர்.
இக்காலக் கட்டத்தில் திருமுருகன் பூண்டி, நாமக்கல், கொடுமுடி, திருவெஞ்சமாக்கூடல் மற்றூம் பேரூர் முதலான இடங்கள் சைவ சமய வழிபாட்டு மையங்களாகத் திகழ்ந்தன. திருமுருகன் பூண்டி, வெஞ்சமாக்கூடல் மற்றூம் கொடுமுடி ஆகிய தலங்களில் வேட்டுவரே பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சங்க காலத்தில் வேட்டுவர் யானைத் தந்ததின் உதவியோடு பொன்னைத் தோண்டி எடுத்ததாக இலக்கியம் கூறும். சங்க காலத்தையடுத்து வெஞ்சமன் எனும் வேட்டுவ அரசன் திருவெஞ்சமாக்கூடலைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.
சோழர் காலம்
கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் ஆதித்தசோழன் ராசா, வேடர்களை வென்று, கொங்கு நாட்டினைக் கைப்பற்றினான். இந்நிகழ்ச்சி கொங்கு நாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். இதனால் வேட்டுவர்கள் அரசர்களாக இருந்தமை புலனாகும். இக்காலத்தில்தான் நாடுகள், வளநாடுகள் முதலிய அரசியல் பிரிவுகள் தோன்றின; பிரமதேயங்கள் நிறுவப்பட்டன.
கி.பி 10-ஆம் நூற்றாண்டளவில் கொங்கில் குடியேறிய கொங்கு வேளாளர்கள், நீர்வசதி உள்ள இடங்களில் தமது இருப்பிடங்களை அமைத்துக் கொண்டதாக திரு மர்ட்டன் (Mr Murton) குறிப்பிடுவார். தொண்டை மண்டலத்திலிருந்தும், சோழ மண்டலத்திருந்தும் கொங்கில் குடியேற்றப்பட்ட கொங்கு வேளாளர்கள், முன்பே விவசாயத்தில் தேர்ச்சிப் பெற்றிருந்ததால் கொங்கு நாட்டில் ஏரி, வாய்க்கால் பாசனங்களை ஏற்படுத்தினர். நீர்பாசனத்துடன் கூடிய விவசாயம் பெருகியது. சோழ வேந்தர்கள் அனைத்து மக்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்தப் பெருமுயற்சி மேற்கொண்டனர்; பல சலுகைகளையும் வழங்கினர். கல்வெட்டுகளில் வேளாளர்கள் கி.பி. பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே குறிப்பிடப் பெறுகின்றனர் என்வதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கொங்கு நாட்டின் பூர்வகுடிகளான வேட்டுவர்களுக்கும், குடி புகுந்த வேளாளர்களுக்கும் பத்து, பதினோறாம் நூற்றாண்டுகளில் சில பூசல்கள் நிகழ்ந்தன. ஆனால் கி.பி. 12, 13-ஆம் நூற்றாண்டுகளில் இப்பூசல்கள் மறைந்து, இவர்களிடையே சமரசம் ஏற்பட்டது. நில உரிமைகளும், கோயில் வழிபாட்டு, முப்பாட்டு உரிமைகளும் வேளாளர் கைக்கு மாறின. வேட்டுவரில் பலர் வேளாளர்களாக மாறினர். வேளாள்ரின் பாதிப் பங்காளியான் வேட்டுவர்கள் என்று கண்ணன் கூட்டத்தார் செப்பேடுகளும் இதனைக் குறிப்பிடுகின்றன. சோழன் பூர்வ பட்டயம், வேட்டுவர், வேளாளரிடையே நிகழ்ந்த காணியாட்சி உரிமை மாற்றம், பொருளாதாரத் துறையில் வேளாளரின் உயர்ச்சி ஆகியவற்றை விரித்துக் கூறுகிறது. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் கூட்டப்பெயர்களை (குலம்) வைத்துக்கொண்டனர்.
சில கூட்டப் பெயர்கள் வேளாளர் மத்தியிலும், வேட்டுவர் மத்தியிலும் காணப்படுகின்றன. அவை அந்துவன், அக்கினி, இந்திரன், கீரை, காடை, மூலன், மணியன், பனையன், பாண்டியன், சேரன், பூந்சந்தை, வெலையன், காரி, புன்னை மற்றும் பொன்னன் என்பனவாகும். இப்பொதுக் குலப் பெயர்களால் இருவரிடையே ஏற்பட்ட நெருக்கமான உறவு புலனாகிறது.
சோழருக்குப் பின்னர்
சோழரது ஆட்சி கொங்கு நாட்டில் மறைந்த பின்னர், பாண்டியரும், ஹொய்சாலரும் கொங்கு நாட்டில் மேலாண்மை செலுத்தினர். வேட்டுவ வீரர்களின் வில்லாற்றலில் முழு நம்பிக்கை கொண்ட பாண்டியர், தமது படைகளில் பெருமளவில் வேட்டுவ வீரர்களை அமர்த்திக் கொண்டனர். சில வேட்டுவ வீரர்கள் படைத்தலைவர்களாகவும் நியமிக்கப்பட்டனர். சுந்தர பாண்டியனது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற போரில் பகைவர்களை வெட்டி வீழ்த்தி, வீரமரணம் எய்திய அந்தியூரனுக்கு நடுகல் எடுக்கப்பட்ட செய்தி இங்கு நினைவு கூறத்தக்கது.
விசயநகர வேந்தரது ஆட்சிக் காலத்தில் தெலுங்கு விவசாயிகளும், சக்கிலி, நெசவாளர், வண்ணான், மருத்துவர் முதலான குடிப்படைகளும், விசயநகர வீரர்களும் கொங்கு சமுதாயத்தில் சங்கமம் ஆயினர். இதனால் கொங்கு நாட்டில் தெலுங்கர் ஆதிக்கமும் எற்படலாயிற்று. இக்கால கட்டதில் கொங்கு நாடு வேட்டுவ, வெள்ளாள பட்டக்காரர்களுள் தென்னிலை, புரவிபாளையம் மற்றூம் திங்களூர் பட்டக்காரர் ஆகியோர் புகழ்பெற்றனர்.
காணியாளர்
கொங்கு நாட்டில் வேட்டுவர் சிலர் காணியாளர்களாகச் சிறப்புற்று விளங்கினர். இவர்களுள் புத்தூர், பள்ளக்குழி, கழனூர், முத்தப்பனூர், தும்பங்குறிச்சி, செளதாபுரம், இளநகர், பிரிதி, காளிப்பட்டி, ஊசிப் பாளையம், பழமங்கலம் மற்றும் குலவிளக்கு முதலான ஊர்களில் வேட்டுவரே காணியாளராக இருந்தனர். அஞ்நூற்றுமங்கலம், திருமழபாடி, குளக்குறிச்சி, படலோடி குறிச்சி, தென்னிலை மற்றூம் இருப்பலி முதலான ஊர்களில் வேட்டுவர் காணியாட்சியாளர்களாகத் திகழ்ந்தனர். காணியாட்சியாளருள் வெங்கச்சி வேட்டுவர் சிலர் புகழ் பெற்று விளங்கினர். முன்னை வேட்டுவர் வடபரிசார நாட்டுக் கோசனத்திலும், சாந்தப்படை வேட்டுவர் மற்றும் கரைய வேட்டுவர் ஆகிய இருவரும் பூந்துறைநாட்டு அறச்சலூரிலும் காணியாளர்களாகத் திகழ்ந்தனர்.
ஊராளிகள்
வேட்டுவர் பலர் கொங்கு நாட்டின் பல ஊர்களில் ஊராளிகளாகத் திகழ்ந்தனர். இவர்களுள் சிலரைப்பற்றிக் கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன. இவர்களுள், மேல்கரை அரையநாட்டு வடிவுள்ள மங்கலத்தில் (துக்காச்சி) ஊராளி வேட்டுவன் அழகன்காளியும், பன்றிநாட்டு குளப்பாடியில் ஊராளி நெனூர் அத்தானியும் (நெருப்பூர் நடுகல்) எழுகரை நாட்டு பெரிய விளங்கியில் ஊராளி சுரண்டை வேட்டுவன் சிலம்பன் சிறியானும், கீழ்க்கரைப் பூந்துறை நாட்டுப் பருத்திப்பள்ளியில் ஊராளி வேட்டுவன் அதியமான் நங்கனும் குறிப்பிடத்தக்கவராவர். அந்தியூர் மலைகளில் (பருகூர் மலைகள்) வாழும் பழங்குடிகளில் ஊராளி என்போரும் ஒரு பிரிவினர் என்பது வேட்டுவரின் தொன்மைச் சிறப்பினை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. சோழன் பூர்வ பட்டயத்தில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட வேட்டுவர், கிராமத் தலைவர்களாக (ஊராளி மற்றும் மன்னாடி) நியமிக்கப்பட்ட செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
பாளையக்காரர்கள்
சேர, சோழ மற்றும் பாண்டியரது ஆட்சிக்குப் பின்னர், கொங்கு மண்டலம் வேட்டுவ இனத்தைச் சார்ந்த பாளையக்காரர்களால் ஆளப்பட்டு வந்தது. இவ்வாறு ஆளப்பட்டு வந்த பகுதிகளுள் சங்ககிரி, சாமப்பள்ளி (தென்னிலை) காவரிபுரம், ஆண்டியூர் முதலானவை குறிப்பிடத்தக்கவையாகும். இப்பகுதிகளில் வேட்டுவப் பாளையக்காரர்கள் கோட்டைகள் கட்டிக் கொண்டு சிறப்புடன் ஆண்டுவந்தனர். கக்குவாடி பாளையக்காரரும் பண்டு, புகழ்பெற்று விளங்கினர். இவர்களுள் நல்லண்ணக் கவுண்டர் குறிப்பிடத்தக்கவராவர். இவருக்குப் பாண்டியவேந்தன் எழுபது வகை விருதுகள் வழங்கினான் என்று மெக்கன்ஸி குறிப்பிடுவார்.
படைத்தலைவர்கள்
சங்ககாலம் முதற்கொண்டே வேட்டுவவீரர் பலர் பாண்டியரின் ஆட்டியை விரிவுபடுத்துவதில் பெரும்பணி புரிந்துள்ளனர். சிலகாலம் இவர்கள் சோழர், பாண்டியர், சேரர், நாயக்கர் மற்றும் ஹொய்சாளர் முதலானோரது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் பணியில் பெரிதும் ஈடுபட்டிருந்தினர். வேட்டுவரில் பலர் வலிமைமிக்க படைத்தலைவர்களாகவும் விளங்கினர். வீரத்திற்கும், அஞ்சாமைக்கும் பெயர் பெற்ற வேட்டுவர் இலக்கியங்களில் பாராட்டப் பெறுகின்றனர்.
ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் அதன் பின்னரும், வேட்டுவ கவுண்டர்கள் விவசாயத்திலும், தொழில்த்துறையிலும், கல்வித்துறையிலும் மற்றும் உத்தியோகத்துறையிலும் மிகவுல் பின் தங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
வேட்டையாடுதல், நாட்டைக் காத்தல் ஆகிய தொழில்களை மேற்கொண்ட வேட்டுவர், ஊர்த் தலைவர்களாகவும் (ஊராளி), படைவீரைகளாகவும், படைத்தலைவர்களாகவும், குறுநில மன்னர்களாகவும் மற்றும் பட்டக்காரர்களாகவும் பல்வேறு காலக் கட்டங்களில் பணியாற்றியுள்ளனர். வேட்டைத் தொழிலை மேற்கொணட வேட்டுவர், பின்னர் காடுகளை அழித்து, விவசாய நிலங்களாக மாற்றி வேளாண்மை புரிந்துள்ளனர். இவர்கள் இறைப்பணியில் மேப்பட்டு விளங்கிப் பல திருக்கோயில்களை அமைத்தும், கோயில்களைப் புதுப்பித்தும், அவற்றில் தொடர்ந்து பூசனை நடைபெற பல அறக்கொடைகளை அளித்தும் தொண்டு புரிந்துள்ளனர். இவ்வாறு வேட்டுவர்கள், கொங்கு நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்து, கொங்கு நாட்டு வரலாற்றில் தனக்கெனத் தனித்தோர் இடத்தைப் பெற்றுள்ளனர்.
பல வேட்டுவர்கள் வேளாண்மைத் தொழில் செய்து வேளாளர் ஆயினர். கொக்கராயன் பேட்டைக் கல்வெட்டு இதற்கோர் சான்று.
வேட்டுவர்கள் பழங்கொங்கு நாடு முழுவதிலும் வாழ்ந்து வந்தனர். இருப்பினும் வடகொங்கில் இவர்கள் மிகுதியாக வாழ்ந்தனர். காவிரி, நொய்யல், அமராவதி ஆற்றங்கரைகளில் வேட்டுவர் குடியிருப்புகள் மிகுதி.
வேட்டுவ குலத்தினின்றும் வேளாளர்களாக மாறிய இவர்கள், தமது பெயருடன் வேட்டுவ இனத்தின் பெயரையும் இணைத்துக் கொள்ள மறக்கவில்லை. எடுத்துக்காட்டாக, கரூர் பசுபதியீசர் கோயில் கல்வெட்டு ஒன்று “புன்னம் பூவாணிய வேட்டுவரில் வேளான் கரியானான மருதங்கவேளான்” என்பவன் பசுபதியீசர்க்கு மூன்று கழஞ்சு பொன் அளித்தான் எனும் செய்தியைத் தெரிவிக்கின்றது. பின்னர் காலம் சில சென்றபின் தமது பெயரில் வேட்டுவர் எனும் சொல்லை நீக்கிவிட்டு வேளாளரும் தமது கூட்டப் பெயர்களில் (குலப் பெயர்கள்) சில பொதுவான பெயர்களைக் கொண்டுள்ளமையாலும் இது விளங்கும். மற்றொரு எடுத்துக்காட்டாக பாண்டியன், பூச்சந்தை, காரி, மூலன், மணியன், பனையன், காடை, கீரை, அந்துவன் மற்றும் வெலையன் ஆகிய குலப் பெயர்கள் இருவரிடையே பொதுவாக காணப்படுகின்றன. அடுத்து, வேளாளர் கோயில்கள் சிலவற்றில் வேட்டுவர்க்கும், வேட்டுவர் கோயில்கள் சிலவற்றில் வேளாளர்க்கும் முப்பாடு வழங்கப்பட்டது. மேலும் பட்டாலி, பருத்திப்பள்ளி, தும்பங்குறிச்சி போன்ற ஊர்களின் காணியார்களாக வேட்டுவர் மற்றும் வேளாளர் ஆகிய இருவருமே குறிக்கப்பட்டுள்ளனர்.
பிற்காலத்தில் முதலாம் ஆதித்தச் சோழனின் ஆட்சிக்காலத்திலும் வேளாளர் சிலர் கொங்கு மண்டலத்தில் குடியேற்றப்பட்டனர்.

“கொங்கு நாட்டு வேட்டுவக்கவுண்டர்கள் வீர வரலாறு”
வரலாற்று வித்தகர், களஞ்சியச் செம்மல் பேராசிரியர் ம இரா தங்கமணி

அகநானூற்றில் ஆதி கொடைக்கானல்


தென்மாவட்ட மக்களுக்கு குளுமை தரும் கொடைக்கானல் மலை நகரம் உருவாவதற்கு முன், கோடை வாசல்தாளமாக இருந்தது வில்பட்டி கிராமம். கொடைக்கானலில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ளது இக்கிராமம். 
ஆதி கொடைக்கானல் என்றழைக்கப்படும் இதன் உண்மையான பெயர் வேடபட்டி. சங்க காலத்திலேயே, கோடைப் பொருநன் பண்ணி என்ற சிற்றரசன், இப்பகுதியை ஆட்சி செய்தார் என்ற செய்தியை, அகநானூற்றில் அறிய முடிகிறது. மேலும், பெருந்தலை சாத்தனார், நோன்சிலை வேட்டுவன் என குறிப்பிடுகிறார். இம்மன்னன், சங்க காலத்தில் முற்கால பாண்டிய மன்னர்களுக்கு கட்டுப்பட்டு, இப்பகுதியை ஆட்சி செய்தார். பாண்டிய மன்னர்களின் சிறந்த படைத்தளபதியாகவும் இருந்துள்ளார். இதனாலேயே, அவர்களிடம் தென்னவன் மறவன் என்ற சிறப்பு பட்டத்தையும் பெற்றார். வீரம், கொடை பண்பில் சிறந்து விளங்கிய இம்மன்னன், மலையில் பெரிய குழிகளை வெட்டி, அதில் விழும் யானைகளை, தன்னை தேடி வரும் இரவலர்களுக்கு பரிசாக அளித்தார் என்ற செய்தியை, அகநானூறு 13ம் பாடலில், பெருந்தலை சாத்தனார் குறிப்பிடுகிறார். இக்கிராமத்தில் பழமையின் பெருமையை போற்றும் விதமாக, பழமையான வேடியப்பன் கோயில் என்ற சுப்பிரமணியர் கோயில் உள்ளது. கோயில் விதானத்தில், பிற்கால பாண்டிய மன்னர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக, புடைப்பு கற்சிற்பங்கள் வரிசையாக தென்படுகின்றன. கருவறையில், சுப்பிரமணியர் சிலையும், வெளிப் பிரகார கோயிலில் கடம்பன், இடும்பன் சிலைகளும் உள்ளன. கோயில் வளாகத்தில், 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில், கோயில் திருப்பணிகளை செய்த கங்கப்பனின் மகன் செம்மண் கும்பமன்னு என்பவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

- க.ராஜா, வரலாற்று ஆய்வாளர்.