கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, November 3, 2014

வேட்டுவ கவுண்டர் தொடர்பானவை

செய்யான் பல்லவராயன்
தொல்லுல கத்தினிற் றுட்டரை வெட்டித் துணித்த ததனாற்
சொல்லிய போசள வீர புசபலன் சூளசீர்
பல்லவ ராய னெனப்பட்ட மீயப்படை செலுத்த 
வல்லவன் வேட்டுவச் செய்யானும் வாழ் கொங்கு மண்டலமே.
(க-ரை)   போஜள வீர புஜபலனென்னும் அரசனது சேனையைச் செலுத்தி, அவனது பகைவனை வென்றபடியால் "பல்லவராயன்" என்று பட்டங் கொடுக்கப்பெற்ற வேட்டுவச் செய்யானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.
வரலாறு :-    மேல்கரைப் பூந்துறை நாட்டைச் சார்ந்த அறைச் சலூரில் கரைய வேட்டுவரில் செய்யான் என்பவன் ஓய்சல வீரவல்லாள வேந்தனிடத்தில் சேனா வீரனாக இருந்தான். அவனது யுத்த தந்திரத்தை நன்கு மதித்து அந்த அரசன் பல்லவராயன் என்று பட்டப்பெயர் கொடுத்தான். தன்பெயருடன் செய்யான்பல்லவராயன்  என்று புகழுடன் வாழ்ந்தான். இவன்மீது சில பிரபந்தங்களும் 
இருக்கின்றன. இவனது சாசனம் அறச்சலூர் புற்றிடங் கொண்ட நாயனார் 
ஆலயத்தின் தென்புறச் சுவரில் இருக்கிறது .. ஸ்வஸ்திஸ்ரீ போஜளவீர 
புஜ் பல * வீரவல்லால தேவர் பிரதிவி ராஜ்ஜிய பரிபாலனம் .மேல்கரைப் பூந்துறை நாட்டு அறச்சலூர் கரையவேட்டுவரில் செய்யான் பல்லவராயனே இவ்வூரில் உடையார் புற்றிடங் கொண்ட நாயனார் கோயிலில் திருக்கட்டளையில் திருநிலைக் காலும் செய்வித்தேன் ..... இச்சாசனமிருக்கிறது.


அல்லாளன் இளையான்
வடமுக நின்று வருகா விரியின் வனத்தை யென்றுந் 
திடமுறு கொங்கினும் பாசன மாகச் செலப்பிரித்த 
அடல்கொ ளல்லாள னிளையான் பெருக்க மமைத்துவளர் 
வடகரை யாற்றூர் திகழ்வது வுங்கொங்கு மண்டலமே.


(க-ரை) வடதிசையினின்று வந்த காவிரி நீரைக் கொங்கு நாட்டினும் பாசனமாகும்படி வாய்க்காலாகப் பிரித்த வல்லாள இளையான் வாழ்கின்ற வடகரை ஆற்றூருங் கொங்கு மண்டலம் என்பதாம்.


வரலாறு :- கொங்கு இருபத்து நான்கு நாட்டினுள்ளே கீழ்கரை அரைய நாட்டில் வடகரை ஆற்றூரிலே வேட்டுவரில் இம் முடித்திருமலை அல்லாள இளைய நாயக்கன் என ஒரு தக்கோன் இருந்தான் அவன் திருச்செங்கோடு ஸ்ரீநாகேசுரர், அர்த்தமண்டபம் மஹாமண்டபம் முதலிய திருப்பணிகள் செய்தான். கோயிற்கற்பணி வேலை மிகச் சிறந்தது எனலாம். மைசூர்ப் பெருங்கலக்காரனும், கொள்ளைக்காரனுமான நஞ்சய உடையார் அர்த்தநாரீசுரர் ஆலயத்திற்கொள்ளை அடித்துக்கொண்டு போனான்; 
என்றாலும் ஆறைஇளையா நாயக்கன் பலத்த சேனையுடன் சென்று அவர்களை வழிமறித்துக் கொள்ளைப் பொருள்ளைப் பிடுங்கிக் கொண்டு வந்து சேர்த்தான். அழிந்தவற்றிற்குத் தன்னுடையதாகப் பல உதவினான். சாலிவாக சகாப்தம் 1565 தாரண ஐப்பசிமாதம் 25 தேதி (கி. பி. 1643) நாகேசுரர் கோயிலில் சம்புரோக்ஷணஞ் செய்வித்திருக்கிறான். காவிரியின் வடபுரம் அணையின்றி வாய்க்கால் பிரித்துப் பாசன வசதி செய்திருக்கிறான். இவ்வாய்க்காலை ராஜ வாய்க்காலென வழங்குகிறார்கள். முற்காலத்தில் ராஜ ராஜன் ஆட்சியில் வெட்ட ஆரம்பித்திருக்கலாம் என்று சிலர் 
எண்ணுகிறார்கள். இவன் மரபினருக்கு இவ்வாய்க்காலில் மரியாதை உண்டு
என்பதன்றிக் கபிலைமலை முதலிய தேவஸ்தானமுள்ள கீழ்கரை அரைய 
நாட்டிலெல்லாம் முதன்மை இருக்கிறது.

(மேற்)
மூவருக்கு மகத்தியமா முனிவருக்கு மரசிருந்த முன்னை யோர்க்குந் தேவருக்குந் திரும்பாத காவிரியைக் கொங்கேற்றித் திறை கொண்டாயே பூவிருக்கு முரமாயன் கடலடைத்தா னவன்வேடன் புனைந் தவாறோ யாவருக்கு மிளையானே யல்லாள திருமலையா வீகையோனேதிருச்செங் - திருப் - மாலை 262 செய்யுள் முதல் 268 வது செய்யுள் வரை நோக்குக. கபிலை மலைக்குழந்தைக் குமாரர் வருக்கக்கோவை 77-வது 
செய்யுளில் இவன் புகழப்படுகிறான். இந்நூல் கலி 4740-ல் (கி. பி. 1640) அரங்கேற்றப் பெற்றது. சென்னை (சாசன பரிசோதக) ஆர்க்கலாஜிகல் 1907 - 1908 வருஷாந்த ரிபோர்ட்டு 2-வது பிரிவு 16-வது பக்கத்து இவன் குறிப்பு இருக்கிறது.


கோபண மன்றாடி
தென் பாண்டி நாட்டினிற் சிங்களர் தீமை செயச் செழியன்
முன்போ யகற்ற வலியற்ற காலத்தின் மொய்ம் பொடவர்
பின்போடத் தானை கொடுமோட்டு வீரன் பெருங் களந்தை 
மன்பூ வலனெனுங் கோப்பண னுங்கொங்கு மண்டலமே
(க-ரை) பாண்டி மண்டலத்திற் சிங்களர் புகுந்து வருத்துதலைத்
தடுக்கப் பாண்டியனுக்கு இயலாத காலத்தில், வலிய சேனையை நடத்தி
அச்சிங்களர் திரும்பி யோடச் செய்தவனுங் களந்தையென்னும் பதிக்குத்
தலைவனும், பூவலனென்னும் குடிப் பிறப்பனனுமான கோப்பணன்
என்பானுங் கொங்கு மண்டலம் என்பதாம்.

வரலாறு :- பாண்டி மண்டலத்தின் ஆளுகையைப் பற்றிப் பராக்கிரம பாண்டியனுக்குங் குலசேகர பாண்டியனுக்குஞ் சண்டை நேர்ந்தது. மனைவி மக்களுடன் பராக்கிரம பாண்டியனைக் குலசேகரன் நாசஞ் செய்துவிட்டான். இதனைக் கேள்வியுற்ற சிங்களத்தரசனான பராக்கிரம பாகு என்பான் தன் தண்ட நாயகனான இலங்காபுரியைப் பலத்த சைனியத்துடனனுப்பினான். அந்த இலங்காபுரி என்பான் இராமேசுவரத்தைப் பிடித்துக்கொண்டு சிலபாகத்தையும் அழித்து குந்துகாலம் என்னும் இடத்தில் ஒரு 
கோட்டைகட்டி பராக்கிரமபுரம் எனப் பெயரிட்டான். இவர்களை எதிர்த்த பாண்டியராஜன் - சுந்தரபாண்டியனெனும் இருபாண்டியர் களிறந்தார்கள். அப்பொழுது ராஜகேசரி ராஜாதிராஜன் கொங்கு நாட்டை ஆண்டிருந்தான். இவன் குலசேகர பாண்டியனுக்கு மாமன்முறை ஆகவேண்டும். இதனால் இந்தச்சோழனைக் குல சேகரபாண்டியன் துணை வேண்டியனான். உடனே கொங்கப் படையைத் திரட்டி அனுப்பப்பட்டது. இதுசென்று திருக்கானப் பேர் - தொண்டி - பாசி - பொன்னமராவதி - மணமேற்குடி - மஞ்சக்குடி 
என்னும் இடங்களிலெதிர்த்துச் சிங்களப் படைகளைப் பாண்டி நாட்டை விட்டுத் துரத்திவிட்டது. இந்தக் கொங்குப் படைக்குச் சேனாதிபதியாகச் சென்ற சேனாபதிகளுள் ஒருவனாக இக்கோப்பணன் சென்றதை இச்செய்யுள் விளங்குகிறது. 1898 சென்னை ஆர்க்கலாஜிகல் வருஷாந்த ரிபோர்ட்டிலும் காஞ்புரத்துக்கடுத்த ஆரம்பாக்கத்து  கோயிற் சாசனத்திலும் இப்படையெடுப்பு எழுதப்பட்டுள்ளது.

இந்த சண்டை கி.பி. 1190-ல் நடந்ததெனச் சாசன பரிசோதகர்கள் கணிக்கிறார்கள். எனவே இன்றைக்கு 730 வருஷங்களாகின்றன. இவன் மரபினர் பேரூர், அவிநாசியிலும் திருப்பணி செய்திருக்கிறார்கள்.இம்மரபினர் கோயமுத்தூர் ஜில்லாவில் புரவிபாளயம் (பாளயப் பட்டு) ஜமீன்தாராக இருக்கின்றனர். இவர்களைப் பாண்டிய ராஜாங்கத்தார் 

புத்திரவர்க்கமெனக் கொண்டு பல உரிமைகள் செய்திருக்கிறார்கள்.விஜயநகரம், மஹிசூர், மதுரை நாயக்கர் சமஸ்தானம், மலையாள சமஸ்தானங்களிலும் பல கவுரவங்கள் பெற்றிருக்கிறார்கள். கள்ளிக்கோட்டை ஆமீன் சாய்புக்குஞ், சீரங்கபட்டணம் நபாபுக்கும் நடந்த வாளையாற்றுச் சண்டையில் வழி மறிக்கப்பட்டது. அக்காலத்திற் புதியவழியை வெட்டிக் காட்டியதால் சந்தோஷப்பட்ட நபாபு உம்பளமாகச் சில கிராமங்கள் உதவினான்.

இம்முடி - மன்றாடி என்பன முதலிய பழய காலத்துப் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். 'இம்முடி' ஜகமண்டலாதிபதி கோப்பண மன்றாடியார் என்பது இப்பொழுதுள்ளவர் பெயர்.

களந்தை = வாரக்க நாட்டிலுள்ள ஓரூர்.
பூவலர் = பூவலியர் - ஒரு ஜாதி. பூலுவரென்பாரு முளர் இவர்கள் 

குருகுருப்பிரிவினுள் பூவலியர் - மாவலியர் - காவலியர் - வேட்டுவர் 
வேடர் எனும் பஞ்சவருண வாளரச வகுப்பினர் என்பர்.


காட்டை விற்று கள் குடித்தாலும் 
கவுண்டன் கவுண்டன் தான்.

இது நமக்காகவே உருவாக்க்கப்பட்ட பழமொழி என்பதற்கான ஆதாரம் இதோ....
ஓங்கியல் யானை தூங்குதுயி லெய்த
வாகை தும்பை வடதிசைச் சூடிய
வேக யானையின் வழியோ நீங்கெனத்
திறத்திறம் பகர்ந்து சேணோங் கிதணத்துக்
குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்

அமை விளை தேறல் மாந்திய கானவன் - மூங்கிலின் கண் விளைந்த கள்ளையுண்ட வேட்டுவன், கவண்விடு புடையூஉக் காவல் கைவிட - கவண்கற்களை விடுத்துப் புடைக்கின்ற காவலினைக் கைவிடுதலால், வீங்குபுனம் உணீஇய வேண்டி வந்த - பெரிய தினைப்புனத்தில் உண்ணுதலை விரும்பிவந்த, ஓங்கியல் யானை தூங்குதுயில் எய்த - உயர்ந்த இயல்புடைய யானை அயர்ந்து உறக்கமடைய, வாகை தும்பை வடதிசைச் சூடிய - வாகையையும் தும்பையையும் வடநாட்டின் கண் முடித்த, வேக யானையின் வழியோ நீங்கென - விரைந்த செலவினையுடைய யானை வரும்வழியிற் செல்வாய் இவ்விடம்விட்டு நீங்குவாய் என்று, திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்துக் குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாணியும்-அரசனுடைய வெற்றித் திறங்களைத் திறப்பண்ணினாற் கூறிச் சேணிலே உயர்ந்த பரணின்மீ திருந்து குறத்தியர் பாடிய குறிஞ்சிப் பாடலையும் ;

Monday, September 15, 2014

தமிழக சாதி பேதங்கள் – சில வரலாற்று உண்மைகள்

இதற்கு கொஞ்சம் சரித்திரம் பார்ப்போம். கி. பி. 1070-களில் இருந்து தொண்டைமண்டலத்தில் தெலுங்கு சோழர்கள் ஆதிக்கத்தில் வந்துள்ளது. யார் இந்த தெலுங்கு சோழர்கள்? கி.பி.1070 ஆதிராஜேந்திரன் என்ற சோழர் குல தமிழ் வம்சாவளி அரசியல் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பிறகு, தெலுங்கு சோழர்கள் எனப்படும் குலோதுங்க சோழர்கள் ஆட்சி ஆரம்பமானது. ராஜராஜ சோழனின் மகள் குந்தவி நாச்சியார் ,வேங்கி நாட்டு அரசனுக்கு திருமணம் செய்து கொடுத்து அந்த வம்சாவளியில் வந்தவர்கள் தங்களை தெலுங்கு சோழர்கள் என்பார்கள். பிற்கால சோழப் பேரரசு மத்திய இந்தியாவில் குறிப்பாக வேங்கி ,சாளுக்கியம்,கங்கம் ( தற்போதைய கர்நாடகம்,அதாவது மைசூர்க்கு வடக்கே, ஹுப்லி, ஹம்பி, பேலுர்.(பேலுர் கோயில்,சோழத் தளபதியை வென்றதற்கு நினைவாக கட்டப்பட்டது.) என தனது பேரரசை விரிவுப்படுதியது. இவர்களது  அரசியல் போர்கள் அனைத்தும் மத்திய கர்நாடகம், ஆந்திரம் காக்கிநாடா,  இங்குதான் நடந்து வந்துள்ளது ,அவர்களது குல எதிரிகளான சாளுக்கியர்களிடமே இப்போர்கள் நடந்துளது. தற்போது கர்நாடகத்தில் உள்ள ஹம்பி விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்துள்ளது.

ராஜராஜ சோழன் மிகச்சிறந்த சோழப் பேரரசனாக இருக்கலாம் ,ஆனால் அவன் தன் இனம் அழியக் காரணமானவன் என்பதும் வரலாற்று உண்மை. முதலில் களப்பிரர்கள் அந்நியர்கள் இல்லை, அவர்களும் தமிழ் குடியே, என்பது அண்மைக்கால வரலாற்று, சமூகவியல் ஆராய்சியாளர்களின் கருத்து. சமணமே அவர்களது மதம். மிகச்சிறந்த நல்லொழுக்க நூல்கள் அவர்களது காலத்தில்தான் ஏற்பட்டது. திருக்குறள் மிகச்சிறந்த சான்று.மதம் என்றுமே அரசியலில் மிகப் முக்கிய பங்கு வகிக்கும். சைவம் வளர சமணம் அழிக்கப்பட்டது. அத்துடன் களப்பிரர்களும் அந்நியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இளங்கோவடிகளும் ,திருத்தக்க தேவரும் மிகச் சிறந்த புத்த சமண பேரறிஞர்கள். பிரமணத்தை எதிர்த்து வந்ததே சமணமும், புத்த மதமும், பிற்கால சோழர்கள் காலத்தில் அரசு மற்றும் அரசியல் ஆதரவு பெற்ற வெள்ளாளர்கள், பிரமணர்கள் முற்றிலுமாக சமண, புத்த மதங்களையும்,  அவர்களது ஆதரவு அரசுகளையும் அழித்தனர்.
அதியமான் நாடான தர்மபுரி,கிருஷ்ணகிரி, வல்வில் ஓரி நாடான கொல்லிமலை,சேலம் நாமக்கல், பாரி நாடான வட,தென் ஆற்காடு மாவட்டங்கள், பிரான்மலை,புதுக்கோட்டை,கோவில்பட்டி,கழுகுமலை மேற்கு தொடர்ச்சி மலை,கரூர்  என்று பண்டைய குறுநில அரசுகள் அனைத்தும் சமணத்தையே ஆதரித்து வந்துள்ளது என்பதற்கு பல்வேறு குகைக் கோயில்கள், கல்வெட்டுகள் இலக்கியச் சான்றுகள் எனப் பல உள்ளன. எனவே களப்பிரர்கள் வெளியில் இருந்து வந்து சமணத்தைப் பரப்பினார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை.. மேலும் களப்பிரர்களின் தலை நகரான செந்தலை  தற்போதைய திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சைக்கு நடுவில், தமிழகத்தின் நடு மத்தியில் உள்ளது. செந்தலை கல்வெட்டில் அவர்களை கள்வர் காவலன். என்று அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் வட்டெழுத்துகளாகவே உள்ளது. அந்நியர்களான  பல்லவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுதியவர்கள் களப்பிரர்களே.  பல்லவர்கள் தாய்வழி மற்றும் திருமணங்கள், கங்கர்கள் என்கிற தற்போதைய கன்னடர்களுடனே இருந்துள்ளது. இரண்டாம் நந்திவர்மன் தனது ஆட்சியை நிலைப் படுத்திகொள்ள தமிழகத்தின்  தொண்டைமண்டல போர் மரபினர்களான, குறுநிலமன்னர்களுக்கு அதிக அரசியல் முக்கியத்துவம் கொடுத்து வந்தான். எனினும் இக்குறுநில மன்னர்கள் பல்லவர்களை முழு அதிகாரத்துடன் ஆள விடவில்லை தங்களது தமிழின அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள். பல்லவர்களின் அரசியல் போர்க்களம் பெரும்பாலும் தமிழகத்தின் வடக்கேதான் இருந்துள்ளது.
களப்பிரர்கள் கண்டிப்பான ஒழுக்க கட்டுப்பாட்டினை நடைமுறைப் படுதினார்கள். இதுவும் அவர்களது வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது. அதுமட்டுமல்ல தொன்மையான தமிழ் குடிகள் மத ரீதியாக செயல்பட்டதில்லை. குறிஞ்சிக்கு சேயோனும்,முல்லைக்கு மாயோன்,மருததிற்கு இந்திரன் ,நெய்தலுக்கு வருணன்,பாலைக்கு கொற்றவை.என ஐந்திணை அடிப்படையில்தான் இறைவழிபாடு. இருந்துள்ளது.அதேபோல இந்திரனை முக்கியமான தெய்வமாக வழிப்பட்டனர். இந்திரா விழாவாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இதன் வெளிப்பாடுதான் இன்றைய சித்திரை திருவிழாவாக இருக்கும். பெருவுடையார் கோயிலில் கூட பிரம்மா, சரஸ்வதி, விஷ்ணு வரிசையில் இந்திரனும் இருக்கிறார். முக்குலதோர்கள் இன்றும் தங்களை இந்திர குலத்தவர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். எந்த காலகட்டத்தில், இந்திரனைப் பற்றி இழிவான பூரணக்கதை புனையப்பட்டது என்பது ஆராய்ச்சிக்கு உரியது. அதுமட்டுமல்ல போர்க் கடவுளான இந்திரன்,பிற்பாடு வழிப்பாட்டுக்கு ஏற்றவனாக இல்லாமல் போனது ஏன் என்றும் சந்தேகம் வருகிறது. முக்குலத்தவ்ரின் மூலவன் இந்திரன் என்றும் அவன் வழி தோன்றல்கள் இழிவானவர்கள் என்று புராண புனைக்கதைகளிச் செய்தவர்கள் யாராக இருக்கும்? ( சில நேரம் தோன்றும் தமிழர்கள் ஏன் மறுடியும் இந்திரா விழாவினைத் தொடங்கக் கூடாது? ஒருவேளை அப்படிக் கொண்டாடினால் நமக்கு பழைய வீரமும் வாழ்வும் வருமோ? இதைதாத்தான் revival and renaissance of culture என்பார்கள்.)
இதில் மற்றொரு நிகழ்வையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இன்றைக்கும் கள்ளநாடுகளில் குலசாமி வழிப்பாட்டில் கோடங்கி மேல் சாமி இறங்கும்போது எங்கு இருந்து வந்தாய் என்றால் வடக்கிலிருந்து வந்தேன் ,என்றும் எதற்கு வந்தாய் என்றால் காராள வெள்ளாளனை கருவருக்க வந்தேன் என்று சொல்வார்கள் அதன் பின்னரே வந்திருப்பது குலசாமி என்று முடிவு செய்வார்கள். இது வழி வழியாக வருவது. பெரியவர்  வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கள்ளர்கள் தொண்டைமண்டலத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்தக் கூற்று பெரும்பான்மையான ஆராய்சியாளார்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
விஜயநகர இளவல் குமரா கம்பண்ணன் தமிழகத்திற்குள் வரும்போது அவரது மனைவி கங்காதேவி மிகச் சிறந்த கவியரசி தனது குமார விஜயம் என்ற நூலில் தமிழகம் வரும்போது வழியெங்கும் மிகப்பெரிய அரச குடும்பங்கள், உயர்ந்த குடும்பங்கள் குழந்தைகள் உட்பட கொலை செய்யப்பட்டு அவர்கள் உடல்கள் அவர்களது வீடுகளில் எங்கும் கிடந்தன என்கிறார். மாலிக்கபூர் வரும்வழியில் உள்ள ஊர்களை அழித்து வந்தான் என்றாலும்,அவனது சிறுபடைக்கு அத்தனை உயர் குடும்பங்களையும் அழிக்க முடியுமா? அதுவும் உள்நாட்டில் உள்ள அதிகார குடும்பங்களை எப்படி கண்டு பிடித்து வீடு புகுந்து எப்படி  அழித்திருப்பான்?
மற்றுமொரு நிகழ்வு, விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கு ஆட்சி செய்ய வரும்போது அவருக்கு உதவியாக வந்தவர், அரியநாத முதலி, காஞ்சிபுரம் அருகில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஏழை வெள்ளாள வகுப்பினர். இவர் காஞ்சியிலிருந்து விஜயநகரத்திற்குச் சென்று அங்கு அரண்மனையில் கணக்கராக இருந்துள்ளார். தமிழகத்தில், பாளயங்கள் அமைத்தது அரியநாத முதலிதான்.
ஏற்கனவே தொண்டைமண்டல வெள்ளாளர்களுக்கு தெலுங்குஅரசர்கள் தொடர்பு இருந்துள்ளது என்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல சித்திரமேலி பெரியநாடு பற்றி படிக்கும்போது அதன் நிர்வாகிகள் தமிழில் மட்டுமல்லாது வடமொழிகளிலும் ஆழ்ந்த திறமைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். உயர் கல்விஞானம் கொண்ட வெள்ளாளர்கள் அன்னியர்களுடன் சுலபமாக பழகும் வழக்கம் இயல்பாகவே வந்திருக்கும். இதன் காரணமாக தெலுங்கு சோழர்கள் காலத்திலிருந்தே முக்குலதோரின் அரசியல் அதிகாரங்களை கைப்பற்ற வெள்ளார்கள் முயன்று இருக்க வேண்டும்.
தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அனுராதபுரம் வரை விரிந்து இருந்த தமிழ் சமுதாயம் குறுகியது நாயக்கர்கள் கால கட்டத்தில்தான்.அதாவது வெள்ளாளர்கள் அரசாங்க அதிகாரத்தில் நுழைந்த போதுதான். சிங்களவர்களுக்கும், பாண்டிய அரச வம்ஸத்திற்கும் காலம் காலமாக திருமண உறவு இருந்துள்ளது. பாண்டிய வம்சம் சீர்குலைந்த பிறகு, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள உறவுகள் பல்வேறு காரணங்கள் காரணமாக பிளவு ஏற்பட்டது. அதில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது.
பிற்கால சோழர்கள் தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பிற நாடுகளில் வேளிர் படை, அகம்படியர் படை இவர்களை பாதுகாப்பிற்காகவும், வெள்ளாளர்களை விவசாயத்திற்காகவும், நிர்வாகத்திற்காகவும்  அமர்த்தியுள்ளார்கள். அதனால்தான் முக்குலதோரில் கள்ளர் ,மறவரை விட , அகம்படியர் மைசூர், வாராங்கல், முதல் இலங்கை வரை இருந்துள்ளனர். அகம்படியர்கள் தஞ்சையில் தேவர்கள் என்றும் பிள்ளை என்றும் அழைக்கப் படுவார்கள். தென்பாண்டி மண்டலத்தில், தேவர் என்றும், சேர்வை என்றும் அழைக்கப்படுவார்கள்., தொண்டைமண்டலதில் , முதலியார்கள், நாயக்கர்கள் என்றும் அழைக்கபடுவார்கள். அதாவது அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பிள்ளை, சேர்வை,முதலியார்கள் என்றும், போர் மற்றும் இராணுவத்தில், காவல் கடமையில்  இருப்பவர்கள் தேவர்கள், நாயக்கர்கள் என்று அழைக்கப் படுவார்கள். நாயக்கர்கள் போர் மற்றும், காவல் தொழிலில் ஈடுபடுபவர்கள் அதனால்தான் தொண்டை மண்டலத்தில் அகம்படியர் நாயக்கர், வன்னிய நாயக்கர்கள் இருக்கிறார்கள்.( ஒரு அன்பர் அகம்படியர் ஆனால் நாயக்கர் என்ற பட்டம் உள்ளது என்றார். இதைப் படித்தால் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.)
பிற்கால சோழர்களின் காலத்திற்குப் பிறகுதான் தொன்மையான தமிழ் பழங்குடி போர்மர்பினர் ,குறுநில மன்னர்கள் அழிக்கப் பட்டனர். உதாரணத்திற்கு, அதியமான், மலையமான்,சம்புவரையர், முத்தரையர், இவர்கள் மட்டுமல்ல எயினர், வேட்டுவர் என்று பல மலைவாழ் பழங்குடியினரும் காணாமல் போனார்கள். மேலும் பிற்கால சோழர்கள் ஒரு குடையின் கீழ் தங்களது ஆட்சியைக் கொண்டு வர குறுநில மன்னர்களை ஒடுக்கினார்கள்.
காவேரியின் நீர்வளத்தை முழுமையாக பயன்படுத்த நினைத்ததால் காடுகளை அழித்து அதனை விவசாய பூமியாக மாற்றினார்கள். இதனால் பிற்கால சோழர்கள் காலத்தில் உழவர்களான வெள்ளாளர்கள் அதிகாரம் பெற்றனர்.  மேலும் வெள்ளாளர்கள் ஆதீனங்கள் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு கல்வி ,கேள்விகளில் சிறந்து இருந்தனர். பேரரசுகள் மறைந்த பிறகு அதுவாரை அரசு நிர்வாகத்தில் இருந்த போர்மரபினர்கள்   மெல்ல மெல்ல தங்கள் அதிகாரத்தை இழக்க,,வெள்ளாளர்கள் அரசு அதிகாரங்களை கைப்பற்றி தங்களை சத்- சூத்திரர்கள் என்றழைத்துக் கொண்டனர். இந்த நிலை 18ஆம் நூற்றாண்டுவரை இருந்து வந்துள்ளது என்பதை Edgur Thurston, ‘Caste and Tribes in  South India’.என்ற நூலில் அறியலாம். மேலும் வெள்ளாளர்கள் தங்களை துளுவ வெள்ளார்கள் என்று விஜயநகரம் துளுவர்களின் ஆட்சியில் வந்த பிறகு இவ்வாறு அழைத்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை. கிருஷ்ண தேவராயர் துளுவ வம்சாவளியில் வந்தவர்.  வெள்ளாளர்கள் பிரமணியத்தைக் காப்பியடித்து தங்களை உயர் சாதியினராக காட்டிக்கொண்டனர். ஆங்கிலயர்கள் காலத்தில் அரசாங்க வேலைக்கு அதிக போட்டி பிராமணர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும்தான் இருந்துள்ளது.
சோழன் காந்தளூர்ச்சாலையை கைப்பற்றி 100 வருட சேர சோழ போரினை உருவாக்கி, தொன்மையான தமிழ் தேசமான சேரளத்தை ,கேரளமாக்கினான். 10ஆம் நூற்றாண்டில் கேரளம் உருவானது. தெலுங்கனுக்கு பெண்னைக் கொடுத்து, தெலுங்கர்கள் சோழ நாட்டை ஆள வழி வகுத்தான், பிரமணத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தான் சுர்திரர்களில் வெள்ளாளர்களை மட்டும் உயர்தினான். சோழனை தடுத்து நிறுத்தியது பாண்டியனே. தமிழினத்தை அன்றும்,இன்றும் என்றும் காத்து நிற்பதால் தான் இன்றும் தமிழகத்தில் எங்கும் பாண்டியனின் பெயர் பட்டி தொட்டிகளில் எல்லாம் பேர் சொல்லி நிற்கிறது. தென்பாண்டி மண்டலத்தில்தான் இன்றுவரை பிரமிண ஆதிக்கம் இல்லை, பிரமிணர்களைப் பார்த்து காப்பியடிப்பதும் இல்லை.
ஏற்கெனவே தெலுங்கு சோழர்கள் காலத்திலே தொண்டைமண்டலம்  மெல்ல மெல்ல தமிழகத்தை விட்டு அந்நியர்களின் வசமானது. துலுக்கர்களால்  துரத்தப்பட்ட வந்தேறிகள் தமிழக தெலுங்கர்களால் அடைக்கலம் தரப்பட்டது. தமிழகத்தின் காட்டுப் பகுதிகளையெல்லாம் ஆக்கிரமித்து பாளயங்களாக்கி தங்கள் அரசியல் அதிகாரத்தை ஊன்றிக்கொள்ள தமிழனிடம் சாதி பேதங்களை உருவாக்கினான்.விஜயநகர பேரரசு முற்றிலும் பார்ப்பன வர்ணாசிரமத்தை அடிப்படையாக கொண்டது. 11ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் எங்கும் சாதி பேதங்கள் இல்லை.
தமிழ்ச் சமுதாயம் மூன்று வகுப்பினர்களைக் கொண்டது. 1.காவலன், வணிகன், சூத்திரன். அறிவோன் எந்த வகுப்பினராகவும் எந்த தொழில் செய்பவராகவும் இருக்கலாம். அறிஞர்களை,ஆன்றோர்களை, மக்கள் நலம் காப்பவர்களை மன்னனும், மக்களும் போற்றி வணங்கினர். போர்மரபினர்கள் காவலர்களாகவும், குறுநில மன்னர்களாகவும். பேரரசர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இங்கு போர்மரபினர் எனப்படுபவர்கள் முக்குலத்தோர், முக்குறுவார், முத்தரையர், வேளிர், கொங்கர், மலையமான், அதியமான், வேட்டுவர்(எயினர்), இன்னும் பலர். துலுக்கர் மற்றும்  நாயக்கர்கள் வரவால் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தொன்மையான தமிழ் குடிகள் அழிந்ததாக கூறுகின்றனர். இவர்கள் இராணுவம்,காவல் (போலீஸ்), கோட்டைக் காவல் வரிவசூல், அரச நிர்வாகம் போன்ற பொறுப்புகள் உள்ளவர்கள்.
வணிகர்கள் மிகப்பெரிய பன்னாட்டு வணிகர்களும், பெரும் வணிகர்களுமான, நானாதேசிக வணிகர்கள் என்றழைக்கப்பட்டார்கள். செட்டியார்கள் மட்டுமின்றி பரதவர்களும் செல்வாக்கு மிக்க வணிகர்களாக இருந்துள்ளனர்.
சூத்திரர்கள் தொழில் முறைகளை அறிந்த சூத்திரதாரிகள். இவர்கள் வலங்கை, இடங்கை என்ற இருபிரிவுகளால் அழைக்கப்பட்டனர். விவசாயம் அதைச் சார்ந்த தொழில்களைக் கொண்டவர்கள் வலங்கைகள். வெள்ளாளர்கள், பள்ளர்கள், உழவுத்தொழிலுக்கு கருவிகள் செய்யும் ஆசாரிகள், விவசாயப் பொருட்களால் வரும் எண்ணை, போன்றவற்றை விற்கும் வணிகர்கள் பனையேறுபவர்கள் போன்றவர்கள்,  இவர்கள் அரசனுக்கு வலப்புறம் அமர்வார்கள் . விவசாயத்திற்கு அப்பாற்பட்ட தொழில் செய்பவர்கள் இடங்கைகள் இடையர்கள், நெசவாளர்கள்,வண்ணார்கள், பறையர்கள் போன்றவர்கள் இவர்கள் அரசனுக்கு இடப்புறம் அமர்வார்கள். இன்னும் எண்ணற்ற தொழில்சார்ந்த தமிழினம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு  அரசவையில் அரசனுக்கு வலப்புறம், இடப்புறம் அமர்ந்து அரசாங்கத்தில் பங்கேற்று உள்ளனர்.
அதுமட்டுமல்ல மிகப்பெரிய கோவில்கள் தனிப்பட்ட collectorate ஆக சுதந்திர நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளது. இதுவே பின்னர் ஆதினங்களாக அழைக்கப்பட்டது. குடிமராமத்து, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி வளர்ச்சி இவையெல்லாம் இவர்களது பொறுப்பானது. இந்த கோவில்கள் அல்லது ஆதீனங்கள், அவர்களுக்கென்று தனிக் காவல் படைகளை, பிரிவினரை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் கோவில்கள் ஆதீனங்கள் வன்னியர்களை தங்களது கோயில் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுக்கும் வைத்திருந்தன.. குறிப்பாக தொண்டைமண்டலம் மற்றும் சோழ மண்டலம். வன்னியர்களை படையாட்சிகள் என்று அழைப்பார்கள்.வன்னியர்கள் போர்க்காலங்களில் படைகளுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் கவனித்ததால் இவர்களை படையாட்சிகள் என்றார்கள். கூகையூர் கல்வெட்டில் குறிப்பிடபடும் காவலர்கள் தனிப்பட்ட சிறு  காவலர்கள் ( watchman) . இராணுவம், போலீஸ் வேறு. முக்குலத்தோர் எந்தவகையிலும் வலங்கை,இடங்கை பிரிவுகளில் இல்லை.
சித்திரமேலி பெரியநாடு, குறுநில அரசுகள் போர்மரபினரை பாதுகாப்பிற்காக வைத்திருந்தனர்.  இவைப் போன்றே நானாதேசிக  வணிகமையங்கள் போர்மர்பினரை பாதுகாப்பிற்காக வைத்திருந்தனர். போர்க்காலங்களில் இந்தப் படைபிரிவுகள் பேரரசு படைகளுடன் சேர்ந்து கடல் கடந்தும் போருக்குச் செல்லும். பாண்டிய மண்டலத்தில் முக்குலத்தோரும், சேர மண்டலத்தில் நாயர்களும்  இராணுவத்தையும் காவலையும் மேற்கொண்டனர். இன்றளவும் இவர்களது ஆதிக்கம் இவ்விரு மண்டலங்களில் இருந்து வந்துள்ளது. ஆனால் காலத்தின் கொடுமையால் சோழ, தொண்டைமண்டலத்தில் அகம்படியரும் வேளிரும் இன்ன பிற போர்மரபினர்கள் செல்வாக்கு இழந்து காணாமற் போய் விட்டார்கள்.
இப்படிபட்ட விவசாயத்தைச் சார்ந்த சமுதாய அமைப்புகளே சித்திரமேலி பெரியநாடு, பிரம்மதேயம், ஆதீனங்கள், வணிகமையங்கள், இவைக்களது  நிர்வாகம்  குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்து வந்துள்ளது.அனைத்து வகுப்பு பிரதிநிதிகள் நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். (வகுப்புகள்தான் உண்டு, சாதி வேறுபாடு இல்லை.)வளமான காலங்களில் போர்க்காலங்களில் அதிக வரிகளும், பஞ்ச காலங்களில் குறைந்த வரிகளும் விதிக்கப்பட்டன. வரிகள் அந்தந்த சமுதாய அமைப்களின் கிராம, அதன் பொறுப்பில் இருக்கும் நிர்வாக வளர்ச்சிக்குமே செலவிடப்பட்டது. நீதியும் நிர்வாகமும் அந்தந்த சமுதாயத்திடமே இருந்தது.
Tamil society was more republic than autonomous. There was no caste discrimination.  -  that people were never associated with caste  as an  organization but they were integrated as caste within the society. – Burton Stein.
 இதுதான் தமிழினம், இதுதான் தமிழ் சமுதாயம்.. இதைப் புரிந்துக் கொண்டால் என் இளைய தலைமுறை நமது சகோதர சாதிகளை எப்படி மதித்து  வாழ வேண்டும் என்று அறிந்துக்கொள்ளும். இதைத்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வலியுறுத்தினார். இதைதான் தலைவர் பிரபாக்கரன் நடைமுறைப் படுதினார்.
ஆனால், தமிழகத்தின் தமிழனக் காவலர்களுக்கு தமிழ் சமுதாயம் துண்டுபடாவிட்டால் எங்கே துயர் துடைக்க முடியாமல் போகுமோ என்ற ஆதங்கத்தில் சாதீயில் நம்மை முக்கி மூழ்கடிக்கிறார்கள்.
 தமிழகத்தில் நடந்த முதல் சாதிக் கலவரம் எங்கு நடந்தது தெரியுமா?
பேரரசுகள் அழிந்து அவர்களின் பிரதிநிதிகளான போர்மரபினர் அழிக்கப்பட்டும், அதன் தலைமைகள் சிதறுண்டு போனபோது, வெள்ளாளர்கள் தங்களை மறைமுகமாக அதிகாரவர்க்கமாக நிலை நிறுத்திக் கொண்டார்கள். 1482-இல் தஞ்சை, திருச்சி தென்னாற்காடு அதாவது அன்றைய சோழ நாட்டில்  வெள்ளாளர்கள், வன்னியர்களின் துணையுடன், நாயக்கர்களை திருப்திபடுத்தவும், தங்களை அதிகாரிகளாக நிலை நிறுத்தவும் இடங்கை,வலங்கை பிரிவில் உள்ள 96 சாதிகளின் மீது வரிவசூல் மட்டுமல்ல சாதி வேறுபாடுகளையும் கொண்டு வந்தனர்.
இறையேலி பரப்பி, பந்தரவாடி, சீவிதபரப்பு  என்பதும் கோயில் நிலங்கள். இந்நிலங்கள் அடைப்பு – நீர்பட்டி என்று குத்தகையோ  சேர்வையோ, நில  வரிகளோ கிடையாது. இவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு இதனை இடங்கை,வலங்கை மக்கள் அனுபவித்து வந்தார்கள். நாடிழந்த ,துரத்தப்பட்ட நாயக்கர்கள் ( நாயக்கர்கள் என்பது  13ஆம் நூற்றாண்டில் தெலுங்கர், கன்னடர்,இருவரையும் சேர்த்தது). தலைமை இல்லாத தமிழகத்தில்  வெள்ளாளர்களைப் பயன்படுத்தினார்கள். தங்களைக் ஆண்டாண்டு காலம் காவல் காத்தவனைக் காட்டிக்கொடுத்து, வந்தேறிகளுக்கு வாசலை திறந்து வைத்து வெள்ளாளர்கள் ஆளா விரும்பியதால், வன்னியர்கள் தங்களை காவல்காரர்களாக உயர்திக்கொள்ள வெள்ளாளர்களுடன் இணைந்து பிற தமிழ்ச் சாதிகளை அடக்க நினைத்தார்கள். கொற்றவர்கள் மறைய, சொந்த சகோதரன் காட்டிக்கொடுக்க, பொருள் இழந்த நாயக்கனின் அநியாய வரிவசூல், தமிழகத்தில் முதல் சாதிக் கலவரம் அரங்கேர காரணமானது. இதன் பலன் 1. தமிழர்களிடம் அநியாய வரிவசூல், 2.தமிழர்கள் அனுபவித்து வந்த காணி நிலங்களைச் சூறையாடல், 3.தமிழ் சமுதாயத்தில் வேற்றுமையை உருவாக்கியது. வெள்ளாளர்களின் நாடாளும் ஆசையே தமிழினம் சிறுமைப்பட ஆரம்பித்தது.
ஒரு உண்மையை நாம் முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும். சிறு குழுவாக , மொழி தெரியாமல் வரும் வந்தேறிகள் உடனடியாக நாடு பிடிக்கவோ, நிலங்களை கைப்பற்றவோ முடியாது. உள்ளிருந்து துரோகம் செய்பவர்களாளேயே இனம் அடிமைப்படும்,வீழும்.
தென்பாண்டி மண்டலமும் பாண்டியனுமே தமிழினத்தை பல நூற்றாண்டுகளாக காத்து வருகிறார்கள். எந்தவொரு அந்நிய ஆட்சிக்கும் வட தமிழகம் என்றுமே எதிர்த்தது இல்லை என்பது ஏன் என்று யோசிக்க வேண்டும். சிறுபான்மையாக குறுநிலமாக இருந்தாலும் கொங்கு மண்டலம்  மேற்கில் தங்களது உரிமைகளை காத்து நின்று வருகிறார்கள். தெலுங்கு சோழர்கள் பின்னர் நாயக்கர்கள் வந்தபோதும் தலைவாசலை வடதமிழகம் திறந்து வைத்து வந்தாரை வாழ வைத்து தன் இனத்தை காட்டிக் கொடுக்க ஆரம்பித்தது.
நாயக்கர்கள் வரவால் முற்றிலும் அழிந்தது வீரமும் தீரமும் மிக்க பரதவர் குலம். டச்சுக்காரர்கள்,  போர்தூகீசியர்கள் தமிழ் கடலோரப்பகுதிகளை முற்றிகையிட்டபோது எந்தவொரு எதிர் நடவடிக்கையையும் நாயக்கர்கள் ஆட்சி மேற்கொள்ளவில்லை. மதத்தின் பேரால் போர்தூகீசியர்கள் தமிழர்களின் வாழ்வில் ஊடுருவதை வன்மையாக தடுத்து நிறுத்தியவர் இராமனாதபுர மன்னர் கிழவன் சேதுபதி. அதுமட்டுமல்ல நாயக்கர்களை அதிகாரத்தை மதுரை நகரத்துடன் தடுத்தவந்ததும் சேதுபதிகளே. மதுரையை முற்றுகையிட வந்த கன்னடர்களை மைசூர்  வரை விரட்டியடித்த புகழ் பெற்ற மூக்கறுப்பு போர் நிகழ்தியவர் கிழவன் சேதுபதி, மூக்கறுப்பு போரின் வெற்றிக்கு முழுக்கரணமானவர் தளபதி வயிரவன் சேர்வை அவர்கள். அவர் சேது மண்டலத்திலிருந்து படை திரட்டி சென்ற போது அவர் படையில் மறவர்களுடன் சேர்ந்து  போரிட்டு வெற்றியை , தமிழர் மானத்தைக் காத்தவர்கள் மதுரை வாழ் கள்ளர்கள், அகம்படியர்கள். எனவே முக்குலத்தோர் அநாவசியமாக தங்களுக்குள் உயர்வு தாழ்வு பார்க்க வேண்டாம். இன்றுவரை  அனைத்துவகை அரசியல் ஆதிக்கத்திலுமிருந்து தங்களை காத்து வருவது தொன்மையான போர்மரபினரான முக்குலம் என்பது சரித்திர உண்மை.
முக்குலத்தோர் போர் களங்களில் இருக்கும்போது அவர்களது நிலங்களையும் விவசாயத்தையும் குடும்பங்களையும் பாதுகாத்தது பள்ளர்களும், பறையர்களும்தான். இன்றைக்கும் நமது குலதெய்வ கோயில்களில் இவர்கள் பூசாரிகளாகவும், முதன்மை மரியாதைப் பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அரைகுறையாக வரலாறை அறியாமல் நமக்குள் சண்டை எதற்கு? ஆங்கிலேயர்கள் காலத்தில் சாணார்கள் அரசியல் ஆதாயம் பெறவும், பின்னர் காமராஜரின் அரசியல் சூழ்ச்சியிலும் ,பின்னர் வந்த திராவிடக் கட்சிகளின் அரசியல் பாதுகாப்பிற்காகவும் முக்குலதோருக்கும் பள்ளர்கள், பறையர்களுக்கும் இடைவிடாத வேற்றுமைகளை உருவாக்கி வருகிறார்கள்.
உலகின் தொன்மையான பல civilization-களில்  நடப்பதுதான் தமிழர்களுக்கும் நடந்து வருகிறது. தொடர்ந்து பல போர்கள், பல அந்நிய ஊடுருவல்கள் அரசியல் அடக்குமுறைகள் இவற்றை எல்லாம் கடந்து இன்றும் தமிழினம் வாழ்வது மிகப்பெரிய அதிசயம்தான். ஆனால் இன்றைய தமிழர்கள் மிக் மோசமாக மூளைச்சாளவை செய்யப்பட்டு உள்ளார்கள். நமது கலாச்சாரம் திராவிட இயக்கங்கள் மூலமாக முழுக்க முழுக்க dilute ஆகி செல்லுலாயிட் கலாச்சாரமாகிவிட்டது. நாயக்கர் ஆங்கிலயர்கள் காலத்தில் தமிழனுக்க் வீரம் இருந்தது இன்று வெறும் அலப்பறைகள்தான் உள்ளது.
இதிலிருந்து நாம் மீளவேண்டும் என்றால் மறைக்கப் பட்ட நமது வரலாறு, தெரிய வேண்டும். அன்னியர்களின் ஊடுருவல் எப்படி நிகழ்கிறது? நமது வசம் உள்ள நாடும், நிலமும் நம் ஆளுமையிலிருந்து  எப்படி பிரிந்தது? இன்றுள்ள தமிழ்நாட்டில் தமிழர்கள் மைனாரிட்டி மெஜாரிடியா ? வாட்டல் நாகராஜன் தமிழகத்திற்கு வந்து தமிழ் கல்வி கூடாது என்று சொல்வதற்கும், அந்த கன்னட காங்கிரஸ் MLA- க்கு  ஓட்டுப் போட்டது யார்?தமிழகளின் வழிகாட்டி வள்ளுவாரா,பெரியாரா? தமிழகத்தில் ஊடுறுவல் எந்த அளவு உள்ளது? தமிழகம் ஏன் குறுகி வருகிறது? தமிழர் வாழும் இடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருவது எதனால்? நமது தமிழினத் துரோகிகளை எப்படி அழிக்க வேண்டும்? அவர்களுக்கு நாம் ஏன் அரசியல் அங்கிகாரமும், அதிகாரமும் தரவேண்டும்? இவர்கள் பின்னால் இருந்துக் கொண்டு நம்மை அனைத்து விதத்திலும் கேவலப் படுத்தி  அழிக்கும் அடிமைகளை என்ன செய்யப் போகிறோம்? இதையெல்லாம் பற்றி அறிந்துக் கொள்ளாமல் ,அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது என்று யோசிப்பதை விட்டுவிட்டு நமக்குள் நாம் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்? அடக்கபட  வேண்டியவர்கள் யார்?
மற்றுமொரு சோகமான ,ஜீரணிக்க முடியாத விஷயம் என்னவென்றால், பல தமிழர் வரலாற்று ஏடுகள், ஆவணங்கள், ஒலைச்சுவடிகள், ஆடிப் பெருக்கு விழாவின் போது காவேரியிலும், கடலிலும்,ஆறுகளிலும் தூக்கி எறியப்பட்டு உள்ளது, பல கார்த்திகை தீபமன்று சொக்கப்பானையில் எரிக்கப்பட்டு உள்ளது, இவையெல்லாம் புத்திசாலித்தனமாக வழிபாடு முறைகளாக செய்துள்ளனர்.
நாயக்கர்கள் காலத்திலும், ஆங்கிலயர்களும் காலதிலும் தமிழினம் ஒன்றுப் பட்டு போராடியது. அன்று இனம் வாழ மாபெரும் மனிதர்கள் தங்கள் சொத்தையும் ,இன்னுயிரையும் தந்தார்கள். 1750-ளில் இருந்து பூலிதேவன், வேலு நாச்சியார், மருதுபாண்டியர்கள், அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை, ,அடுத்தகட்டமாக வேலூர் சிப்பாய் கிளர்ச்சி ,குற்ற பரம்பரை சட்ட எதிர்ப்பு ,அதன் அடுத்தகட்டமாக வ.உ. சி.சிதம்பரம் பிள்ளை ,பாரதியார், அடுத்தகட்டமாக பசும்பொன் தேவர், ஜீவானந்தம், தியாகி சுந்தரலிங்கம் போன்றவர்கள்  என்று  உழைக்கும் வர்க்கத்தினருக்காக, சாதாரண மக்களின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். தமிழினம் சாதி பேதமற்று ஒன்றுப்பட்டு போராடியது. யாரை மதிக்க வேண்டுமோ அவர்களை மதித்தது.
முன்னாள் முதல்வர் காமராஜர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், தமிழகத்தில், அரசியல் ரீதியாக சுதந்திரதிற்கு பிறகு, இன்றைய சாதி கலவரங்களுக்கு முதன்மையான காரணகர்த்தா அவர்தான். அதுமட்டுமல்ல தமிழகத்தின் நலனை பற்றி யோசிக்காமல் தனது சாதி நலனை முன்னிறுத்தி மோசமான அரசியலுக்கு வழி வகுத்தவர் என்பதும் அப்பட்டமான உண்மை . டெல்லிக்கு அடிமை அரசியல் எப்படிச் செய்வது என்பதற்கு முன்னுதாரணமும் அவரே. தமிழகத்தில், கள்ளமார்கெட், கருப்பு பணம், கலப்படம், விவசாயிகளிடம் அநியாய கமிஷன் மார்கெட்டும் உருவாக்கியதும் அவரே. தென் மாவட்டங்களில் எந்தவித வளர்ச்சி பணியும் இல்லாமல் செய்தவரும் அவரே, இத்தனை செய்தவரையும் அவரது கட்சியையும் , பத்திரிக்கைகள் ஆயிரம் புகழ்ந்தாலும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதற்கு முன்னுதாரமும் அவரே.  இது வரலாறு. மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.
பதினோராம் நூற்றாண்டில் இருந்து தமிழினம் மெல்ல மெல்ல தனது  அரசியல், பொருளாதார,சமூக நிலைகளில் இருந்து கடை நிலைக்கு குறுகி வருகிறது. இந்த மாற்றம் அதே சூழ்நிலையில் வெவ்வேறு பரிணாமங்களில் இன்றளவும் தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. வரலாறு என்பது ராஜராஜ சோழன் பெருமையை பேசுவதோ,  முக்குலத்தவர்கள் சாதிப் பற்றோ, வெள்ளாளர்களை குற்றம் சொல்வதோ, வன்னியர்களை குறைச் சொல்வதோ அல்ல. நம் இனம் எப்படி அழிந்தது, இன்றளவும் எப்படி அழிக்கப்பட்டு வருகிறது என்பதுதான். வரலாறுகளின் உண்மையை அறிய வேண்டும். 700 நூறு ஆண்டுகளாக திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட தமிழக வரலாறு இன்று தனது உண்மை சொருபத்தை கொஞ்சமே கொஞ்சமே வெளிக்காட்டுகிறது. அதனைப் அப்படியே ஏற்றுக்கொண்டு அதனை புரிந்துக் கொண்டு நம் சந்ததிகளை பாதுகாக்க வேண்டும். இனத்தை பாதுகாக்க வேண்டும்.
நாயக்கர்கள் காலத்தில், வெள்ளாளர்கள் , ஆங்கிலேயர்கள் காலத்தில் சாணர்களும், காங்கிரஸ், திராவிட கட்சிகளின் காலத்தில் பள்ளர்களும் ,பறையர்களும் சலுகைகளுக்காக,பதவிக்காக  வந்தேறிகளுக்கு அடிமைப்பட்டு தமிழினத்தின் அழிவுக்கு காரணமாகி வருகிறார்கள்.  பின்னர் தங்கள் இனத்திலே   தனிமைப்பட்டு விடுகிறார்கள்.  இவர்களின் அரசியல் போக்கால் அழிவது அனைவரும்தான். சிறுபான்மையான பிராமணர்கள் ஆள்பவர்களின் தயவுடன் தமிழகத்தில் தங்களை நிலை  நிறுத்திக் கொண்டார்கள்.   திராவிட கழகங்களின் அரசியல் பலத்திற்கு தமிழினம் சாதிச் சண்டையில் அழிகிறது. முட்டாள்கள் நாம்தான்.
ஆதாரம் -கூகையூர் கல்வெட்டு தென்னாற்காடு. Society: India – Democracy and Development and  Society. Inequality:     Caste and  Class by Ely Chinoy:  ElyChinoyRandomHousepublication.Newyork. 1962. At the Threshold of  Untouchability : Pallars and Valayars in a Tamil Village. by Robert Delie’ge : Caste Today. Edited by C.J. Fuller: SOAS Centre of South Asian Studies.Oxford India Paperbacks.1997. Caste in Contemporary India: by Andre’ Be’teille. : Recasting Tamil Society: The Politics of Caste Race in Contemporary Southern India: by Nicholas B. Dirks : Caste Today. Edited by C.J. Fuller SOAS Centre of South Asian Studies. Oxford India Paperbacks Feudatories of South India 800-1070A.D by Dr. V. Balambal, Dept of  Indian History, University of Madras: Dr. V. Balambal.Feudatories of South India 800-1070A.D. Chugh Pulication. . ALL THE KINGS’ MANA. Papers on Medieval South Indian History: by Burton Stein :  Burton Stein . New Era Publications.Madras.1984.  A History of South India’, K. A. Nilakanta Sastri (2003).

Thanks to   http://theflashpointindia.wordpress.com/2013/02/15/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5/

வட்டார வரலாற்றுச் சுவடிகள்

கர்னல் காலின் மெக்கன்சி, தென்னிந்தியப் பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் பல வட்டார வரலாறுகளைத் தொகுத்துள்ளார். இந்த ஆவணங்கள் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் வைக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் சில பதிப்பிக்கப்பெற்று வெளியிடப்பட்டுள்ளன. இத்தொகுப்புகள் சு.சௌந்திரபாண்டியன் அவர்களால் பதிப்பிக்கப் பெற்று, அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு நூலாக்கம் பெற்றுள்ள வரலாற்றுத் தொகுப்புகளின் தரவுகளைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
-           தொண்டை மண்டல வரலாறுகள் (1997)
-           சோழ மண்டல வரலாறுகள் (1999)
-           பாண்டிய மண்டல வரலாறுகள் (1997)
-           கொங்கு மண்டல வரலாறுகள் (1997)
ஆகிய தொகுப்புகள் அந்தந்த பகுதி சார்ந்த புரிதலை ஓரளவு ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, எழுதப்பட்ட வரலாறுகள் பல இம்மண்டலங்கள் குறித்து பதிவு செய்திருந்தாலும் இதுவரை அறியப்படாத பல வரலாற்றுத் தரவுகளை இத்தொகுப்புகள் ஆவணப்படுத்தியுள்ளன. இதனைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
தொண்டை மண்டலத்தின் வரலாறு, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து தொடங்குகிறது. இதற்குப் பல வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. இத்தகைய வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டுள்ள தொண்டை மண்டலத்தை, முதற்பல்லவன், சிம்மவிஷ்ணு போன்ற பல்லவ மன்னர்கள் ஆட்சி செய்துள்ளனர். இதனை சதாசிவப் பண்டாரத்தார் முதலியோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு எழுதப்பட்ட வரலாறுகள் பல தொண்டை மண்டலத்தைப் பதிவு செய்திருந்தாலும் அறியப்படாத சில தகவல்களை ‘தொண்டை மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பு ஆவணப்படுத்தியுள்ளது. இத்தொகுப்பில் 17 சுவடிகளின் விவரணங்கள் தொகுக்கப்பட் டுள்ளன.
இதில் தொண்டை மண்டல வரலாறுகள், மருதங் குறும்பர் கோட்டை வரலாறு ஆகிய சுவடிகள் குறும்பர்கள் பற்றிய குறிப்புகளைத் தருகின்றன. குறிப்பாக, தொண்டை மண்டல வரலாறுகள் எனும் சுவடியில்,
-           கர்நாடகாவில் இருந்த குறும்பர்கள் எவ்வாறு தொண்டை மண்டலத்திற்கு வந்தனர்
-           குறும்பர்கள் புகலூர்க் கோட்டை உட்பட பிற கோட்டைகளைக் கட்டிய வரலாறு
-           ஆதொண்டைச் சோழன் குறும்பர்களை வென்று தனது சோழ ஆட்சியை நிறுவிய குறிப்புகள்
போன்ற செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், குறும்பர்கள் சமண மதத்தைப் பரப்ப முயன்ற கருத்துகள் உள்ளன. இதன்மூலம், குறும்பர்களின் வரலாற்றில் சைவ- சமண மதப்பூசல் ஓர் இன்றியமையாத இடத்தைப் பெறுவது குறிப்பிடத்தக்கது. மேலும், வேளாளர்கள், வடுகர்கள், மறவர்கள், வாணாதிராயர்கள், சேதுபதிகள், தெலுங்கு நாயக்கர்கள், பயிராவிகள், சுல்தான்கள், தஞ்சை/மதுரை நாயக்கர்கள், ஆற்காட்டு நவாபு ஆகியவர்களின் குறிப்புகள் இதில் உள்ளன. இதன் மூலம், தொண்டைமண்டலம் பல்வேறு அரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இயங்கி வந்துள்ளமையை அறிந்துக்கொள்ளலாம். விஜயாலய சோழன் அபராஜித பல்லவனை வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினான் என்பது எழுதப்பட்ட/ அறியப்பட்ட வரலாறு. இக்கருத்திற்கு முரணாக, குலோத்துங்க சோழன் என்பவன் தொண்டை நாட்டை உருவாக்கினான் என்பதை ‘பண்டைய மும்மண்டல மன்னர்களின் வரலாறு’ எனும் சுவடி பதிவு செய்துள்ளது. இதில் அரசாட்சி முறை, அரண்மனை முறை, படைமுறை, புதியதாக ஓர் ஊர்/நாட்டை எவ்வாறு உருவாக்குவது, வரகுண பாண்டியனின் ஆட்சிக்காலத்தில் சோழநாடு முழுவதும் எவ்வாறு பாண்டியர்களின் கீழ் இயங்கியது போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருக்கழுக்குன்றம், திருவள்ளூர், பெரியபாளையம் ஆகிய கோயில்களுக்கு ஆங்கிலேயக் கம்பெனியார் செய்த ஆலயப்பணிகள் / தருமங்களை திருப்பாலை வனம் எனும் கைபீதும் சித்தாமூர் சமண மடத்தின் வரலாற்றை சித்தாமூர்க் கைபீதும் குறும்பர்களை வென்ற ஆதொண்டைச் சோழன் பற்றிய குறிப்புகளையும் காத்தவராயன், சேதுராயன் ஆகியோர் கட்டிய கோட்டைகளின் விவரணங்களையும் திருவிடைச் சக்கரம்கோட்டை வரலாறு எனும் சுவடியும் குறிப்பிடுகிறது. அதேபோல, வேலூர்க் கோட்டையை ஆட்சி செய்த இசுலாமியச் சிற்றரசர்கள் பற்றியும் வடஆற்காடு பகுதிகளில் நாயக்கர்கள்
எவ்வாறு சிற்றரசர்களாகத் தொழிற்பட்டுள்ளனர் என்பதை வேலூர் துலுக்கப் பிரபுக்கள் வம்சாவளி எனும் சுவடி ஆவணப்படுத்தி யுள்ளது.
தொண்டை மண்டல வரலாற்றில் ஆற்காடு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஆற்காட்டுப் பகுதியில் காணப்படும் ஊர்கள்/ இசுலாமியர்கள் தொடர்ந்து இப்பகுதியில் இருப்பதற்கான காரணங்கள் போன்றவைகளை ‘ஆற்க்காட்டுப் பூர்வீகச் சரித்திரம்’ எனும் சுவடி குறிப்பிடுகிறது. இசுலாமிய அரசர்கள் தமிழகத்தின் மீது படையெடுத்த போது இந்துக் கோயில்களின் மண்டபங்கள் எவ்வாறு மசூதியாக்கப்பட்டன என்பன போன்ற செய்திகளை திருக்கழுக்குன்றக் கைபீது விளக்குகிறது. மேலும், பொன்விளைந்த களத்தூர், கள்ளப் புலியூர், அழிபடைதாங்கி, பல்லாவரம், மாமல்லை ஆகிய ஊர்களின் வரலாற்றுப் பின்புலங்களையும் இத்தொகுப்புச் சுவடிகள் கட்டமைத்துள்ளன. இவ்விதமாக, தொண்டைநாடு தமிழ்ச்சமூக இயங்குதளத்தில் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது.
‘சோழ மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பில் 6 சுவடிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இங்கு பதிப்பிக்கப்பட்டுள்ள சுவடிகளின் காலம் பொதுவாகக் கி.பி.19 ஆம் நூற்றாண்டாகும். குறிப்பாகச் சோழமன்னர் மகத்துவம்/சோழ தேசத்துப் பூர்வீகச் சரித்திர வியாக்கியானம் ஆகிய சுவடிகளின் காலம் கி.பி. 1810 ஆகும்.
சோழமன்னர் மகத்துவம் எனும் சுவடியில்,
-           பவிஷ்யோத்திர புராணத்தில் வடமொழியில் பதிவு செய்யப்பட்ட சோழர் பற்றிய வரலாற்றைத் தமிழில் சரபோசி மன்னன் எழுதியுள்ள செய்தி
-           இருவேறு சாதிகளைச் சேர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் பிறந்தவர்களே சேர, சோழ, பாண்டியர்கள்
-           குலோத்துங்க சோழன், தேவசோழன், சசிசேகர சோழன், சிவலிங்கசோழன் போன்ற 16 சோழர்களின் விவரணங்கள்/ கோயிற்பணிகள்
-           பீமசோழன் ஏற்படுத்திய அன்னசத்திரங்கள் / அறச்சாலைகள்
-           இராசேந்திர சோழன் கட்டிய கோயில்களின் பட்டியல்
போன்றவைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, தஞ்சைப் பெரிய கோயிலை முதலாம் இராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டது என்பது வரலாறு. ஆனால், கரிகாலன் என்று சுவடியின் குறிப்புகள் உள்ளன. இது வரலாற்றிற்கு முரணான கருத்தாகு மெக்கன்சி, சோழ மன்னர்களைக் குறித்துக் கேட்ட வினாக்களுக்கு விடைதரும் வகையில் ‘சோழதேச பூர்வீக சரித்திர வியாக்கியானம்’ எனும் சுவடி உள்ளது. இதில், சேர, சோழ, பாண்டியர்களின் வருமானம்/சோழ நாட்டின் வளங்கள் முதலியன குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் சைவர்களுக்கு முன் சமணர்களே தமிழை வளர்த்தனர் என்றும் பல சைவக் கோயில்கள் முன்பு சமணக்கோயில்களாக இருந்தன என்றும் குறிப்புகள் உள்ளன. இதனையடுத்து நாயக்க / மராட்டிய அரசர்களின் தகவல்களும் தேரூர்ந்த சோழன் கதையும் இடம்பெற்றுள்ளன.
சோழ, சேர, பாண்டிய மன்னர்கள் வமிசாவளி எனும் சுவடி, 66 - சோழர்கள், 50 - சேர அரசர்கள், 70 - க்கும் மேற்பட்ட பாண்டிய மன்னர்கள், 70 - பாளையப்பட்டுக்களைக் குறிப்பிடுகின்றது. மேலும் மறவர்/ கவுண்டர் பாளையங்கள் குறித்தும் 25 கோட்டைகளின் பட்டியல்களும் உள்ளன. ‘ஸ்ரீரெங்கம், திருச்சிராப்பள்ளியார் சொன்ன உத்தரவுகள்’ எனும் சுவடி வினா-விடை அமைப்பில் உள்ளது. இதில், 115 - க்கும் மேற்பட்ட தமிழகக் கோயில்களின் பட்டியல்களும் சோழ, பாண்டிய/ கொங்கு மண்டலங்களின் எல்லைகளும் சுருக்கமாகக் கூறப்பட்டுளளன. சந்திரவம்ச வரலாறு எனும் சுவடி, சூரியவம்சம், சந்திரவம்சம், சந்திர - சூரிய வம்சங்களைப் பற்றி குறிப்பிடுகிறது. இதனையடுத்து, 23 - சோழர்களின் பட்டியல் காணப்படுகின்றது. மேலும், தொண்டைச் சோழன், தொண்டை நாட்டை ஏற்படுத்தியவன் என்றும் தெற்கே இருந்த குடிகளை அழைத்து வந்து தொண்டை நாட்டில் குடியேற்றினான் என்றும் குறிப்புகள் உள்ளன. இவ்வாறு தமிழகத்தில் நடைபெற்றுள்ள பல்வேறு மக்களின் குடியேற்றங்களை ஆராய மெக்கன்சியின் சுவடிகள் பெரிதும் பயன்படுகின்றன. சம்புகேசுவரத் தலமகாத்மியம் எனும் சுவடி, திருவானைக்காவல் பற்றியது. குறிப்பாக, அகத்திய தீர்த்தம், இராமதீர்த்தம், அக்னி தீர்த்தங்களுக்கு பெயர்க்காரணம் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘பாண்டிய மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பில் 14 சுவடிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பசுமலை வரலாறு, கூத்தநாச்சித் தோப்பில் சந்தை கூடின விவரம் எனும் சுவடிகள் புராணக்கதைகளை தத்துவ அடிப்படையில் விளக்குகிறது. கம்பம் கிராமம் உண்டான வரலாறு எனும் சுவடி பராக்கிரபாண்டியனைப் பற்றியும் ஓரிடத்தில் கோயில் எவ்வாறு உருவாக்கப்படுகிறது எனும் தகவல்களையும் பதிவு செய்கிறது. சின்னமனூர் அக்கிரகார வரலாறு, இராஜசிம்ம பாண்டியன்/ சின்னம நாயக்கனைப் பற்றியும் பூலாவினேஷ்வர சுவாமி வரலாறு, வீரபாண்டியனைப் பற்றியும் குறிப்பிடுகிறது. உத்தம பாளையம் உண்டான வரலாறு எனும் சுவடியில்,
-           கல்லையதாச நாயக்கன் எனும் பாளையப்பட்டு சிற்றரசன் உத்தம பாளையத்தை ஆட்சி செய்த விதம்         வடமாநிலத்தைச் சேர்ந்த கன்னார்கள் உத்தம பளையத்தில் செய்த வணிகம் போன்ற தகவல்கள் உள்ளன.
சுரபிநதி வரலாறு, காளத்தீஸ்வர சுவாமி புராண வரலாறு, தேவாரம் பாளையப்பட்டு சோலைமலை அழகர் தலபுராண வரலாறு, கோம்மைப் பாளையப்பட்டுத் திருமலைராயப் பெருமாள் தலபுராண வரலாறு ஆகிய சுவடிகள் அந்தந்த தலத்தின் பெயர்க்காரணம் / வரலாற்றுப் பின்புலத்தை விளக்குகின்றன. நீர் நிர்வாகத்தின் பொறியியல் நுட்பங்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்கு முதுகுளத்தூர்ப் பகுதி மக்கள் விண்ணப்பம் எனும் சுவடி பதிவு செய்துள்ளது.
-           பாண்டியர்கள் சந்திரவம்சச் சத்திரியர்கள்
-           குலசேகர பாண்டியன், மலயத்துவச பாண்டியன், தடா தகாதேவி (கணவன்- சுந்தர பாண்டியன்), உக்கிர பாண்டியன், வீரபாண்டியன், அபிஷேக பாண்டியன், விக்கிரம பாண்டியன், ராஜசேகர பாண்டியன் ஆகியவர்களைப் பற்றிய குறிப்புகள்
-           தமிழர் போர் முறை, மண்டலம், படலம், அரைச்சந்திர வியூக முதலிய படைநிறுத்தங்கள்
போன்றவைகளை பாண்டியச் சரித்திரம் எனும் சுவடியின் மூலம் அறியலாம். ஏமநாயகி எனும் தாசியின் கதை, ஒன்பது இரசங்கள் இலயம், இரசவாதம், சுந்தரேசுவர பாத சேவக பாண்டியன் மீது சோழ அரசன் படையெடுத்த வரலாறு குறித்தும் குறிப்புகள் உள்ளன. தாமிரபரணி மகாத்மியம் எனும் சுவடி, திரிகூடமலைப் பகுதியில் காணப்படும் 18 தீர்த்தங்கள்/ 9 சிவாலயங்களின் பட்டியல்களைத் தருகிறது. குறிப்பாக, சிவசன்மா, சாந்தன், விருத்தாசுரன், அருச்சுனன் போன்றவர்களின் கதைகளும் இடம்பெற்றுள்ளன.
‘கொங்கு மண்டல வரலாறுகள்’ எனும் தொகுப்பில் 38 - சுவடிகள் இடம் பெற்றுள்ளன. சிவகிரி சுப்பிரமணியசுவாமி தல வரலாறு, தான்தோன்றிக் கிராமத் தேவஸ்தான வரலாறு, தூரம் பாண்டிக் கிராமக் கோயில் வரலாறு, முன்னூர்க் கிராமக் கோயில் வரலாறு, திண்டுக்கல் தருமராசர் கோயில் திருநாள் வரலாறு, அகரத்து முத்தாலம்மன் வரலாறு, பேகம்பூர் பள்ளிவாசல் வரலாறு, பழனித் தல வரலாறு ஆகிய சுவடிகள் அந்தந்த தலங்கள் உருவான வரலாற்றை புராணங்களின் பின்புலத்தோடு விவரிக்கின்றன.
-           கொங்கு மண்டலம், கோயமுத்தூர், புலியூர், திருமுக்கூடல், புன்னைவனம், பஞ்சமாதேவிக் கிராமம், வேட்டை மங்கலம், வாங்கல், பவித்திரம், குப்பம், புகளூர் ஆகிய ஊர்களின் வரலாற்றுத் தரவுகளையும் இத்தொகுப்புச் சுவடிகள் முன்னிறுத்துகின்றன.
குறிப்பாக, ஊற்றுக்குளி பாளையக்காரர் காலிங்கராய கவுண்டனுக்கு எழுதிய கடிதத்தில்,
-           தமிழகத்தில் நிலவிய ஆங்கிலேயர்களின் ஆட்சி முறைமை
-           ஆங்கிலேயர் காலத்துத் தமிழகத்தின் போர்நிலை போன்ற செய்திகள் உள்ளன.
கொங்கு மண்டல வரலாறு எனும் சுவடியில், கொங்கு மண்டலத்தில் 42 நாடுகள் இருந்ததாகக் குறிப்பு உள்ளது. ஆனால் 37 நாடுகளின் பெயர்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. மேலும், சேரமான் பெருமான் எனும் அரசன், திருக்காளத்தில் இருந்து 14 ஆயிரம் வேடர்களை அழைத்து வந்து கொங்கு மண்டலத்தில் குடியமர்த்திய செய்திகளும் இதில் உள்ளன. மசகூர் மகாசனங்கள் கைபீது, மசகூர் தேனீசுவரசுவாமியின் வரலாற்றையும் ஹைதர் அலி, திப்புசுல்தான் / மதுரை மன்னர்களின் ஆதிக்கத்தையும் குறிப்பிடுகிறது. இதேபோல, அகத்தியல், குலசேகரபாண்டியன், ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியவர்களைப் பற்றி கொடுமுடி தேவத்தானக் கைபீது பதிவு செய்துள்ளது.
திண்டுக்கல் நகரத்து வியாபார வரலாறு எனும் சுவடி, பாண்டிய மண்டலத்தில் நிலவிய வியாபாரக் கூறுகள்/ பொருட்களைப் பட்டியலிடுகிறது. இந்த வியாபார முறையே, 300/400 ஆண்டுகளுக்கு முன் பாண்டிய மண்டலத்தில் நிலவியிருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது. இவ்வாறாக இத்தொகுப்புகளின் வழி கொங்கு மண்டலப் பகுதிகளின் வரலாற்றுத் தரவுகளை ஓரளவு தொகுத்துக் கொள்ளலாம்.
பொதுவாக மேற்கண்ட மண்டலங்களின் வரலாறுகள் குறித்துப் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. எனினும், இத்தொகுப்பில் பதிப்பிக்கப்பட்டுள்ள மெக்கன்சியின் ஆவணங்களில் அரிய வரலாற்றுக் குறிப்புகள் / பண்பாட்டுச் செய்திகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. மேலும், வரலாறு/ பண்பாடு ஆகியவற்றிற்காக மட்டுமில்லாது உரைநடை போன்ற தமிழ்மொழிக் கூறுகளுக்காகவும் இத்தொகுப்பு பதிப்புகள் உதவுகின்றன. குறிப்பாக, 17-19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த மக்களிடையே, வரலாறுகள் குறித்த புரிதல்கள் எவ்விதம் இருந்தது என்பதனை இச்சுவடிகள் உணர்த்துகின்றன. இதன்மூலம், மேற்கண்ட மண்டலங்களில் நடைபெற்று வந்த தமிழ்ச்சமூகத்தின் இயங்கு முறைக் குறித்த தகவல்களை ஓரளவு கட்டமைத்துக் கொள்ளலாம்.

வரலாறு தொடர்பான சுவடிகள்

அரசு அதிகாரியாக இருந்த காலின் மெக்கன்சி தென்னிந்தியாவின் வரலாற்றை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார் என்பதை அவருடைய சுவடிகள் வழி அறியமுடிகிறது. வரலாற்று விடயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தபோதும் மெக்கன்சியின் உதவியாளர்கள் பல்வேறு விடயங்கள் குறித்த தரவுகளையும் சேகரித்தனர். இதனால் மெக்கன்சி சுவடிகளில் வரலாற்றுச் சுவடிகளோடு பிற வகையான சுவடிகளும் இடம்பெறத் தொடங் கியது. தென்னிந்தியாவின் வரலாறு தொடர்பான விடயங்களை அறிந்துகொள்வதுதான் மெக்கன்சியின் முதன்மையான நோக்கமாக அமைந்திருந்தது. அவருடைய இந்நோக்கம் மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகளை மட்டும் தொகுத்து வெளியிட்டிருக்கும் இந்நூல் வழி முழுமையடைகிறது.
மெக்கன்சி வரலாற்றுச் சுவடிகளில் சமகால வரலாறும் அதற்கு முந்தைய காலப் புராதன வரலாறும் ஒருங்கே இடம்பெற்றுள்ளன. 16ஆம் நூற்றாண்டு முதல் 19ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் நிலவிய அரசியல், சமூகம், சமயம் ஆகியவற்றை இச்சுவடிகளின் வாயிலாகத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். மெக்கன்சி சுவடிகளில் வரலாற்றுச் சுவடிகளை மட்டும் எடுத்துக்கொண்டு அதனை வகைதொகை செய்து டி.வி.மகாலிங்கம் இரண்டு தொகுதிகளாகப் பதிப்பித்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகம் வெளியீடாக 1972ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளிவந்தது. இந்நூலின் முதற்தொகுதி 2011ஆம் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகளைத் தொகுத்தளித்துள்ள இந்நூல் தென்னிந்திய வரலாற்றினை அறியும் ஆவணமாக விளங்குகிறது. மெக்கன்சி சுவடிகள் எத்தகைய நிலைகளில் தென்னிந்திய வரலாற்றினைக் கட்டமைத்துள்ளது என்பதை உணரும் வகையில் டி.வி. மகாலிங்கம் எளிய முறையில் இந்நூலில் வகைதொகை செய்துள்ளார். மேலும் ஒவ்வொரு சுவடியை விளக்குமிடத்தும் அந்தச் சுவடி வில்சன், டெய்லர் இருவருடைய அட்டவணைகளில் எங்கு இடம்பெற்றுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
மெக்கன்சி சுவடிகள் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி முதலிய தென்னிந்திய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் வழங்கிய சுவடிகளை மட்டும் முதல் தொகுதியில் டி.வி. மகாலிங்கம் தொகுத்துள்ளார். தெலுங்கு, கன்னட மொழிகளில் வழங்கும் சுவடிகளை இரண்டாம் தொகுப்பில் பேசியுள்ளார். முதல் தொகுப்பாக வெளிவந்த இந்நூல் தமிழ், மலையாளம் சார்ந்த 86 சுவடிகள் குறித்து ஆராய்ந்துள்ளது. சுவடியில் பயன்படுத்தப்பட்டுள்ள தென்னிந்திய மொழிகள் என்பவை அந்த மக்களுக்குரிய செய்திகளை மட்டும் எடுத்துரைப் பதாக அமையவில்லை. மெக்கன்சியின் உதவியாளர்கள் தாங்கள் அறிந்த மொழிகளில் குறிப்புகளை எடுத்துள்ளனரே தவிர மக்களுக் குரிய மொழிகளில் அவற்றைப் பதிவுசெய்யவில்லை என்பதை அறியமுடிகிறது. எடுத்துக்காட்டாக, தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ள சுவடிகளில் தமிழ்நாட்டு வரலாற்றுக் கூறுகள் இடம்பெறுவதைக் குறிப்பிடலாம்.
மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகள் குறித்து மகாலிங்கம் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் மெக்கன்சி சுவடிகள் தொடர்ந்து ஆராய்வதற்கான களத்தைத் தனக்குள் கொண்டு விளங்குவதைச் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய தொகுப்பு முயற்சிகள் ஆவணப்படுத்துதலாக அமைந்த போதிலும் தொடர்ச்சி யான ஆய்வுகளுக்குரிய தரவுகளாகவும் விளங்குகிறது. மெக்கன்சி யின் சுவடிகளைத் தொடர் ஆய்வுகளுக்கு உட்படுத்துவதன் மூலம் தென்னிந்தியா பற்றிய இலக்கியம், வரலாறு, பண்பாடு குறித்த முழுமையான புரிதலைப் பெற முடியும்.
மெக்கன்சியின் சுவடிகளைப் பொதுவாக, சரித்திரம், வமிசாவளி, தலபுராணம், கைபீயது (வரலாற்றுச் செய்திகள்), தலச்செய்திகள் என்று பொருண்மை அடிப்படையில் பாகுபடுத்தலாம். இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகள் பொதுவாக அரசியல், இலக்கியம், வரலாறு, சமயம், சமணம் தொடர்பான செய்திகள், கோவில்கள், வாழ்வியல் முறை, சாதியமைப்புகள், சேர, சோழ, பாண்டியர் வரலாறு, நாயக்கர் வரலாறு, பாளையக்காரர்கள், பழங்குடி மக்கள் முதலிய செய்திகளை எடுத்துரைக்கிறது.
மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகள் (தமிழ், மலையாளம்) இவற்றில் காணப்படும் விடயங்களைப் பின்வரும் பிரிவுகளின் கீழ் 86 சுவடிகளையும் டி.வி.மகாலிங்கம் தொகுத்துள்ளார். பிரிவுகளும் எண்ணிக்கையும் பின்வருமாறு:
·           வட்டார நிகழ்வுகள் (தமிழ்)           -     32
·           வட்டார வரலாறு மற்றும் மக்கள் வரலாறு -     26
·           புராண, இதிகாச தலவரலாறு          -     10
·           சமண இலக்கியம்               -     8
·           வட்டார நிகழ்வுகள் (மலபார்)         -     12
{Local Tracks (Tamil) 32, Local History and Biography 26, Puranic and Legendary History (Tamil) 10, Jain Literature (Tamil) 8, Local Tracks (Malabar) 12} 
இந்த வகைப்பாட்டின் மூலம் தமிழ், மலையாளம் சார்ந்த சுவடிகளில் அதிகமாகத் தமிழ் சுவடிகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கிடைக்கின்ற மெக்கன்சி சுவடிகளில் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டுள்ள சுவடிகளே அதிகமாகக் காணப்படு கின்றன. இத்தொகுப்பின் முன்னுரையில் மெக்கன்சி வரலாற்றுச் சுவடிகளில் காணப்படும் மிக முக்கியமான கூறுகளை மகாலிங்கம் விளக்கியுள்ளார். மேலும் இத்தொகுப்பில் இடம்பெறாத இரண்டாம் தொகுதியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு, கன்னடம் மொழிகளில் எழுதப்பட்ட சுவடிகளைக் குறித்தும் விவரித்துள்ளார்.
· · ·
மெக்கன்சியின் வரலாற்றுச் சுவடிகளை ஆய்வுநிலையில் ஆராயவும் மறுவாசிப்புக்குட்படுத்தவும் என்று அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல இத்தொகுப்பு பயன்படும். இத்தொகுப்பில் ஒவ்வொரு சுவடியைக் குறித்தும் சுருக்கத்தினைத் தருவதோடு சுவடிகளில் காணப்படும் விடயங்களை உட்தலைப்புகளாகப் பிரித்துக் கொண்டு அளித்துள்ள முறைமை அச்சுவடி குறித்த எளிதான புரிதலை ஏற்படுத்துகிறது. இத் தொகுப்பில் நூல்கள் பற்றிய குறிப்புகளில் மிக அதிக மாகப் பதிப்பிக்கப்பட்ட நூல்களுக்கு விவரணங்கள் தரவில்லை. எடுத்துக்காட்டாக, கலிங்கத்துப்பரணி, மூவருலா, தொண்டை மண்டல சதகம் முதலிய வற்றைக் குறிப்பிடலாம். சில நூல்களுக்கு மேலான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, ‘தமிழ் பெருமாள் சரித்திரா’ சுவடியை விளக்குமிடத்தில் இக்கதை பல்வேறு நிலைகளில் வழங்குவதாகவும் நூலாகப் பதிப்பிக்கும் போது இந்நூலின் பெயர் ‘தமிழ் அறியும் பெருமாள் கதை’ என்று மாறியதையும் இந்நூல் உரைநடையில் அமைந்துள்ள விவரத்தையும் இறுதி யில் 50 வெண்பாக்களோடு நூல் முடியும் இடத்தில் அந்த வெண்பாக்களுக்கான விளக்கங்கள் தரப்பட் டுள்ளன என்று குறிப்பிடுகிறது.
மெக்கன்சி சுவடிகளில் பழங்குடி மக்களின் சடங்குகள், நம்பிக்கைகள், வாழ்வியல் முறை போன் றவை விளக்கப்பட்டுள்ளன. இவற்றை இன்றையச் சூழலோடு பொருத்திப் பார்த்துப் பழங்குடி மக்களின் வாழ்வியல் முறை அமைப்புகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளனவா என்பதையெல்லாம் ஆராய இந்தத் தரவுகள் ஆதாரமாக விளங்குகின்றன. எடுத்துக் காட்டாக, குறும்பர், வில்லியர், இருளர், ஏனாத்தியர், குறவர், இலம்பாடி, பட்டணவர், செம்படவர், குன்னுவார் போன்ற பழங்குடி மக்களின் வாழிடம், வரலாறு, வாழ்வியல்முறை, சடங்குகள், நம்பிக்கைகள், நீதிமுறை, பண்பாட்டுச் செயல்கள் ஆகியவை தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. சில சுவடிகளில் பழங்குடி மக்களான குன்னுவர் இனத்தைச் சேர்ந்த கொங்கு வேளாளரின் சடங்குகள், பழக்க வழக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலையர், வேடர், கைகோளர், கோமட்டிகள், ரௌத்திர்கள் முதலிய பழங்குடி மக்கள் குறித்த விவரணங்களும் ஆற்காடு பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் விகிதமும் குறிப்பிடப்பட்டுள்ளன.
“மறவர் சாதி கைபீது” சுவடி மறவர் இனத்தின் உட்பிரிவுகளும் மணமுறைகளும் விதவை மறுமணம் மறவருடைய திருமண சடங்குகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது. கட்டுத்தாலி, சிக்குக்கழித்த கல்யாணம் போன்ற சடங்குகள் மறவர் இனத்தில் நடைபெறும் முறையை விவரிக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் ஒவ்வொரு சாதிகளுக்குமான மணமுறை குறித்த விளக்கங்களும் தாலி குறித்தான கருத்தாடல்களும் மெக்கன்சி சுவடிகளில் வெளிப்பட்டுள்ளன.
மக்களின் குடிகளையும் இனங்களையும் ஆராய்வதற்குரிய தரவுகளாக இச்சுவடிகள் அமைந்துள்ளன. குன்னுவர் என்ற இனத்தைச் சார்ந்த மக்களின் வரலாற்றை விளக்கிச் செல்வதோடு அவர்களுக்கு அப்பெயர் வரக் காரணம் என்ன என்பதையும் சுவடிகள் குறிப்பிட்டுள்ளன.
குறும்பர்கள் தொண்டை மண்டல பூர்வீக குடிகளாக இருந்தனர் என்ற குறிப்பினை மெக்கன்சியின் குறும்பர்களைப் பற்றிய சுவடிகளான சன்னியாசி குறும்பர் சரித்திரம், படுவூர் பாண்டுக்குழி வரலாறு போன்றவற்றில் இடம்பெற்றுள்ள குறிப்புகளின் வழி அறியமுடிகிறது. இந்நிலையில் டி.வி.மாகலிங்கம் குறும்பர்கள் கருநாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் திராவிட நாட்டில் தொண்டை மண்டலம் வரை தமது ஆட்சியை நடத்தி வந்தார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்த மேலாய்வுகளுக்கு இச்சுவடிகள் மூலத்தரவுகளாக அமைகின்றன.
இந்தச் சுவடிகளிலிருந்து பழங்குடி மக்களின் அந்தக் கால வாழ்வியல் முறையை அறிய முடியும். இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை இன்றையச் சூழலோடு ஒப்பிட்டு ஆராயவும் பழங்குடி மக்களின் வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதை அறியவும் இத்தகைய ஆய்வுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும்.
···
நூல்கள் குறித்த சுவடிகளை விளக்குமிடத்து அது நூல்வடிவம் பெற்ற வரலாற்றையும் இத்தொகுப்பு எடுத்துரைக்கிறது. கொங்கு தேச ராஜாக்கள் சரித்திரம் சுவடி - கொங்கு நாடான கோயம்புத்தூர் பகுதியை ஆட்சி செய்த மன்னர்களின் பரம்பரை வரலாற்றைத் தெரிவிக்கிறது. கொங்கு தேச ராஜாக்கள் குறித்து இரண்டு சுவடிகள் (சுவடி எண்:32,42) இடம்பெற்றுள்ளன.
நாயக்கர், பாளையக்காரர் வரலாறுகள் மெக்கன்சி சுவடிகளில் விரிவான பதிவுகளைப் பெற்றுள்ளன. இத்தொகுப்பில் நாயக்க இலக்கியங்கள், தமிழில் எழுதப்பட்ட இலக்கியங்கள் என்று வகைமை செய்து தரப்பட்டுள்ளன. இவ்வாறு சமண இலக்கியங்கள் குறித்த சுவடிகள் சமணர்களின் புலமை செயல்பாட்டினை ஆய்வுசெய்வதற்குரிய மூலங்களாக அமைகின்றன. சமண இலக்கியங்கள் என்ற பகுதியில் இடம்பெறும் செய்திகளோடு சமணக் கோயில்கள் போன்றவற்றை வட்டார நிகழ்வுகள், வட்டார வரலாறு பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளன. சமணம் தொடர்பான முழுமையான புரிதலைச் சமண இலக்கியம் என்ற பகுதியை மட்டும் கொண்டு அறியமுடியாது. மெக்கன்சியின் பிற சுவடிகளிலும் சமணம் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன. அதனையும் ஒருங்கே வைத்து ஆராயும் நிலையில் சமணம் என்ற பகுதி முழுமையடையும்.
இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சுவடி எண்:12 பிரிவு 2இல் சமண சமயம் சென்னை மயிலாப்பூரில் நிலைகொண்ட வரலாற்றினையும் 5 சமணக் கோவில்கள் இங்குக் கட்டப்பட்டிருந்தது என்றும் சோழர் காலத்தில் அவை சிவலிங்க ஆலயங்களாக உருப்பெற்றன என்றும் இச்சுவடி எடுத்துரைக்கிறது. சுவடி எண்: 14 பிரிவு 4இல் திருஞானசம்பந்தர் காலத்தில் கூன் பாண்டியன் மதுரையில் 8000 சமணர்களைக் கழுவேற்றம் செய்த புராதன வரலாற்றினைக் குறித்தும் மெக்கன்சி சுவடிகள் எடுத்துரைத்துள்ளன. மெக்கன்சி சுவடிகளின் வாயிலாகத் தென்னிந்தியாவில் சமண சமயம் காழ்கொண்ட வரலாற்றை அறிந்து கொண்ட அளவிற்குப் பௌத்தம் குறித்த செய்திகளை அறியமுடியவில்லை.
இந்தியப் பண்பாட்டின் வரலாற்றுச் சின்னங்களாகவும் கலாச்சாரத்தின் மையப்புள்ளியாகவும் கோவில்கள் திகழ்கின்றன. மெக்கன்சி சுவடிகளில் சைவம், வைணவம், சமணம் ஆகிய மூன்று சமயங்களின் கோயில்களைக் குறித்த விவரணங்கள் இடம் பெற்றுள்ளன. சில கோயில்கள் புனித ஸ்தலங்களாக விளங்கியதை அறியமுடிகிறது. சான்றாக, ஸ்ரீரங்கம், காஞ்சி, சிதம்பரம், திருவண்ணாமலை, திருவாரூர், ஸ்ரீசைலம், பழனி, சுசீந்தரம், கன்னியாகுமரி ஆகிய கோயில்கள் பற்றிய சுவடிகளில் காணலாம். சில சைவக் கோயில்களில் சைவ நாயன்மார்களான ஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் முதலான கடவுள் அடியார்களையும் வணங்கி யுள்ளனர் என்பதையும் எடுத்துரைக்கிறது. இன்றைக்கும் நாயன்மார்களுக்காக அறுபத்து மூவர் விழா எடுக்கப்பட்டு வருவதை இதன் தொடர்ச்சியாக இனங்காணமுடியும்.
பிற சமயங்களின் மீது சமயப் பொதுமையைக் காட்டாமல் காழ்ப்புணர்ச்சி கொண்டு அதிகார செல்வாக்குச் செலுத்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள விளைவுகளை இச்சுவடிகள் பதிவு செய்துள்ளன. சான்றாக, திண்டுக்கல்லை ஆட்சிசெய்த சக்கர ராயர் என்ற உள்ளூர் அதிகாரி சைவக் கோவிலை வைணவக் கோவிலாக மாற்றம் செய்துள்ளார். “கதிரேசுவர” என்ற பெயரில் வழங்கும் சிவன் கோவிலைக் “கதிர் நரசிம்ம பெருமாள்” என்ற வைணவக் கோவிலாக உருமாற்றியுள்ளார். இதுபோல எட்டு சைவக் கோவில்களை மாற்றியுள்ளனர் என்ற விவரத்தை இத்தொகுப்பில் சுவடி எண்:7 பிரிவு 3இல் இடம்பெற்றுள்ள சுவடி எடுத்துரைக்கிறது.
மாமல்லபுரத்தின் சிற்பக்கலை குறித்து இத்தொகுப்பில் சுவடி எண்: 29 பிரிவு 6இல் இடம்பெற்றுள்ள சுவடி எடுத்துரைக்கிறது. கோவர்த்தன கிரி, ஒற்றைக்கல்லாலான கோவில்கள், பஞ்சபாண்டவ ரதங்கள், கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில் கடலுக்குள் மூழ்கி வரும் விவரணங்கள் ஆகிய அனைத்தையும் இச்சுவடி விரிவாகப் பதிவுசெய்துள்ளது.
···
மலையாளச் சுவடிகளில் மலபார், நம்பூதிரி பிராமணர்களின் பழக்கவழக்கங்களும் சடங்குகளும் விவரிக்கப்பட்டுள்ளன. முஸ்லீம் மக்கள் கேரள நாட்டில் நிலைகொண்ட வரலாற்றினை அறிந்து கொள்ள இச்சுவடிகள் ஆதாரமாக உள்ளன. கேரள நாட்டில் சாதியமைப்புகள் செயல்படும் விதம் குறித்துத் தெளிவாக இச்சுவடிகள் எடுத்துரைக்கின்றன. நாயர் சமூகம் நான்கு உட்பிரிவுகளைக் கொண்டு விளங்குவதாகவும் குறிப்பிடுகிறது. ஆனால் இவையெல்லாம் செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் விவரிக்கப்பட்ட விடயங்கள் என்று சுவடிகள் எடுத்துரைப்பதையும் இங்கு இணைத்தெண்ணத்தக்கது.
-           தென்னிந்திய வரலாற்றினைக் கட்டமைப் பதற்குப் பதினெட்டாம் நூற்றாண்டில் தொகுக் கப்பட்ட மெக்கன்சி சுவடிகளில் காணப்படும் விடயங்களை அறிந்துகொள்வது அவசியமா கிறது. அதற்கான பிரதியாக இந்நூல் அமை கிறது.
-           சாதிய அடுக்குகள் தமிழகத்தில் எத்தகைய நிலைப்பாட்டிலிருந்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ளவும் அது தொடர்பான ஆய்வுகளுக்கும் பயன்படும் வகையில் இச்சுவடிகள் அமைந் துள்ளன.
-           பழங்குடிகள் குறித்த ஆய்வுகள் பலநிலைகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழலில் தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த அடிப்படையான செய்திகளைக் கொண்டு விளங்கும் இச்சுவடிகளைக் கொண்டு அவர்களின் இன்றையச் சூழலோடு அவற்றை ஒப்பிட்டு ஆராயலாம்.
-           பழங்குடி மக்கள் வாழ்ந்த பகுதிகளைப் பற்றி விரிவாக இச்சுவடிகள் குறிப்பிடுகின்றன. பொதுவாகச் செங்கற்பட்டு, ஆற்காடு, பழவேற்காடு பகுதிகளில் வாழும் பழங்குடிகள் குறித்த பதிவுகளே அதிகமாகக் காணப்படுகின்றன.
-           மெக்கன்சி சுவடிகளில் அதிகமான முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ளதாகக் குறும்பர் இனத்தைக் குறிப்பிடலாம்.

மெக்கன்சி சேகரிப்புகள் 3 - கோவில்கள்

மெக்கன்சி ‘தமிழக வரலாற்றி’னை அறிந்து கொள்வதற்கான பல்வேறு தரவுகளைத் திரட்டியுள்ளார். அவை ஊர் வரலாறு, வமிசாவளி வரலாறு, சாதி வரலாறு, அரசர் வரலாறு, கோயில் வரலாறு... எனப் பல்வேறு பொருண்மைகளைக் கொண்டுள்ளன. இதுவரை உருவாக்கப்பட்டுள்ள தமிழக வரலாறு குறித்த பதிவுகள் என்பவை ஏதோ ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ அல்லது குழுக்களையோ அல்லது மன்னர்களையோ மையமிட்டு மக்களை உள்ளடக்கிய முழுமைத்தன்மை கொண்டதாக உருவாக்கப்பட வில்லை என்ற கருத்து வரலாற்றறிஞர்களிடையே நிலவி வருகிறது. அதற்கு முக்கியக் காரணம் மக்கள் குறித்த பதிவுகளைக் கொண்ட தரவுகளை அடையாளங்காணாத தன்மையாகும். மேற்கண்ட தன்மையிலிருந்து மாறுபட்ட மக்களின் வாழ்வியலோடு தொடர் புடைய பல்வேறு தரவுகளை உள்ளடக்கியதாக மெக்கன்சியின் சேகரிப்பைக் கருதமுடியும். ஒரு வரலாற்றை எழுதுவதற்கோ அல்லது புரிந்து கொள்வதற்கோ மெக்கன்சியின் சேகரிப்புகள் எந்தவகையில் உதவும் என்பதை கோயில்கள் குறித்த அவரது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது.
மெக்கன்சி கோயில்களில் உள்ள தரவுகளை தாள் மற்றும் ஓலைச்சுவடிகளில் பதிவு செய்துள்ளார். அவர் கோயில்களில் உள்ள தரவுகளை சிலாசாசனங்கள், தலமகத்துவம், தலமகாத்மியம், தேவத்தான வரலாறு, தலவரலாறு ஆகிய பொருண்மைகளில் சேகரித்துள்ளார். அதில் சிலாசாசனங்கள் என்பது கோயில் கல்வெட்டுக்களில் உள்ள தரவுகளைக் குறிப்பிடுவதாகும். கோயில், சிலாசங்கள் குறித்த பதிவினை அந்தக் கோயிலின் பெயரையே சிலாசனத்திற்கும் பெயராகச் சூட்டியுள்ளார். சான்றாக, திருப்பழூவூர் சிவன் கோயிற் சிலாசாசனம். இதே போல் கோயில்களின் சிறப்புகளை தலமகத்துவம், தலமகாத்மியம் ஆகிய தலைப்புகளில் பதிவுசெய்துள்ளனர். தலம் தோன்றியதற்கான காரணம், தலத்தின் பெருமை, இறைவனின் பெருமை, வழிபாட்டு முறைகளை விளக்குவனவாக தேவத்தான வரலாறு (அ) தல வரலாறுகள் உள்ளன. இது தவிர கோயில்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்கள் குறித்த பதிவுகளும் இதனுள் அடங்கும்.
மெக்கன்சியின் சேகரிப்புகள் குறித்து அறிவதற்கு நமக்குக் கருவூலமாக இருப்பது அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், ஆவணக்காப்பகம், தொல்லியல் துறை நூலகப் போன்ற வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்து வைக்கக் கூடிய இடங்களாகும். அதில் அரசினர் கீழ்த்திசைச்சுவடி நூலக ஆவணச்சேகரிப்புகளில் மெக்கன்சியின் சேகரிப்புகளை அறிந்துகொள்ள தனித்த பட்டியல் ஒன்று உள்ளது. அந்தப் பட்டியலை ஒருமுறைப் பார்த்தால் மெக்கன்சி சேகரிப்பின் ஆழ, அகலங்களைப் புரிந்து கொள்ள முடியும். அதில் தமிழகக் கோயில்கள் குறித்த தகவல்கள் தோராயமான எண்ணிக்கையின் அடிப்படையில் சிலாசாசனம் - 191, தல வரலாறு - 53, தலமகத்துவம் - 15, தாமிர சாசனம் - 15, கைபீது -22, இது தவிர பிற தரவுகளும் உள்ளன. இச்சேகரிப்புகள் சைவ, வைணவ, ஜைன சமயம் சார்ந்த கோயில்களிலிருந்து திரட்டப்பட் டுள்ளன. மெக்கன்சியின் சேகரிப்புகள் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மூலம் மூன்று தொகுதிகளாக வந்துள்ளதை தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் - 3, பகுதி 2இன் வழி அறியமுடிகின்றது. அதில் மெக்கன்சியின் உதவியாளர்கள் சேகரித்த முறைமைகள் குறித்து சில பதிவுகள் உள்ளன. அதனை இங்குப் பதிவு செய்வது பொருத்தமாக அமையும். ஒரு செய்தியை சேகரிக்கும்போது, சேகரித்த பின்னரும் உள்ள தன்மைகளைப் புரிந்து கொள்ள இது போன்ற பதிவுகள் உதவும்.
-           கர்னல் மெக்கன்சியின் உதவியாளர்கள் சில சாசனங்களைக் கல்லில் கண்ட வரிவடிவத்தில் படம் எழுதுவது போலப்பிரதி செய்திருக்கிறார்கள். அவர்களால் அந்த சாசனங்களைப் படிக்க முடியவில்லை போலும். தமிழ்ச் சம்பந்தப்பட்ட வரையில் அத்தகைய சாசனங்கள் வட்டெழுத்தில் உள்ளவை. (பக்.ஜ்ஸ்வீவீவீ, தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் - 3, பகுதி 2, Madras Goverment Oriental series, 1957)
-           தாங்கள் சென்ற கிராமங்கள் பலவற்றிலிருந்தும் ஊர் வரலாறு களைக் கேட்டறிந்து எழுதி வாங்கி வந்திருக்கிறார்கள். அவை கைப்பிடி அல்லது கைபீயத் எனப்பெறும். அந்த வரலாறு களிலும் சில இடங்களில் அந்த அந்தக் கிராமங்களைப் பற்றிய சாசனங்களையும் அவற்றை வழங்கிய அரசர் பெயர், வருஷம் முதலிய விவரங்களும் குறித்திருக்கிறார்கள்.
என்று தொகுப்புப் பணி சார்ந்த சில பதிவுகளை அந்நூலிலிருந்து அறிய முடிகின்றது.
அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் உள்ள சுவடிகளின் விவரணங்களை அறிந்து கொள்ளும் வகையில் ‘சுவடி விளக்க அட்டவணை’யை உருவாக்கியுள்ளனர். அவ்வட்டணையில் ஒவ்வொரு சுவடிகள் குறித்தும், சுவடிகளின் பொருண்மை, அதில் உள்ள ஏடுகளின் எண்ணிக்கை, அட்டவணை உருவாக்கத்தின் போது சுவடியின் தன்மை, சுவடி முழுமையாக உள்ளதா, என்பதை அறியும் வகையில் உள்ளது. அதில் ஒவ்வொரு சுவடி பற்றிய மேற்கண்ட தகவல்கள் ஆங்கிலத்திலும் பதிவுசெய்யப்பட்டிருக்கும். அதனைத் தொடர்ந்து சுவடியின் தொடக்கமும், இறுதியும் தமிழில் எழுதப்பட்டிருக்கும் இறுதியாக அந்தச் சுவடி குறித்த குறிப்புரையும் இடம்பெறும். சுவடி விளக்க அட்டவணையிலிருந்து பின்வரும் சில கருத்துக்களைப் பதிவு செய்வது பொருத்தமாகத் தோன்றுகிறது.
-           இவ்வட்டவணை உருவாக்கும் போது மெக்கன்சியின் சேகரிப்புகள் எழுதப்பட்டு நூறாண்டுகளுக்கு மேல், சென்றுவிட்டது. அதில் ஏறக்குறைய 1950ஆம் ஆண்டு மெக்கன்சி சுவடியின் தன்மை குறித்து பதிவு செய்யப்பட் டுள்ளது. தற்போது அதற்குப் பின்னர் அறுபதாண்டுகளைக் கடந்துவிட்டது. தமிழ் ஆய்வுலகைப் பொருத்தவரை மெக்கன்சி சேகரிப்புகள் பற்றிய அறிதல், தேடல் என்பது தொடக்கநிலையிலே இருப்பதாகத் தோன்றுகிறது.
-           சுவடி எழுதப்பட்ட காலத்தில் உள்ள மொழிநடைக்கும், அட்டவணை உருவாக்கப்பட்ட காலத்தின் மொழிநடைக்கும் உள்ள வேறுபாட்டினை புரிந்து கொள்ளுதல். தற்போதுள்ள மொழிநடையையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
மெக்கன்சி சுவடிகளை எடுத்து வாசிக்கும் போது, அச்சுவடியின் தற்போதைய நிலை பின்வருமாறு,
-           ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துகளின் மீது மற்றொரு பக்கத்திலுள்ள எழுத்துகள் ஒன்றன் மீது ஒன்று ஒட்டிக்கொண்டுள்ளன.
-           சில எழுத்துகள் அழியத் தொடங்கியுள்ளன.
-           சில இடங்களில் இரண்டு மூன்று வரிகள் தெளிவாகவும், அதனைத் தொடர்ந்து சில வரிகள் வெண்மையாகவும் காணப்படுகின்றன.
-           சுவடிகளைப் பிரித்துப் பார்த்தால் உடைந்து நொறுங்கும் தன்மையில் உள்ளன.
அறிவியல் தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள காலச்சூழலில் வரலாற்றைப் பாதுகாப்பது குறித்த எந்தவித பிரக்ஞையும் இல்லாமல் இருப்பதை உணரமுடிகிறது. ஆவணக்காப்பகங்கள் என்பவை பாதுகாப்போடு வரலாற்றுத் தரவுகளை அழிக்கும் நிறுவனங்களாக செயல்படுகின்றனவோ என்கிற சந்தேகமும் தோன்றுகின்றன. பிற நாடுகளில் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் செய்து இணையத்தில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் செய்துள்ளனர். அதுபோன்ற செயல் பாடுகள் நடைறுமா?
மெக்கன்சியின் கோயில் சார்ந்த சேகரிப்புகள் குறித்த தகவல்களையும், சேகரிப்பு முறைமைகளையும், சேகரிப்பு குறித்த அறிதலுக்கான அட்டவணை குறித்தும், மெக்கன்சி சுவடியின் தற்போதைய நிலை குறித்தும் கூறுவதாக இதுவரை உள்ள தகவல்களை விளங்கிக் கொள்ள முடியும். இந்தப் பின்புலத்தோடு ஒரு வரலாற்றை எழுதுவதற்கும் அதனை மீட்டுருவாக்கம் செய்வதற்குமான தரவுகளாக மெக்கன்சியின் சேகரிப்பை எப்படிப் புரிந்து கொள்வது என்பதைப் பற்றியதாகப் பின்வரும் பகுதி அமைகின்றது.
-           கூடலூர் தேவத்தான வரலாற்றிலிருந்து “வெஞ்சமர்க் கூடல்” என்னும் ஊரின் வரலாற்றைப் புரிந்து கொள்ள முடியும். அதாவது, “வெஞ்சமான் என்றுமொரு சமணவரசன்” இவ் வூரையாண்டிருந்து இறுதியில் சோழவரசனால் மாண்டுபோக நேரிட்டபொழுது அவன்தன் பெயரால் இவ்வூரை வழங்கல் வேண்டுமெனச் சோழனை வேண்டிக் கொள்ள அவனும் அவ்வாறே ஆகட்டுமென விட்ட பெயராகுமிது. (d.2829, Vol.vii,பக்.2480) என்ற குறிப்பிலிருந்து வெஞ்சமக் கூடல் என்னுமூரின் வரலாற்றுச் சிறப்பினை அறிய முடிகின்றது.
-           விக்கிரம சோழபுரம் ஈசுவரன் கோயில் தாமிர சாசனத்தில் விக்கிரம சோழபுரம் என்னுமிடத்திலுள்ள சோளீசுவரசுவாமி கோவிலுக்கு அபிஷேகம் நைவேத்தியம் முதலான செலவிற்காக பல தேசங்களிற் சென்று பட்டுநூல் வியாபாரஞ் செய்து வந்த தராசுரம் பட்டுநூல்காரர் பலரால் ஒன்று சேர்ந்து ஏற்படுத்தப் பட்டது என்பதை அறியமுடிகின்றது.
-           திருவாவடுதுறைக் கோயில் கைபீதில் பிறமொழியில் உள்ள சமயத் தொடர்பான பதிவுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, அதிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட தகவலானது “ஆயாசிய மகத்துவம், வாயு ஸம்ஹிதை, பிருமாண்ட புராணம், சிவஞான போதம், சித்தாந்த ரத்னாவளி... இந்த பாஷிய¢ முன்னம் ஆமகங்களின்றும் திருவேற்காடு ரா.முத்தைய்யா முதலியார் இங்கிலீஷ் பாஷையால் செய்தார். அதைச் சைவ கந்தப்ப முதலியார் மருமகன் அனக்கட்டாப்புத்தூர் நயினப்ப முதலியார் தமிழாற் செய்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (Vol - vii, பக்.2436). வடமொழி/சமஸ்கிதத்தில் உள்ள தரவுகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப் பட்ட தன்மையை விளங்கிக்கொள்ள முடிகிறது.
-           இலக்கியச் சான்றுகள் வரலாற்றினை அறிய உதவும் சான்றுகள் என்பதை உணர்த்தும் விதமாக பார்வதிபுரம் ஆருத்ர கபாலேசுவர சுவாமி கைபீதில் “தாம்மிர சாஸனங்கள் முதலான ஆதரவுகள் காலந்தரங்களில் கைசோர்ந்து விட்டன. கூர்ம புராணத்தில் வயிரவன் பலிகொண்ட அத்தியாயத்தில் இத்தல புராண வரலாற்றை அறியலாம் என்ற குறிப்பினைப் பெறமுடிகின்றது. (Vol-vii-பக்.2436) கண்ணபுரம் விக்கிரம சோழசுவர சுவாமி தேவஸ்தான வரலாற்றில் ‘சோழராசர்’ தன்னுடைய பிரும்ஹிருத்தி நிவாரண மாகும்படிக்கு இந்த «க்ஷத்திரம் யோக்கியமான ஸ்தலம் என்று பிரதிஷ்டையும் பண்ணிப் பூஜை பண்ணின படியாலே “விக்கிரம சோழேசுவரன்’ என்னும் பெயர் சுவாமிக்கு இடப்பட்ட வரலாற்றினை அறிய முடிகின்றது.
-           கோயில்களில் சிலாசனம் எழுதும் முறைமை பற்றியும், அதனை நாசம் செய்பவர்கள் பெறும் தண்டனை குறித்து மசகூர் பெருமானார் கோயிற் சிலாசாசனத்தில் “இந்த நாற்பாங்கு எல்லையும் ‘சூலக்கற்கள்’ போட்டுச் சாஸனம் எழுதிக் கொடுத்து.. இந்த தருமத்தை அசுத்தம் பண்ணின பேர்கள் ‘கங்கைக்’ கரையில் காராம் பசுவைக் கொன்ற தோழம் பெறக் கடவார்கள்” என்ற பதிவு செய்யப்பட்டுள்ளது.
-           திருக்கண்டியூர் முதலான விடத்து ஈசுவரன் கோயில் என்று சுட்டப்பட்டுள்ளது. அதில் திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, கோவில் பட்டி, தில்லைத்தானம், கடுவெளி, கருந்தட்டாங்குடி முதலிய ஊர்களில் உள்ள சிலாசனங்களின் தொகுப்பாக குறிப்பிடப்பட் டுள்ளது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோயில் களில் எத்தனை சிலாசாசனங்கள் உள்ளன என்பதும் சுட்டப்பட்டுள்ளன. இதிலிருந்து மேற்குறிப்பிடப்பட்ட ஊர்களில் சிலாசனங்கள் உள்ளனவா அவை எத்தன்மையில் உள்ளன என்று பல்வேறு நோக்கில் சிந்திப்பதற்கும் ஆய்வு மேற்கொள்ளவும் இச்சேகரிப்புகள் உதவுகின்றன.
-           திருக்காட்டுப்பள்ளி ஈசுவரன் கோயில் சிலாசாசனத்தில் இந்த சாசனமானது ஹிந்தி பாஷையில் தேவநாகரி எழுத்தில் எழுதப்பட் டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அச்சாசனத்தில் நிலங்கள் ‘வேலி’ என்ற நில அளவை முறையால் அளக்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. நிலங்களை அளப்பதற்கு இதே அளவை முறை தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் பின்பற்றப்படுவதில்லை. எந்தெந்த பகுதியில் இத்தகைய அளவை முறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதை அறிவதற்கு இச்சாசனங்கள் குறித்த தரவுகள் உதவும்.
-           மேற்கண்ட பல்வேறு குறிப்புகளிலிருந்து, மெக்கன்சியின் கோயில் சேகரிப்புகள் ஒரு வரலாற்றினை அறிவதற்கான அல்லது மீட்டுருவாக்கம் செய்வதற்கான பல்வகைமைப்பட்ட தரவுகளைக் கொண்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
மெக்கன்சியின் கோயில்கள் குறித்த தரவுகளிலிருந்து பெறப்பட்ட தகவல்களைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.
-           தொகுப்பு சார்ந்த செயல்பாடுகளில் மெக்கன்சி பின்பற்றிய முறைமைகளை இனங்காணுதல்.
-           வரலாற்று சான்றுகள் கிடைக்காத/சிதைந்து போன சூழலில்இலக்கியங்களில் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைச் சுட்டுதல். குறிப்பாக கோயில் சார்ந்த பதிவுகளில் ‘புராணங்கள்’ அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதை இவரது சேகரிப்புகளின் வழி அறிய முடிகின்றது.
-           தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊர் வரலாறுகளை மெக்கன்சியின் கோயில் வரலாற்றுத் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பது.
-           நிலம் சார்ந்த அளவை முறைகள் எந்தப் பகுதியில் எத்தகைய அளவு முறைகள் பின்பற்றப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள இவரது சேகரிப்புகள் உதவும்.
-           தற்போதைய தமிழகத்தின் வரைபடத்தைக் கொண்டு மெக்கன்சியின் கோயில் தொடர்பான தரவுகளைக் குறித்துப் பார்த்ததால் அவரது சேகரிப்பின் பயண தூரத்தையும் அதன் வழி பெறப்பட்ட வரலாற்றுத் தரவுகளின் மதிப்பீட்டினையும் அறிந்து கொள்ள வேண்டும்.
-           தமிழ் மற்றும் வரலாறு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆய்வாளருக்கு மெக்கன்சியின் தரவுகள் ஆய்வு ரீதியாகவும், தரவுகளைத் தேடிக்கொடுக்கும் கருவூலமாகவும் மெக்கன்சியின் சேகரிப்புகள் அமையும்.
-           பொதுவாக மெக்கன்சியின் சேகரிப்புகள், வரலாறு, மானுடவியல், தொல்லியல், நாட்டார் வழக்காற்றியல் எனப் பல்துறை ஆய்வுக்கும் பயன்படக் வடிய தரவுகளைக் கொண்டுள்ளது.
பயன்பட்ட நுல்கள்
  • A Descriptive Catalogue of the Tamil Manuscripts in the GOML, Madras, Volume VII, 1948
  • தென்னிந்திய கோயிற் சாசனங்கள் பாகம் 3, பகுதி 2, GOML,1957