கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Saturday, March 2, 2013

குகன்


குகன்
இராமன் வனவாசம் செல்லத் தொடங்கும் பொழுது முதன் முதல் அறிமுகமானவனும் துணை செய்தவனும் குகன் ஆவான். அவனது பண்பு நலன்களைக் கண்ட இராமன், அவனைத் தன் தம்பியருள் ஒருவனாக ஆக்கிக் கொண்டவன்.

5.2.1 தோற்றமும் பண்பும்
குகன், வேட்டுவர் குலத் தலைவன்; அரையில் ஆடையும் காலில் தோல் செருப்பும் அணிந்தவன்; இடுப்பைச் சுற்றிக் கட்டிய ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்ட புலி வாலை உடையவன்; வீரக் கழலுடன் அணிகலன்கள் பல அணிந்தவன்; இருளைத் தொடுத்தது போன்ற கருத்த தலைமயிர் கொண்டவன். பாறை போன்ற பரந்த மார்பும், இந்திரனது வச்சிராயுதத்தைப் போன்ற இடையும், நீண்ட கைகளும், கொடிய பார்வையும், பித்தன் போலத் தொடர்பில்லாத பேச்சும், கருமையான நிறத்தைப் பெற்ற உடலும் கொண்டவன். இத்தகு தோற்றத்தைக் கூறும் கம்பர் பாடலைக் காண்போமா?

பிச்சர் ஆம் அன்ன பேச்சினன் இந்திரன்
வச்சி ராயுதம் போலும் மருங்கினான்(கங்கைப் படலம் 34:34)
(பிச்சர் = பைத்தியம்; மருங்கு = இடை, இடுப்பு)
 பண்பு
கங்கையாற்றின் பக்கத்திலே அமைந்த சிருங்கி பேரம் என்று சொல்லப்படும் நகரத்தில் வாழும் வாழ்க்கையைப் பெற்றவன். பொய் நீங்கிய மனத்தினன். இராமனிடம் அன்பு கெள்ளும் குணத்தினன்; யானைக் கூட்டம் போன்ற சுற்றத்தினரைப் பெற்றவன்; அவன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்; தூய கங்கையாற்றின் ஆழம் அளவு உயர்ந்தவன்; வேட்டைக்குத் துணையாக நாயினை உடையவன்; துடி, ஊது கொம்பு, துந்துபி முதலான இசைக்கருவிகள் நிறைந்த படையை உடையவன் என்பதனைத் தம் பாடலில்
புலப்படுத்துகின்றார், கம்பர்:

ஆய காலையிள், ஆயிரம் அம்பிக்கு
நாயகன் போர்க்குகன் எனும்நா மத்தான்;
தூய கங்கைத் துறைவிடும் தொன்மையான்
காயும் வில்லினன், கல்திரள் தோளினான் 
(கங்கைப் படலம் 28)


துடியன் நாயினன் (கங்கைப் படலம் 29:1)
கங்கையின் ஆழம் இட்ட நெடுமையினான். 
(கங்கைப் படலம் 31:2)
(அம்பி = படகு; காயும் = கொல்லும்; கல்திரள் = மலை)
இத்தகு தோற்றமும் பண்பும் உடைய குகன் கங்கையாற்றின் கரையில் அமைந்துள்ள தவப் பள்ளிக்கு இராமன் வந்துள்ளான் என்ற செய்தி அறிந்து பார்க்கச் சென்றான். தனது படைகளையும் சுற்றத்தினரையும் விட்டுத் தான் மட்டும் தனியாக இராமனைக் காண்பதற்காகத் தேனையும் மீனையும் ஒருங்கே காணிக்கையாகக் கையில் எடுத்துக் கொண்டு சென்றான்.

ஒருங்கு தேனொடு மீன்உப காரத்தன்
இருந்த வள்ளலைக் காண வந்து எய்தினான்
(கங்கைப் படலம் 36:3-4)
1)வேடர் குலத்தில் சிறந்த தலைவனாக விளங்குபவன் குகன். அவன் போராற்றலும், பேராற்றலும் மிக்கவன் என்பதை இப்பகுதி புலப்படுத்துகின்றது.
2)ஆற்றில் கிடைக்கும் மீனையும், உயர்ந்த மலையில் கிடைக்கும் தேனையும் கொண்டு வந்து இராமனிடம் காணிக்கையாகத் தருகின்ற போது குகனின் இறைபக்தி வெளிப்படுகின்றது.
இராமனைக் காணத் தவப் பள்ளி வாயிலை அடைந்த குகன், தான் வந்துள்ளதைத் தெரிவிக்கக் கூவிக் குரல் கொடுத்தான். முதலில் இலக்குவன் அவனை அணுகி, நீ யார்? என வினவினான். குகன் அவனை அன்போடு வணங்கி "ஐயனே ! நாய் போன்ற அடியவனாகிய நான் ஓடங்களைச் செலுத்தும் வேடனாவேன். தங்கள் திருவடிகளைத் தொழ வந்தேன்" என்று கூறினான். இலக்குவன் தன் தமையனாகிய இராமனிடம், தூய உள்ளமும், தாயன்பும் உடைய குகன், தன் சுற்றம் சூழத் தங்களைக் காண வந்துள்ளான் என்று தெரிவித்தான்.
 குகனை அழைத்து வரப் பணித்தல்
இராமனும் மன மகிழ்ச்சியோடு “நீ சென்று குகனை அழைத்து வருக" என்று கூற, இலக்குவனும் “உள்ளே வருக" என அழைத்தான். குகன் அழகு திகழும் இராமனைத் தன் கண்ணினால் கண்டு களிப்படைந்து, நெடுஞ்சாண் கிடையாகத் தண்டனிட்டு விழுந்து வணங்கினான். உடலினை வளைத்து வாயினைப் பொத்திக் கொண்டு பணிவுடன் நின்றான்.

தேவா நின்கழல் சேவிக்க வந்தனென்
நாவாய் வேட்டுவன் நாய்அடியேன் என்றான். 
(கங்கைப் படலம் 38:3-4)
(நாவாய் = ஓடம்)
இப்பகுதி மூலம் இராமனுக்கு, இலக்குவன் மூலமாக, குகனின் இயல்பும் சிறப்பும் கூறப்படுவதனை உணர முடிகின்றது. வள்ளுவர் கூறும்பணியுமாம் என்றும் பெருமை என்பதற்கு ஏற்பக் குகனின் பணிவு உணர்த்தப்படுகின்றது.
5.2.3 குகனின் பணிவுடைமை
இராமன், பணிவு கொண்ட குகனைத் தன்னருகில் அமரும்படி கூறினான். ஆனால் குகன் அமரவில்லை. அளவு கடந்த அன்பை வெளிப்படுத்திக் குகன், இராமனை நோக்கி, “தங்களுக்கு உணவாக அமையும்படி தேனையும், மீனையும் பக்குவப்படுத்திக் கொண்டு வந்துள்ளேன். தங்களுடைய எண்ணம் யாதோ?" என்று கேட்டான்.

'இருத்தி ஈண்டு’ என்னலோடும். இருந்திலன் எல்லை நீத்த
அருத்தியன் தேனும் மீனும் அமுதினுக்கு அமைவது ஆகத்
திருத்தினென் கொணர்ந்தேன் என்கொல் திருவுளம் என்ன. (கங்கைப் படலம் 41 : 1-3)
(அருத்தி = அன்பு; திருத்து = பக்குவப்படுத்து)
இப்பகுதியால் குகன் கொண்டு வந்த பொருள்கள் தேன், மீன் மட்டுமல்ல, உயர்ந்த அன்பினையும் கொண்டு வந்துள்ளான் என்பதனை அறிய முடிகிறது.
இராமன், மூத்தவர்களாகிய முனிவர்களை நோக்கிப் புன்னகைத்து விட்டு, “குகனே ! நீ அன்போடும் பக்தியோடும் கொண்டு வந்த தேனும், மீனும் மிகவும் அருமையானவை. அமுதத்தைக் காட்டிலும் சிறந்தவை. இவையெல்லாம் எம்மைப் போன்றவர் ஏற்கத் தக்கவையே. ஆதலால் நாம் அவற்றை இனிதாக உண்டவர்போல் ஆனோம்" என்று குகனிடம் கூறினான்.

அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால் அமிழ்தினும் சீர்த்த அன்றே
பரிவினின் தழீஇய என்னின் பவித்திரம் எம்ம னோர்க்கும்
உரியன இனிதின் நாமும் உண்டனெம் அன்றோ என்றான்(கங்கைப் படலம் 42)
இப்பகுதியால் உயர்ந்தவர்களிடத்தில் நாம் கொடுக்கும் பரிசுப் பொருள்கள் (தேன், மீன்) பெரிதல்ல, அவர்களிடத்தில் காட்டும் மதிப்பும் மரியாதையுமே பெரிது என்னும் பண்பினைக் குகன் வாயிலாக அறிய முடிகிறது. உண்ணத்தகாத பொருளாயினும் அன்போடு தந்தால் பெரியோர்கள் ஏற்றல் வேண்டும் என்பதை இராமனின் பெருந்தன்மையால் அறியலாம்.
 நாளைவா என்னல்
இராமன், குகனை நோக்கி, "நாம் இன்று தவச் சாலையில் தங்கி, நாளை கங்கையைக் கடப்போம். எனவே நீ, அன்பு நிறைந்த நின் சுற்றத்தாரோடு இங்கிருந்து சென்று, உன்னுடைய நகரத்திலே உவகையோடு இனிதாகத் தங்கி, விடியற் காலை நாங்கள் ஏறிச் செல்வதற்குரிய ஓடத்துடன் இங்கே வருக!" என்றான்.

பொங்கும்நின் சுற்றத் தோடும் போய்உவந்து இனிதுன் ஊரில்
தங்கிநீ நாவா யோடும் சாருதி விடியல் என்றான் (கங்கைப் படலம் 43:3-4)
இப்பகுதியில் தவச் சாலையில் தவநெறி நிற்பவரே இருத்தல் வேண்டும் என்பது உள்ளமைந்த செய்தியாக வெளிப்படுகிறது.
கார்மேக வண்ணனாகிய இராமன் கூறியவுடன் பேரன்புடைய குகன், “இவ்வுலகம் முழுவதையும் உனக்குரிய செல்வமாக உடையவனே ! உன்னை இந்தத் தவக் கோலத்தில் பார்த்தும் என் கண்களைப் பிடுங்கி (பறித்து) எறியாத கள்ளனாகிய நான், பெருந்துன்பம் அடைந்துள்ளேன். மேலும் இந்நிலையில் உன்னைப் பிரிந்து எனது இருப்பிடத்தை நோக்கிச் செல்ல மாட்டேன். ஐயனே! இங்கிருந்து என்னால் முடிந்த அளவில் அடிமைத் தொழிலை உனக்குச் செய்கிறேன்” என்று வேண்டினான்.

கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப்
பார்குலாம் செல்வ நின்னை இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யான் இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆனதுஐய செய்குவென் அடிமை என்றான் 
(கங்கைப் படலம் 44)
(ஈர்கிலா = பறிக்காத)
இப்பகுதியால் குகனின் மனவுணர்வும், செயலுணர்ச்சியும் வெளிப்படுவதனைக் காண முடிகிறது. தன்னால் இயன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும் என்ற துடிப்புப் புலப்படுகிறது.
 இராமனின் நட்பு
குகனின் வேண்டுகோளைக் கேட்ட இராமன், தன் அருகில் நின்ற சீதை, இலக்குவன் ஆகிய இருவரின் திருமுகத்தையும் நோக்கி, அவர்கள் மனமும் ஏற்றுக் கொள்வதை அறிந்து, “இவன் நம்மிடம் நீங்காத அன்புடையவன் ஆவான்", என்று கூறினான். “கருணையினால் மலர்ந்த கண்களை உடையவனாகிய எவற்றிலும் இனிமையான நண்பனே ! நீ விரும்பியவாறே இன்று என்னோடு தங்கியிரு" என்று குகனிடம் கூறினான்.

கோதைவில் குரிசில் அன்னான் கூறிய கொள்கை கேட்டான்
சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக்
காதலன் ஆகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய நண்ப இருத்திஈண்டு எம்மொடு என்றான் 
(பாடல் - 18)
நம்முடன் ஒருவர் தங்கியிருக்க வேண்டுமானால் குடும்பத்தினரின் இசைவும் வேண்டும் என்பதை இராமன் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது.
 குகனின் வருத்தம்
“மனுக்குலத்தின் (அரசகுலம்) வழி வந்த மன்னனே! நீ அழகிய அயோத்தி நகரத்தை விட்டு இங்கு வந்த காரணத்தைத் தெரிவிப்பாயாக" என்று குகன் கேட்டான். இலக்குவன், இராமனுக்கு நேர்ந்த துன்பத்தைச் சொல்ல, அதைக் கேட்டு இரங்கிய குகன் மிகவும் துன்பமுற்றுக் கூறலானான்: "பெரிய நிலத்தை உடையவளான பூமி தேவி தவம் செய்தவளாக இருந்தும், அத்தவத்தின் பயனை முழுவதும் பெறவில்லையே, ஈதென்ன வியப்பு" என்று கூறி. இரண்டு கண்களும் அருவி போலக் கண்ணீர் சொரிய அங்கே இருந்தான். அன்புக்குரியவர் துன்பப்பட்டால், அன்புடையவர் வருந்துவர் என்பதைக் குகன் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
 இலக்குவன் கூற்று
குகன் கேட்க, இலக்குவன் பின்வருமாறு கூறினான் :
அயோத்தி மன்னன் தசரதன், அரச குல மரபுப்படி மூத்த மகன் இராமனுக்கு முடி சூட்ட முடிவு செய்தான். கைகேயி தன் தோழி மந்தரை (கூனி)யின் சூழ்ச்சிக்குப் பலியானாள். தசரத மன்னனிடம், தான் சம்பராசுர யுத்தத்தில் உதவி செய்தற்காகத் தனக்கு அளித்த இரு வரங்களைக் கொடுக்குமாறு வேண்டினாள். தசரதன் உடன்பட்டான். அவ்விரு வரங்களில் ஒன்று தன் மகன், பரதனுக்கு முடி சூட்ட வேண்டும் என்பது; மற்றொன்று இராமன் 14 ஆண்டுகள் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது. தந்தையின் வாக்கைக் காப்பாற்ற இராமன் காட்டுக்குப் புறப்பட்டான்.
அப்போது, சீதையும் உடன் வர, யானும் சேர்ந்து மூவரும் வனவாசம் மேற்கொண்டோம். இவ்வாறு தொடர்ந்து வரும்போது இவ்வனத்தில் உன்னைக் கண்டோம்.
இராமன் இட்ட கட்டளையைச் சிர மேற் கொண்ட நிலையில் கண்ணீர் பொழியும் கண்களையும், வாடுகின்ற உயிரினையும், சோர்ந்த மனத்தினையும் கொண்ட குகன், சீதையோடு இருக்கும் கார்மேக வண்ணனாகிய இராமனின் திருவடிகளைப் பிரிய விரும்பாமல், தனது எண்ணத்தைச் சொன்னான்:
“நாங்கள் காட்டில் வாழ்ந்தாலும் செல்வத்திலும் வலிமையிலும் குறைவற்றவர்கள். ஆனால் பொய் வாழ்க்கை பெறாதவர்கள். எங்களை உறவினராகக் கருதி எங்கள் ஊரில் நெடுங்காலம் இனிதாகத் தங்கியிருங்கள். செய்ய வேண்டிய முறைப்படி நீங்கள் சொல்லும் வேலைகளைச் செய்வோம்”.

செய்ம்முறை குற்றேவல் செய்குதும் அடியோமை
இம்முறை உறவுஎன்னா இனிதுஇரு நெடிதுஎம்ஊர்
(கங்கைப் படலம் 54:3-4)
“தேவர்களும் விரும்பி உண்ணக் கூடிய தேனும், தினையும் உள்ளன; மாமிசமும் இங்கு உள்ளது. உமக்குத் துணையாக நாய் போன்ற அடிமைப்பட்டவராகிய எங்கள் உயிர்கள் உள்ளன. விளையாடுவதற்கு இக்காடும், நீராடுவதற்குக் கங்கையும் இருக்கின்றன. நான் உயிரோடு உள்ளவரை நீ இங்கேயே இனிதாக இருப்பாயாக." என்றும் தெரிவித்தான் குகன். 

கான்உள புனல்ஆடக் கங்கையும் உளதுஅன்றோ
நான்உள தனையும்நீ இனிதுஇரு நாடஎம்பால்
(கங்கைப் படலம் 55:3-4)
"தேவர்களைக் காட்டிலும் மன வலிமையும், உடல் வலிமையும் கொண்டு வில்லேந்திப் போர் புரியும் வீரர்கள் (5லட்சம் வேடர்கள்) என்னிடம் உள்ளனர். எங்கள் குடியிருப்பில் நீ ஒரு நாள் தங்கினாய் என்றாலும் நாங்கள் கடைத்தேறுவோம். அதைக் காட்டிலும் வேறான சிறப்பு எங்களுக்கு இல்லை" என்று கூறினான் குகன்.

உய்குதும் அடியேம் எம்குடிலிடை ஒருநாள்நீ
வைகுதி எனின்மேல்ஒர் வாழ்வுஇலை பிறிதுஎன்றான் 
(கங்கைப் படலம் 57:3-4)
(உய்குதும் = கடைத்தேறுவோம்)
"உடுத்துக் கொள்ள மெல்லிய ஆடை போலும் தோல்கள் உள்ளன. உண்பதற்குச் சுவையான உணவு வகைகள் உள்ளன; உறங்குவதற்குத் தொங்கும் பரண்கள் உள்ளன. தங்குவதற்குச் சிறு குடிசைகள் உள்ளன. வில் பிடித்துப் போரிடக் கைகள் உள்ளன.
நீ விரும்பும் பொருள் வானத்தில் இருந்தாலும் விரைவாகக் கொண்டு வந்து சேர்ப்போம்" என்று தொடர்ந்து பேசினான் குகன்.

கலிவானின் மேல்உள பொருளேனும்
விரைவோடு கொணர்வேமால் 
(க.ப 56)
(கொணர்வேம் = கொண்டு வந்து கொடுப்போம்)
விருந்தினரைத் தம் உறவினரைப் போல நேசிக்கும் தன்மையைக் குகன் வாயிலாக அறிய முடிகிறது. அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்னும் குறள் நெறிக்கேற்ப, குகன் இராமனிடம் கொண்ட அன்பிற்காக எதையும் கொடுக்கத் தயாராக இருக்கிறான் என்பதை அறிகிறோம்.
 இராமனின் வாக்குறுதி
குகன் வேண்டுகோளைக் கேட்ட இராமன், மிகவும் மன நெகிழ்ச்சியோடு சிரித்தான். “வீரனே ! நாங்கள் புண்ணிய நதிகளில் நீராடி, ஆங்காங்கு உள்ள புனிதமான முனிவரை வழிபாடு செய்து, வனவாசம் செய்ய வேண்டிய சில நாட்கள் முடிந்ததும் உன்னிடம் இனிதாக வந்து சேருவோம்” என்று குகனிடம் இராமன் கூறினான்.

.... ...... ...... வீரநின் னுழையாம்அப்
புண்ணிய நதிஆடிப் புனிதரை வழிபாடுஉற்று
எண்ணிய சிலநாளில் குறுகுதும் இனிதுஎன்றான்
(க.ப 58:2-4)
(நின்னுழை = நின் இருப்பிடம் ; புனிதர் = முனிவர்)
எளியவர் ஆயினும் அன்போடு இருந்தால், பெரியோர்கள் தம் நிலையில் இருந்து இறங்கி அன்பும் அருளும் செலுத்துவர் என்பது, இராமன் குகனிடம் கூறிய செய்தியால் உணர்த்தப்படுகிறது. பெரியோர்கள், அன்பிற்காக எதனையும் பொருட்படுத்த மாட்டார்கள் என்னும் கருத்தை இதன் வாயிலாக அறிய முடிகிறது.
 கங்கையைக் கடத்தல்
இராமனின் கருத்தை அறிந்துகொண்ட குகன், விரைவாகச் சென்று பெரிய படகு ஒன்றைக் கொண்டு வந்தான். தாமரை மலர்போலும் கண்களை உடைய இராமன் அங்கிருந்த முனிவர்களான அந்தணர்கள் அனைவரிடமும் விடை தருக என்று கூறிவிட்டு, அழகு திகழ் சீதையோடும் இலக்குவனோடும்
படகில் இனிதாக ஏறினான்.

தந்தனன் நெடுநாவாய் தாமரை நயனத்தான்
அந்தணர் தமைஎல்லாம் ‘அருளுதிர் விடை’என்னா
இந்துவின் நுதலாளாடு இளவலொடு இனிதுஏறா
(க.ப 59:2-4)
(நயனம் = கண்; இந்து = சந்திரன்)
இராமன் உண்மையான உயிர் போன்றவனான குகனை நோக்கிப்படகை விரைவாகச் செலுத்துக என்றான். உடனே படகு விரைவாகவும், இள அன்னம் நடப்பதைப் போல அழகாகவும் சென்றது. படகில் செல்லும் போது சீதையும் இராமனும் கங்கையின் புனித நீரை அள்ளி எடுத்து ஒருவர் மீது ஒருவர் வீசி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கரையில் நின்று கொண்டிருந்த முனிவர்கள் இராமனைப் பிரிந்த துயரத்தால் நெருப்பில் இட்ட மெழுகுபோல் ஆனார்கள்.

விடுநனி கடிதுஎன்றான் மெய்உயிர் அனையானும்
முடுகினன் ..................................... ..............................
இடர்உற மறையோரும் எரிஉறு மெழுகுஆனார்
(க.ப.60:2-4)
அன்புடையார்களைப் பிரிவது என்பது மிகவும் வருத்தம் தரக் கூடியதாகும்.
கங்கையின் மறுகரையை அடைந்த இராமன் குகனை நோக்கி, ‘சித்திர கூடத்திற்குச் செல்லும் வழியினைக் கூறுக’ என்று கேட்டான். இராமனிடம் கொண்ட பக்தியினால் தனது உயிரையும் கொடுக்கும் உள்ளன்பு உள்ளவனான குகன். இராமனின் திருவடிகளை வணங்கி, “உத்தமனே! அடிமைப்பட்ட நாய் போன்றவனாகிய நான் உங்களிடம் சொல்ல வேண்டியது ஒன்று உள்ளது" என்றான்.

சித்திர கூடத்தின் செல்நெறி பகர்என்ன
பத்தியின் உயிர்ஈயும் பரிவினன் அடிதாழா
உத்தம அடிநாயேன் ஓதுவது உளதுஎன்றான் 
(க.ப. 63: 2-4)
"நாய் போன்றவனாகிய நான் உங்களுடன் வரும் பேறு பெறுவேனானால், நேர் வழியையும், அதில் குறுக்கிடும் பல கிளை வழிகளையும் அறிய வல்லவனன் ஆகையால், தக்க வழியைக் காட்டுவேன். உண்பதற்கு இனிய நல்ல காய், கனி, தேன் முதலானவற்றைத் தேடிக் கொண்டு வந்து தருவேன். தாங்கள் விரும்பிய இடங்களில் தக்க குடில்கள் அமைத்துக் கொடுப்பேன். தங்களை விட்டு ஒரு நொடிப் பொழுதும் பிரிய மாட்டேன்" என்று குகன் கூறினான்.

நெறிஇடு நெறிவல்லேன் நேடினென் வழுவாமல்
நறியன கனிகாயும் நறவுஇவை தரவல்லேன்
உறைவிடம் அமைவிப்பேன் ஒருநொடி வரைஉம்மைப்
பிறிகிலென் உடன்ஏகப் பெறுகுவென்எனின் நாயேன்
(க.ப. 64)
(நேடு = தேடு; நறியன = நல்லன; நறவு = தேன்)
குகன், தன் பிரிவாற்றாமையை உணர்த்துவதை இதன் மூலம் அறியலாம்.
மேலும் குகன் தொடர்ந்து பேசினான், "தீய விலங்குகளின் வகைகள் யாவும் தங்களை நெருங்க விடாமல் சென்று அவற்றை அழித்து, தூயன ஆகிய மான், மயில் போன்றவை வாழும் காட்டிடத்தை ஆராய்ந்து கண்டுபிடித்துக் காட்டும் வல்லமை பெற்றுள்ளேன். நீங்கள் இடும் கட்டளைகளை நிறைவேற்றுவேன். விரும்பிய பொருளைத் தேடிக் கொண்டு கொடுப்பேன். இரவிலும் வழி அறிந்து நடப்பேன்" என்றான்.

தீயன அவையாவும் திசைசெல நூறி
தூயன உறைகானம் துருவினென் வரவல்லேன்
................. இருளினும் நெறிசெல்வேன் 
(க.ப. 65)
(நூறி = அழித்து; துருவி = ஊடுருவி)
"மற்போரில் சிறப்புப் பெற்ற தோள்களை உடையவனே! மலைப் பகுதி வழியே சென்றாலும் அங்குக் கிடைக்கும் கிழங்கு, தேன் முதலியன கொண்டு வந்து தருவேன். வெகு தொலைவில் கிடைக்கும் நீர் கிடைத்தாலும், எளிதில் உடனே கொணர்ந்து தருவேன். பல வகையான விற்களைப் பெற்றுள்ள நான் எதற்கும் அஞ்ச மாட்டேன். இராமனே! உன் மலர்போலும் திருவடியை ஒருபோதும் பிரிய மாட்டேன்" என்றும் குகன் கூறினான்.
 குகனைத் ‘தம்பி’ எனல்
குகன், இராமனை நோக்கி, “என் படைகள் யாவையும் கொண்டுவந்து காவல் காத்து நிற்பேன். என்னால் வெல்ல முடியாத பகைவர்கள் வந்தாலும், உங்களுக்குத் தீங்கு நேரும் முன் நான் இறந்து விடுவேன் என்று கூறினான். மேலும் சிறிது நேரங்கூடப் பிரியாமல் இருப்பேன்" என்றான்.
இராமன் உடனே, “நீ எனது உயிர் போன்றவன். என் தம்பி இலக்குவன் உனக்குத் தம்பி, அழகுடைய நெற்றியைப் பெற்ற சீதை, உனக்கு உறவினள், குளிர்ந்த கடலால் சூழப்பட்ட இந்நாடு முழுவதும் உன்னுடையது" என்றான். மேலும், “உன்னைக் கண்டு தோழமை கொள்வதற்கு முன் உடன் பிறந்தவர்களாக நால்வர் இருந்தோம். இப்போது உன்னோடு சேர்த்து, உடன் பிறந்தவர்கள் ஐவராகி விட்டோம்" என்றான். “இனி நீ உன் இருப்பிடம் சென்று அங்குள்ள மக்களைக் காக்க வேண்டும்" என்று கட்டளை இட்டான்.
அதனைக் குகன் மறுக்க முடியாமல் ஏற்றுச் செயல்பட்டான்.

முன்புஉளெம் ஒருநால்வேம் முடிவுளது எனஉன்னா
அன்புஉள இனிநாம்ஓர் ஐவர்கள் உளர்ஆனோம் 
(க.ப 69:3-4)
இப்பகுதி அன்பால், உடன்பிறப்பு விரிவடையும் தன்மையைப் புலப்படுத்துகிறது.
 குகன் விடைபெறல்
இராமனை விட்டுப் பிரிய மனமில்லாமல் மிகுந்த மன வருத்தத்துடன் விடைபெற்றுக் கொண்டான் குகன். பின்பு இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் மரங்கள் அடர்ந்த காட்டில் நெடுந்தூரம் செல்வதற்குரிய வழியிலே நடந்து சென்றார்கள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.